Sunday, March 10, 2013

வானில் தோன்றிய அதிசய ஒளி


வேற்றுக் கிரக மனிதர்கள், வேற்றுக் கிரக உயிரினங்கள் இருக்கின்றன, இல்லை என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, அவ்வகை வேற்றுக் கிரக மனிதர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுக்கள் மூலம் நமது பூமிக்கு வந்து செல்கின்றனர் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கின்றது. அதற்கேற்றவ்வாறு வானில் நள்ளிரவில் பறந்து சென்ற அதிசயப் பொருள்கள் பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதிசய ஒளி
            அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் பல மாகாணங்களில் பறக்கும் தட்டு போன்ற உருவமுடைய ஒன்றைப் பார்த்திருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். பத்திரிகைகளிலும் அதுபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஞ்ஞானிகளில் ஒரு சிலரோ அவை பறக்கும் தட்டுக்கள் இல்லை, செயலிழந்த விண்கலன்களாகவோ அல்லது ஏதேனும் எரி நட்சத்திரம் அல்லது விண்கற்களாக இருக்கும். அவை கீழ் நோக்கி வரும்போது பூமியின் ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்பட்டு அவ்வாறு தோற்றம் தரக்கூடும் என்று கூறுகின்றனர். அது பற்றிய ஆய்வுகள் “நாசா” வினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் சென்னை மைலாப்பூரில் கூட அது போன்ற ஒரு ’அதிசய ஒளி’ வானில் தோன்றியதாகத் தகவல் உண்டு.
            கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஜெருசலேமில் உள்ள ஒரு புனிதத் தலத்தை நோக்கி இது போன்ற ஒரு அதிசய ஒளி சுடர் விட்டுக் கொண்டே வந்தது. மேலே செல்வதும் கீழே வருவதுமாக இருந்த அது என்னவென்று யாராலும் கண்டறிய முடியவில்லை. அதை பறக்கும் தட்டு என்று ஒரு சிலரும், இல்லை, இல்லை தேவ தூதர் ஒளி வடிவில் வந்து தரிசித்துச் செல்கிறார் என்றும் மாறுபாடான கருத்துக்கள் நிலவின. அந்த ஒளியை வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment