Tuesday, May 27, 2014

தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு



பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.


சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.

கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமா ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.

தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.

லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.

மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.

சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.

இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.

பெரிய நந்தி: இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.

மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது

இராஜராஜசோழன் சமாதி

“தமிழக வரலாற்றில் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றில் பெருமையாக கருதப்படுபவர் மாமன்னன் இராஜராஜசோழன். கி.பி.985ல் முடிசூடி 1014-வரை பொற்கால ஆட்சி புரிந்த மாமன்னன் இராஜராஜசோழன் தனது வெற்றிகளாலும், இன்றும் உலகமே வியக்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் சிவன் கோவிலை கட்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளான்.

இப்பெரு மன்னனின் சமாதி, குடந்தை அருகே பட்டீஸ்வரம் அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் புதைந்திருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

இராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டி முடித்ததும், “சிவபாத சேகரன்” என்ற பட்டத்தையும் பெற்றான். ஆகவே, சிவபாத சேகரன் அதாவது இராஜராஜன் இறுதி காலத்தில் அமரரான இடம் என்பதை குறிக்கும் வகையில் இந்த ஊருக்கு “சிவபாத சேகர மங்கலம்” என்ற பெயர் இருந்திருக்கிறது.

மாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு மற்றொரு ஆதாரம் இங்குள்ள “பால்குளத்தி அம்மன்” கோயிலின் முன்புறம் உள்ள கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டில் சிவபாத சேகர மங்கலத்தில் (இன்றைய உடையாளூர்) சிவபாத சேகர தேவர் (இராஜராஜ சோழர்) திருமாளிகை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இதைத்தவிர, 1927-28ல், அரசாங்கம் வெளியிட்ட கல்வெட்டு ஆய்வறிக்கையில் (Annual Report of Epigraphy 1927-28) இந்த இடத்தை “சமாதி கோவில்” அல்லது “பள்ளிப்படை” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உடையாளூர் செல்வ காளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள வாழைத் தோப்பில் தான் சிறப்பு பெற்ற மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி புதைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமாதியின் மேல்புறமுள்ள பெரிய லிங்கமும் இந்த இடத்தில் புதைந்துள்ளது. . இதே இடத்தில் மாமன்னன் இராஜராஜ
சோழன் மணிமண்டபத்தையும் அமைத்து, அவரின் புகழ் உலகறியச் செய்ய வேண்டும்.


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.



இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.


மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.


யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.


திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.


எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.


வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.


எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.


மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.


கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.


விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.


இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.






தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் 1,000வது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று, பெருவுடையாருக்கு 20 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தஞ்சை பெரிய கோவில் 1,000வது ஆண்டு நிறைவு விழா, 22ம் தேதி முதல் ஐந்து நாள் நடக்கிறது. இதற்காக தஞ்சை பெரிய கோவிலில் தினமும் மாலை 5.30 மணி முதல், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 22ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இதன்படி, நேற்று காலை 7.30 மணிக்கு, பெரிய கோவில் வளாகத்தில் உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு, திருவேற்காடு அய்யப்ப சுவாமிகள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழாக்குழு தலைவர் செல்வம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாஜி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து 8 மணி முதல் 10 மணி வரை பெருவுடையார், பெரியநாயகி திருமேனிகளுக்கு விபூதி, தைலக்காப்பு, திரவியப்பொடி, மஞ்சள் பொடி, நெல்லி முல்லிப்பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், பன்னீர், ஏகதாரை, சகஸ்ரதாரை, சிங்கேதனதாரை, வலம்புரி சங்கு, கலசாபிஷேகம், கங்கை ஜலம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று, திருமுறைகளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, ஓதுவார்களின் திருமுறை பண், மங்கல இசையுடன் தஞ்சையின் ராஜ வீதிகளில் திருமுறை திருவீதியுலா நடக்கிறது. இந்த உலாவை இன்று காலை 8 மணிக்கு, அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை செயலர் சிவகுமார், ஆணையர் சம்பத் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை கோவிலில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு சிறப்பு பூ அலங்காரம் நடக்க உள்ளது.
தஞ்சை பெரிய கோவில் குறித்து மக்கள் அறியும் வகையில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய, "திருக்கோவில் நுட்பம்' என்ற நூல் வெளியிடப்படுகிறது.


சிவபாதசேகரனான ராஜராஜ சோழன், ஒப்பற்ற பெருங்கோவிலாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை எடுப்பித்து புகழ் பெற்றான். இக்கோவிலைத் தவிர, பல திருக்கோவில்களை அமைக்க இவன் பங்கு கொண்டதையும், சிறப்பு வழிபாட்டிற்காக தானம் அளித்ததை பற்றியும் ராஜராஜனின் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

திருவையாறு, திருவலஞ்சுழி, திருச்செங்காட்டாங்குடி, திருக்கடையூர், திருப்புகளூர், நாகப்பட்டினம், திருக்களர், திருக்காரவாசல், திருநெடுங்களம், திருமங்கலம், பிரம்மதேசம், எண்ணாயிரம், திருமுக்கூடல், சிவபுரம், அகரம், மரக்காணம், உலகாபுரம், திருமலை, மேல்பாடி போன்ற பல கோவில்களுக்கு ராஜராஜன் தானம் அளித்த செய்தியை அக்கோவில் கல்வெட்டுகள் அளிக்கும் குறிப்பினால் உணர முடிகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இங்குள்ள கீழையூர் வீரட்டானம் திருக்கோவிலில் கருவறைச் சுவரில் காணப்படும் முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு மிகவும் வரலாற்று சிறப்புடையது. சோழர் அதிகாரியாகத் திகழ்ந்த வீதி விடங்கன் கம்பன் என்பவன் அளித்த கொடையை கல்வெட்டு குறிக்கிறது. அதை கூறும் பொழுது ராஜராஜ சோழனின் தாயார் வானவன் மாதேவியார் பற்றிச் சொல்ல வேண்டும்.

மலையமான் குலத்தைச் சேர்ந்தவர். "ராஜராஜன் இந்திரசமானன் ராஜசர்வக்ஞன் என்னும் புலியை பயந்த பொன்மான்' என்று அவரை புகழ்ந்து பேசுகிறது. பாட்டு வடிவில் இக்கல்வெட்டு அமைந்திருப்பதால் இதை, "திருக்கோவிலூர் பாட்டு' எனக் கொள்ளலாம். ராஜராஜ சோழன் தனது பட்டத்தரசி தந்திசக்தி விடங்கியான லோகமாதேவி, திருவையாறு கோவிலில் கட்டிய, "லோகமாதேவீச்சுரம்' என்ற கோவிலுக்கு பல தானங்களை அளித்துள்ளான். திண்டிவனம் அருகே அமைந்துள்ள உலகாபுரம், லோகமாதேவிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கும் ராஜராஜன் தானம் அளித்துள்ளான். இக்கோவிலும் பட்டத்தரசியின் பெயராலே வழங்கப்படுகிறது.இதேபோன்று ராஜராஜனின் மற்றொரு தேவியான சோழ மகாதேவி தஞ்சை பெரிய கோவிலுக்கு, ஆடவல்லான், உமா பரமேசுவரியார், இடப வாகன தேவர், கணபதி ஆகிய திருமேனிகளை செய்து அளித்தும், அதற்குரிய நகைகளை செய்தளித்தும் புகழ் பெற்றாள்.

இத்தேவியின் பெயராலே திருச்சி, திருவெறும்பூர் அருகே, "சோழ மாதேவி' என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கைலாச நாதர் கோவிலின் மீது ராஜராஜ சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டு நந்தவனம் அமைக்கவும், இசைக் கலைஞர்களை கொண்டு ஐந்து வகையான இசைக் கருவிகளினால், "பஞ்ச மகாசப்தம்' என்ற இசை வழிபாட்டினை செய்ய தானம் அளித்துள்ளான்.கோவிலில் உமா பட்டாரகிக்கு அமுது படைக்கவும், இறைவனுக்கு, "மெய்க்காட்டு' என்ற வழிபாடு செய்யவும், அங்கிருந்த பெருமாள் கோவிலுக்கும் தானம் அளித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்பொழுது இக்கோவிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை போற்றிப் பராமரித்து வருகிறது.ராஜராஜன் பிறந்த நாளான, "ஐப்பசி சதய நாளை' எண்ணாயிரம் (விழுப்புரம் அருகில்), திருவையாறு, திருவெண்காடு, திருப்புகளூர், திருவிடந்தை, பாச்சூர் (கோபுரப்பட்டி), திருநந்திக்கரை போன்ற கோவில்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடைபெற தானம் அளிக்கப்பட்ட செய்தியை அறிகிறோம். தஞ்சை பெரிய கோவிலில் சதயத் திருவிழா 12 நாட்கள் நடைபெற்றதையும் அறிய முடிகிறது.

ராஜராஜன் தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகள் முழுவதையும் சீராக அளக்கச் செய்தான். இப்பணி ராஜராஜ மாராயன் என்பவன் தலைமையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளில் இப்பணி முடிவடைந்தது. இதனால் ராஜராஜன், "உலகளந்தான்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்கினான். இதுபோன்று திருக்கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாப்பதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினான். அரியலூர் அருகே உள்ள திருமழபாடி கோவிலில் ராஜராஜ சோழனின் 28வது ஆட்சி ஆண்டில் கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. சுவரில் இருந்த கல்வெட்டுகளை ஏட்டில் எழுதிக் கொண்டனர். பின்பு மீண்டும் அவைகள் விமானத்தில் பொறிக்கப்பட்டன என்ற செய்தியை அறிய முடிகிறது.ராஜராஜன் காலத்தில் பல திருக்கோவில்களில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

கோவில் வழிபாடு, கணக்குகள் ஆகியவை சரியாக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க, "ஸ்ரீகார்யம் ஆராய்கின்ற' என்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அதை ஆய்வு செய்து, மேலும் பொருள் வேண்டியிருப்பின் அதையும் அளித்து கல்வெட்டாகப் பொறித்தனர்.திருக்கோவில்களை ராஜராஜன் எவ்வாறு போற்றி, வழிபாட்டினை தொடர்ந்து நடைபெற வழிவகை செய்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.மாமல்லபுரம் அருகே உள்ள மரக்காணம் பூமீசுவரர் கோவிலுக்கு, "ராஜராஜ பேரளம்' எனப்படும் உப்பளத்திலிருந்து வரும் வருவாயினைப் பெற உரிய ஆணையிட்டுள்ளான். இன்றும் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்கள் அதிகம் உள்ளன.சோழர் வரலாற்றில் முதன் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பெருமை உடைய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஆவான்.

ராஜராஜனின் பாண்டிய நாட்டு வெற்றி, புகழ் பெற்ற காந்தளூர் சாலை வெற்றிக்கு முன்னர் கிடைத்த வெற்றியாகும். பாண்டிய நாட்டை வென்றதின் அடையாளமாக, "பாண்டிய குலாசனி' எனச் சிறப்பாக அழைத்து கொண்டான்.எனினும், பகைமை பாராட்டாமல் பாண்டிய நாட்டு அரச மகளிரை மணந்து கொண்டான். இப்பகுதியில் ஆட்சி செய்ய அனுப்பப்பட்டவர்கள், "சோழ, பாண்டியர்கள்' என அழைக்கப்பட்டனர். பாண்டிய மண்டலமானது ராஜராஜ மண்டலம், ராஜராஜ வளநாடு எனப் பெயர் மாற்றம் அடைந்தது.பேராற்றல் நிறைந்த படைப் பிரிவுகளை சேர்ந்த படை வீரர்கள் பாண்டிய நாட்டில் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இப்பிரிவுக்கு, "மூன்று கைமாசேனை' என்பது பெயர். இவர்கள் ராஜராஜ சோழன் பாண்டிய நாட்டில் ஏற்படுத்திய வளமிக்க சதுர்வேதி மங்கலங்களையும் சமயச் சிறப்பு உடைய கோவில்களையும் காத்து நின்றதையும், அறப்பணிகளையும் செய்து பாண்டிய நாட்டு மக்கள் மனதில் இடம் பிடித்து ராஜராஜனின் நிர்வாகத்திற்கு துணை புரிந்தனர்.இத்தகைய, "மூன்று கைமாசேனை' படைப் பிரிவு இருந்த இடமாக அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீசுவரம் திருக்கோவில் விளங்குகிறது.கலையழகு மிக்க சிற்பங்களுடன், கலைப் பெட்டகமாக பசுமையான வயல்களுக்கு நடுவே கடனா ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டிய நாட்டில் எடுக்கப் பெற்ற சோழ மன்னர்களின் கலை படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இக்கோவில் அமைந்துள்ள பகுதி, "முள்ளிநாட்டு ராஜராஜ வளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' எனக் குறிப்பிடப்படுகிறது. இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் சிற்பக் களஞ்சியமாக திகழ்கிறது. பாண்டிய நாட்டு கோவில்களில் தேவகோட்டங்கள் இருக்காது. அதே முறையில் இங்கும் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இருதளம் உடைய விமானத்தில் சிவபெருமானின் கங்காதரர், ரிஷபாந்திகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், அர்த்தநாரீசுவரர், திரிபுராந்தகர், காலாந்திகர், லிங்கோத்பவர், கங்காளமூர்த்தி, கல்யாணசுந்தரர், கஜசம்கார மூர்த்தி போன்ற பல சிற்ப வடிவங்களை காணலாம். மரத்தில் செய்து வைத்தது போல நுண்ணிய வேலைப்பாடுடன் இக்கோவில் காணப்படுகிறது.

இக்கோவிலில் காணப்படும் வட்டெழுத்தில் உள்ள ராஜராஜன் கல்வெட்டால் இக்கோவில் ராஜராஜனின் அரிய கலைப்படைப்பு என அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையில் சீரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், பாண்டிய நாட்டில் திருநெல்வேலி, கங்கைகொண்டான், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், ஆத்தூர் போன்ற கோவில்களில் ராஜராஜன் செய்த தானங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெற்ற தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜ சோழனின் திருக்கோவில் தொண்டினை நிறைவுறுத்துவது போல தமிழகத்தில் உள்ள பல திருக்கோவில்கள் இன்றும் அவனது புகழை பறைசாற்றுகின்றன என்றால் மிகையில்லை!

சிறப்புமிக்க தஞ்சைத்தரணி: சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்யப்பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். பெருகிவரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையானகுறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டில்இடம் பெற்று உள்ளது. தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுவதற்குமுன் "தஞ்சை தளிக்குளத்தார்கோயில்' இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே இவ்வூர் "தஞ்சாவூர்' என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.


ராஜராஜனின் கலைக்கோயில்: உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும்வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்துகி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்துவந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ்இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம்பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில்ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றி யிருந்தாலும், ஆட்சி தொடர்ந்துநடந்தது. கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான்.இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜ சோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதே விக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.


பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரம்: காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்டகயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை ""கச்சிப்பேட்டுப்பெரியதளி'' என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சி பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தஞ்சா வூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப்பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

பிரம்மாண்டமான சிவலிங்கம்: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடிசுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில்தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாகஇரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகமஅடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள்நடைபெற்று வருகின்றன.

பெரிய லிங்கப் பிரதிஷ்டையின் போது ஏற்பட்ட பெரும் சிக்கல்: தஞ்சை பெரியகோயில்கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தைநிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களைஅழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்குகேட்டது. உடனே மன்னர், "கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது,' எனகேட்டார். போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், ""எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். போகர், "நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதைஉலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன்,'' என்றார். மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும்சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும்கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.

உயரமான கோபுரம்: பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப்போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு ""கேரளாந்தகன் வாயில் கோபுரம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம்கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச்சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டைஉள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கேரளாந்தகன் வாயில் கோபுரத்தில்காணப்படும் சுதைச் சிற்பங்களில் சோழர்காலச் சிற்பங்கள் சில உள்ளன. மற்ற சிற்பங்கள் பிற்காலநாயக்கர், மராட்டியர் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. இதில் மகாசதாசிவமூர்த்தி என்னும்சிற்பம் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்து தலைகள் பத்து கைகள் கொண்ட மூர்த்தியாக பத்மாசனத்தில்அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் இவர், சிவாம்சம் கொண்டவர். இச்சிற்பம் சோழர் கால சிற்பத்திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

முதல் தங்ககோபுரம்: தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச் செய்திகள்தெரிவிக்கின்றன. 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர்தக்கயாகப்பரணியில் குறிப் பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படிராஜராஜன் பொன் மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தைகுலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்று உள்ளது. பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும்சூறையாடப்பட்டு விட்டது.

22 கிலோ தங்க வைர நகைகள்: தஞ்சை பெரிய கோயிலுக்கு 183 கிலோ தங்கப்பாத்திரங்கள், 22 கிலோதங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், 65 செப்புத் திருமேனிகள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலம் நெல் விளையக்கூடிய 44 கிராமங்கள், கோயிலின் 158 திருவிளக்குகள் நாள்தோறும்எரியும் வகையில் தினசரி 158 உழக்கு நெய் வழங்கும் வகையில் நான்காயிரம் பசுக்கள், நான்காயிரம்ஆடுகள் ஆகியவற்றை கொடையாக ராஜராஜசோழனும் மற்றவர்களும் வழங்கியுள்ளதாகக்கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.



ராஜராஜனை வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாகஅலுவலராக இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில் "ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி ஆகியோருக்கு செப்புப்படிமங்கள்செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும்அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக் கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன்திருநீறு மடல் வைத்து வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில்இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில்வைக்கப்பட்டுள்ளது.
செப்புத்தகடு கொடிமரம்: நந்திமண்டபம் அருகில் மேற்குப் புறத்தில் செப்புத்தகட்டால் மூடப்பட்டகொடிமரம் உள்ளது. இம்மண்டபம் சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இது நாயக்கர்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்த கொடிமரத்தூணுக்கு கொறடு(ஒட்டுத்திண்ணை என்னும் பிடிமானம்) ஒன்றைப் புதிதாக அமைத்துள்ளார். அத்து டன் நந்திமண்டபத்தின் கிழக்கே ஒரு செங்கல் மேடை அமைத்து, அதில் சித்திரைத் திருவிழாவின் 9ம் நாள், "சரபேந்திர பூபால குறவஞ்சி' என்னும் நாடகம் நடக்கச் செய்துள்ளார். அதன் எதிரில் வட்டமானமேடை அமைத்து, அதில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்துள்ளார்.
மிக உயரமான மதிற்சுவர்: கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில்ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டுவெண்ணாட்டு அமன் குடியான கேரளாந்தகச்சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும்மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச்சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.
மிகப்பெரிய சண்டிகேஸ்வரர்: புகழ்மிக்க இப் பெரிய கோயிலில் எல்லாமே பெரியவை என்ற வகையில் விமானத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர் சன்னதியும் மிகப்பெரிதாக உள்ளது. இந்த சன்னதியின் வெளிச்சுவர்களிலும், தூண்களிலும் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
லிங்க வடிவில் நவக்கிரகங்கள்: பெரிய கோயிலின் மேல்புற வடபகுதியில் லிங்கவடிவில் நவக்கிரங்கள் உள்ளன. இவற்றை அடுத்து 108 லிங்கங்களும், அடுத்து வரிசையாக லிங்கங்களும் மன்னர் இரண்டாம் சரபோஜியால் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 252 லிங்கங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தின் தென்பகுதியில் "பரிவார ஆலயத்து கணபதியார்' சன்னதி உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு ராஜராஜனும், மற்ற மன்னர்களும் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.
தங்க மலர்: ராஜராஜ சோழன் வழிபாடு செய்துவந்த செப்புத் திருமேனிக்கு "தெட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார்' என்று பெயர். மேலை சாளுக்கிய மன்னர்களை வென்றபோது இந்த ஆடவல்லாரின் திருப்பாதத்தில் தங்கத்தாலான மலர்களை இட்டு பூஜை செய்து தன் நன்றியை தெரிவித்தான்.ராஜராஜன் உருவாக்கிய நந்தி எது?: நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.
25 டன் எடையுள்ள நந்தி: தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லோர் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
சித்திரக்கூடம்: தஞ்சாவூர் கோயில் கருவறையை அடுத்துள்ள உட்பிகாரத்தில் 13 சித்திரக்கூட பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிக்கு அந்தராளம் என்று பெயர். இந்த ஓவியங்களின் மூலம் சோழர் கால மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, ஆடை ஆபரணங்கள், இசைக் கருவிகள், நாட்டியமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
தேவியருடன் ராஜராஜன்: பெரியகோயிலின் ஒன்பதாவது ஓவிய அறைப்பகுதியின் மேற்கு நோக்கிய சுவரில் சோழர்கால பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிறப்பானவை. ராஜராஜன் காலத்திய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு நுழைவாயில்கள், முதலாம் பராந்த கனால் பொன்வேயப்பட்ட மண்டபத்தின் நடுவில் சிவனின் ஆனந்த தாண்டவம், காலருகில் ஒரு புறம் காளி, மறுபுறம் காரைக்கால் அம்மையார் காட்சியளிக்கின்றனர். இந்த தொகுப்பிற்கு இடப்புறம் எளிய அடியவரைப் போல மாமன்னன் ராஜராஜன் மீசை, தாடி யுடன், கூப்பிய கரங்களுடன் நடராஜரை வணங்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அருகில் மாமன்னனின் தேவியரில் மூவர் மட்டும் நின்ற கோலத்தில் உள்ளனர். அருகில் மெய்க் காவலர்கள் நிற்கின்றனர்.
ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்: ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள்மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.
மாமன்னனின் மாபெரும் குடும்பம்: ராஜராஜனுக்கு 10 மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் இருந்தனர். வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே பிள்ளையே புகழ்மிக்க ராஜேந்திரச் சோழன். இவனுக்கு ராஜராஜனால் இட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை. ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினை வாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன்மூலம் அவருடைய பாசபந்தமும், நன்றியும் தெரிகிறது.
ராஜராஜ சோழனின் புனைப்பெயர்கள்: அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், ரணமுக பீமன், ரவிகுல மாணிக்கம், ரவி வம்ச சிகாமணி, ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜராஜன், ராஜாச்ரையன், ராஜகேசரி வர்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜவிநோதன், ராஜேந்திர சிம்மன், உத்தம சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், க்ஷத்திரிய சிகாமணி. கல்வெட்டுகளில் இருந்து இந்தப் பெயர்களை அறிய முடிகிறது.
திருப்புகள் பாடிய அருணகிரியார்: தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் முருகப் பெருமானுக்கு தனிசன்னதி கட்டவில்லை. அவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் ராஜராஜன் கட்டிய பெரியகோயிலைக் காணும் ஆவலில் வந்திருக்கிறார். தனிசன்னதி இல்லாததால் கோபுரத்தில் இருக்கும் முருகனையே ""தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே'' என்று பாடியுள்ளார். பிற்காலத்தில் முருகப்பெருமானுக்கு பெரியஅளவில் நாயக்க மன்னர்கள் சன்னதி அமைத்துள்ளனர்.
ராஜராஜன் திருவாயில்: கேரளாந்தகன் வாயிலை அடுத்து அமைந்துள்ளது ராஜராஜன் திருவாயில். இக்கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்த வாயிலின் இருபுறத்திலும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன துவாரபாலகர் சிலைகளும், 40 அடி உயரமுள்ள இரண்டு ஒற்றைக்கல் நிலைக்கால்களும் அமைந்துள்ளன. துவாரபாலக சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் சிவபுராணக்கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திரிபுர தகனம், சண்டீசர் கதை, மார்க்கண்டேயன் வரலாறு, சிவபார்வதி திருமணம், வள்ளி திருமணம், அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளல், மன்மதன் தகனம், கண்ணப்பர் வரலாறு ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. கோபுர நுழைவுவாயிலின் இருபக்கங்களிலும் சிறிய விநாயகர் சன்னதிகளும், கோபுரத்தின் உட்புறம் தென்திசையில் நாகராஜர் சன்னதியும், வடதிசையில் இந்திரன் சன்னதியும் உள்ளன. திருச்சுற்று மாளிகை தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி 2ம் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரமச்சோழன் திருவாயில்: அர்த்த மண்டபத்தின் தெற்கு நுழைவு வாயில் ராஜேந்திரசோழனின் இயற்பெயரால் விக்கிரமச் சோழன் திருவாயில் என வழங்கப்படுகிறது. இவ்வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. வாயிலின் கிழக்கு புறத்தில் கஜலெட்சுமியும், மேற்கு புறத்தில் சூரிய மற்றும் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி சிற்பங்களும் உள்ளன. இவ்வாயில் படிக்கட்டுகளின் வெளிப்புறங்களில் திருமால், துர்க்கை, திரிபுர அசுரர்களை வதம் செய்தல், சிவ பார்வதி திருமணம் ஆகிய புராணக் காட்சிகள் அழகிய படைப்பு சிற்பங்களாக உள்ளன.
கோயிலை கட்டியவர் யார்?: கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ""ராஜராஜீச்சரம்'' என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப்படி ராஜராஜேச்சரம் என்பது சரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர்.

Saturday, May 17, 2014

திகைக்க வைக்கும் திருவோடு மரம்!



வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் கைகளில் கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பார்கள்.

இந்து மத துறவிகள் உடுப்புக்கு அடுத்து கொடுக்கும் முக்கியத்துவம் திருவோட்டுக்கே. சரி... இந்த திருவோடு எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது? எந்த நாட்டைச் சேர்ந்தது என்று தெரியுமா? அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

இந்த மரம் ‘மெக்ஸிகன் காலாபேஷ்’ என்று அழைக்கப்படுகிறது. ‘பிக்கோனியசேஸி’ என்ற வாகை மலர் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து தெற்கில் உள்ள கோஸ்டா ரிக்கா வரையுள்ள பகுதிகள்.

இந்தியாவைச் சேர்ந்த தாவரவியலாளர் ஸ்ரீகாந்த் இங்கல்ஹலிகர், மலர்களின் பல்வகை பெருக்கத்திற்காக ‘மெக்ஸிகன் காலாபேஷ்' மரத்தை வளர்க்க ஆரம்பித்தார். புனேவில் உள்ள 'ஆந்த்' என்னுமிடத்தில் இப்போது அது மரமாக வளர்ந்து நிற்கிறது.அத்துடன் பல்வேறு மடங்களிலும் இதனை வளர்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இந்த மரத்தின் அறிமுகம் பற்றி பேசிய இங்கல்ஹலிகார், "முக்தா கிர்லோஸ்கர் என்பவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்தார். பிறகு அங்கிருந்து இடம் மாற்றப்பட்டு 500 வகையான தாவர இனங்களோடு சேர்த்து புனேவில் உள்ள தோட்டத்தில் வளர்க்கப்பட்டது.

பூக்கள்

இதுவொரு சிறிய மரம். 8 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இந்த மரம் பெரிய மலர்களை தண்டு மற்றும்கிளைகளுக்கு அடிப்பகுதியில் கொண்டது. மாலை நேரத்தில் பூக்கள் பூத்து, நறுமணத்தை வீசும் தன்மை கொண்டது. இந்த வாசனைக்கு சிறிய வகை வௌவால்கள் வந்து, இந்த மலர்களிலிருந்து தேன் எடுத்து பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகிறது.

மலரின் அமைப்பு, அளவு, நிறம், மணம், பூக்கும் நேரம் மற்றும் தேனை உமிழும் தன்மை ஆகியவற்றால் வௌவால்களை கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மை இந்த பூக்களுக்கு உண்டு. அதிக நறுமணமுள்ள தேனை பூக்களிலிருந்து உமிழ்வதால், வெளவால்களின் கோடை கால தாகத்தை தீர்க்கும் தன்மை இம்மரத்தின் பூக்களுக்கு உண்டு.

ஓடு

கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு கூட மிகக்கடினமாக இருக்கும். இதன் சுற்றளவு 7-10 செ.மீ. நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களை போன்று தோற்றமுடையது. இந்த பழம் தன்னையே பாதுகாத்து கொள்ளும் குணாதிசயத்தை கொண்டது. இருந்தாலும் மற்ற பழங்களை போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது. பழத்திற்குள் இருக்கும் விதைகளை (சி-அலாட்டா) குதிரையாலோ அல்லது மனிதர்கள் எவராலுமோ சாதாரணமாக பிரித்தெடுத்துவிட முடியாது. யானையை போன்ற விலங்குகளை வைத்து முயற்சி செய்யலாம்.

விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போடும்போது இது வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட பரந்து வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட குணாதிசயத்தோடும் இருந்து வருகின்றன.

மரத்திலிருந்து விழும் இந்த பழங்கள் இருக்கும் இடத்திலிருந்தே முளைக்கும் திறனை இழந்ததால், ஓரிடத்திலிருந்து இன்னொரு பரவுவதும் அரிதாகி போனது. உள்ளூர் குதிரைகள் தன்னுடைய கால் பாதங்களால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்று இதை கவனித்தவர்கள் சொல்கின்றனர். உள்ளூர் குதிரைகளால் இந்த மர இனம் காக்கப்பட்டு நாம் பார்க்கக்கூடிய அளவில் இருந்து வருகிறது.

விதைகள்

இந்த மரம் ஒன்றும் அரிதான ஒன்று அல்ல. பல திறந்தவெளி இடங்கள், புல்வெளிகள், ஆடு, மாடுகள் மேயும் இடங்களில் பார்த்திருக்கலாம். இதன் காய் மற்றும் பழங்கள் உடைக்கப்பட்டு உணவு, பானங்கள் அடைக்கும் பொருள்களில் மூடியாக பயன்படுத்தப்படுகிறது.

பழத்தின் கெட்டியான ஓடுகள் பிச்சைக்காரர்கள் பயன்படுத்தும் பாத்திரமாகவும் இருந்து வருகிறது. அதனாலேயே இந்த மரம் ‘திருவோடு மரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் விதைகளில் காணப்படும் புரதச் சத்தோடு இணைந்த லிக்கோரைஸ், இனிப்புச் சுவை வாய்ந்தது; சாப்பிடுவதற்கு ஏற்றது. ஹோண்டுராஸ், எல்சல்வடார் மற்றும் நிகாரகுவா போன்ற லத்தீன்-அமெரிக்கா நாடுகளில் ‘செமிலா டெ ஜிகாரோ’ என்ற பெயரில் உணவுபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொற்கோயில் ரணகளமான சோகக் கதை...



பஞ்சாப் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு முதலில் சீக்கியர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முகலாயர்கள் படையெடுப்பின் காரணமாக இந்து மதத்தின் மீது நேர்ந்த தாக்கங்களின் ஒரு விளைவு சீக்கிய மதம். 'இந்து என்று யாரும் இல்லை. முஸ்லிம் என்று யாருமில்லை. கடவுள் ஒருவரே’ என்று சொல்லி சீக்கிய மதத்தைத் துவக்கி வைத்தார் குருநானக். முகலாயர்கள் ஆட்சியில் நிறைய துன்புறுத்தப்பட்டது இந்து மதம். ஒளரங்கசீப் செய்த அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஏற்பட்ட இந்த மதத்தை, போர்க்குணம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைத்தார் பத்தாவது குரு கோவிந்த்சிங், அவருடைய நெருக்கமான ஐந்து சீடர்களை அழைத்தார். இரும்புப் பாத்திரத்தில் சர்க்கரைத் தண்ணீர் எடுத்து கத்தியால் ஒரு கலக்குக் கலக்கி, அவர்கள் தலையில் தெளித்தார். அந்தத் தண்ணீரை (அமிர்தம்) குடிக்கச் சொன்னார். அவர்கள் புனிதமடைந்தார்கள். இனிமேல் அவர்கள் பெயர்கள் 'சிங்’ (சிங்கம்) என்று முடியும். அவர்கள் தலையையோ, முகத்தையோ மழிக்க மாட்டார்கள். தலையில் ஒரு இரும்புச் சீப்பைச் சொருகிக் கொள்வார்கள். கையில் ஒரு இரும்பு வளை அணிவார்கள், இடுப்பில் எப்போதும் ஒரு சிறு கத்தி வைத்திருக்க வேண்டும்.

இது குரு கோவிந்த்சிங் இட்ட கட்டளை, எத்தனை கூட்டத்திலும் சீக்கியர்கள் தனித்துத் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவர் விதித்த அடையாளங்கள் இவை.

இந்த 'அடையாளத்திற்காக’த்தான் (Identity) சீக்கியர்கள் முதலில் போராட ஆரம்பித்தார்கள். நம்முடைய அரசியல் சட்டம் சீக்கியர்களைத் தனி மதமாகவே கண்டு கொள்ளவில்லை. இன்று வரைக்கும், 'இந்துத் திருமணச் சட்டம்’ தான் அவர்களுக்கும். 'இந்து சொத்து உரிமைச் சட்டம்’தான் அவர்களுக்கும்.



சீக்கியர்களையும் இந்துக்களாகவே கணக்கில் எடுத்துக் கொண்டதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. முஸ்லிம் லீக்கின் கோரிக்கைக்கு ஏற்ப பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பது என்று தீர்மானம் ஆன சமயத்தில், சீக்கியர்கள் கர்தார் சிங் என்பவர் தலைமையில் 'சீக்கிஸ்தான்’ வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எழுப்பினார்கள். மவுண்ட்பேட்டன் தனது நாட்குறிப்பில் (மே ஐந்தாம் தேதி 1947) எழுதுகிறார்; 'சீக்கியர்கள், இந்துஸ்தானத்தோடு இருக்க வேண்டுமா அல்லது பாகிஸ்தானோடு இருக்க வேண்டுமா என்பதில் நான் தன்னிச்சையாக அவசரப்பட்டு முடிவு எடுத்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்வதற்காக ஒரு பிரதிநிதிக் குழு இன்று என்னைச் சந்தித்தது’.

இந்த அபாயத்தை தவிர்க்கவேண்டும் என்பதற்காக படேலும் நேருவும் இந்திய அரசியல் சட்டத்தில் இந்துக்கள் கணக்கிலேயே சீக்கியர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.

இதற்கு முன்பாகவே ஆரிய சமாஜம், சீக்கியர்களைத் 'தாய் மதத்திற்கு’ அழைத்துச் செல்வதற்காக ஓர் இயக்கத்தைத் துவக்கியது. இதற்குப் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது. 'ஹம் ஹிந்து நஹி ஹை’ (நாம் இந்துக்கள் அல்ல) என்பது அந்த நேரத்தில் சீக்கியர்களிடையே பரபரப்பாக விற்கப்பட்ட புத்தகம். இதுவே பின்னால் கோஷமாயிற்று.

இப்படித் தங்களைத் தனி மதமாக அங்கீகரிக்காமல், இந்துக்களோடு இணைக்க முயற்சி நடந்ததில் சீக்கியர்களுக்கு வெகு கோபம். இந்த வெறுப்பை ஆதாரமாக வைத்து அரசியல் நடத்த வந்த கட்சிதான் அகாலிதளம்.

பெரும்பான்மையான சீக்கியர்கள் இருக்கிற மாநிலமாக பஞ்சாப் மாறினால்தான் தாங்கள் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்துகொண்ட அகாலிதனம் 'பஞ்சாபி சுபா’ என்ற கோரிக்கையை எழுப்பியது. பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியப் பகுதிகளை ஒரு மாநிலமாகவும், இந்துப் பகுதிகளைத் தனியாக ஹரியானா என்று மற்றொரு மாநிலமாகவும் பிரிக்க வேண்டும் என்பது கோரிக்கையின் சாரம்.

கடைசியில் பலத்த எதிர்ப்பிற்கு இடையே பஞ்சாபி சுபா ஏற்படுத்தப்பட்டது. அகாலிதளத்திற்கு வெற்றி. இதற்காகச் சிந்தப்பட்ட ரத்தத்தையும், செய்யப்பட்ட தியாகத்தையும் காண்பித்து அகாலிதளம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.

மாநிலம் பிரிந்ததோடு பிரச்னை முடிந்து விடவில்லை. 'தலைநகர் எது?’ என்கிற பிரச்னை எழுந்தது. முதலில் லாகூர் பஞ்சாபின் தலைநகராக இருந்தது. அது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அதற்குப் பதிலாக சண்டிகர் என்னும் புது நகர் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிந்த பின்னர், ஹரியானா, 'சண்டிகரை எனக்குக் கொடு’ என்று கேட்டது.

'எனக்குத்தான்’ என்று பஞ்சாப் சொன்னது. 'ஆந்திரா - தமிழ்நாடு பிரிந்தபோது, சென்னை தமிழ்நாட்டிடம்தானே கொடுக்கப்பட்டது; மகாராஷ்டிரா - குஜராத் பிரிந்தபோது, பம்பாய் மகாராஷ்டிராவிடம்தானே தரப்பட்டது; புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம்தானே புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்?’ என்பது அகாலிகளின் கேள்வி! இரண்டு பேருக்குமே வேண்டாம் என்று மத்திய அரசு சண்டிகரை யூனியன் பிரதேசமாகத் தன் வசம் வைத்துக் கொண்டு இருக்கிறது. இதிலும் அகாலிகள் மனக் காயம் பட்டிருக்கிறார்கள். இவை தவிர, தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள். நதி நீர்ப் பங்கீடு தாவாக்கள். வாரணாசிக்கும் ஹரித்வாருக்கும் 'புனித நகரம்’ என்று தனி அந்தஸ்தை அளித்திருக்கும் மத்திய அரசு, அமிர்தசரஸுக்கு அதை அளிக்கவில்லை. பாகிஸ்தான் உள்பட எந்த எந்த வெளிநாட்டுக்காரர்களையெல்லாமோ ஏஷியன் கேம்ஸ் போது அனுமதித்தவர்கள் எங்களை டெல்லிக்குள்ளேயே நுழைய விடவில்லை... என்றெல்லாம் சின்னச் சின்னதாக நிறைய மனக் குறைகள்.

அகாலிதளத்திற்கு உள்ளே வேறு சில பிரச்னைகள். அவர்கள் நினைத்த மாதிரி, மாநிலம் பிரிந்தவுடன் சுலபமாகப் பதவிக்கு வர முடியவில்லை. மாநிலம் பிரிந்ததைத் தொடர்ந்து கட்சிப் பிளவுப்பட்டது. தி.மு.க. - அ.தி.மு.க. என்று பிரிந்ததைப் போல, ஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் ஜாதி. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சீக்கியர்கள், ஜாட் அல்லாத சீக்கியர்கள் என்று இரண்டு பிரிவுகள் அகாலிகளுக்குள் இயங்கி வருகின்றன. ஜாட் அல்லாத சீக்கியர்கள், காங்கிரஸின் ஆதரவாளர்கள்.

சீக்கியர்களிடையே அகாலிகள், நிரங்காரிகள் என்று முக்கிய பிரிவுகள் உண்டு. நிரங்காரிகள் ரொம்ப 'மடி’ என்று தங்களைச் சொல்லிக் கொள்வார்கள். நிரங்காரிகள் வெள்ளைத் தலைப்பாகை அணிகிறார்கள் (அகாலிகள் நீலம், அல்லது மஞ்சள்). நிரங்காரிகள் கிட்டத்தட்ட இந்து மதத்தினரைப் போன்ற நடவடிக்கைகள் கொண்டவர்கள். சீக்கியர்களின் மொழியான குருமுகிக்குப் பதிலாக சமஸ்கிருதம், இந்தி பேசுகிறவர்கள். இந்துக்களும் வாழ்கிற பஞ்சாபில் இவர்கள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெறத் துவங்கினார்கள். இது அகாலிகளுக்குத் தலைவேதனையாகியது. 'மதத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்புகள்’ என்று அவர்களை ஒழித்துக் கட்டத் தொடங்கினார்கள்.

அகாலிகளுக்கு இன்னொரு பிரச்னை முளைத்தது. பசுமைப் புரட்சி ஏற்படுத்திய செழுமை, அயல்நாட்டில் குடியேறியது - இவை அவர்கள் வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்தின. நாகரிகம் காரணமாகப் பலர் தலைப்பாகை அணிவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டார்கள். இளைஞர்கள் பகிரங்கமாகப் புகை பிடிக்கத் துவங்கினார்கள். (புகை பிடிக்ககூடாது. மது அருந்தக்கூடாது. மாமிசம் தின்றலாகாது. முஸ்லிம் பெண்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்பது குரு கோவிந்தர் விதித்த கட்டளை) இந்த அத்துமீறல்களைச் செய்தவர்கள் அகாலிதளத்தின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதற்கு நெருக்கமானவர்கள். ஒரு பக்கம் இவர்களை அனுமதித்துக் கொண்டு, இன்னொரு பக்கம் 'கோடாலிக் காம்புகளுடன் போராடுவது’ என்கிற இரட்டை நிலை அகாலிதளத்தின் நாணயத்தைச் சந்தேகத்திற்கிடமாக்கியது.

இந்த அத்துமீறலைக் கவனித்துக் கொண்டு வந்த முதியவர்கள் - மெல்ல மெல்ல தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தனர். மதத்தைக் காப்பாற்றுகிற விஷயத்தில் அகாலிதளம் என்ற அரசியல் கட்சியை முழுக்க நம்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டது. மதத்தைக் 'காப்பாற்ற’ தீவிரமாகப் போராடுகிற சாமியார்களைத் தலைவர்களாக ஏற்க சீக்கியர்களில் ஒரு பகுதியினர் தலைப்பட்டார்கள். பிந்தரன்வாலே ஆதரவு பெறத்துவங்கியது இந்தக் காரணத்தால்தான்.

பிந்தரன்வாலேயைச் சுலபமாகச் சீக்கிய கோமேனி என்று சொல்லலாம். பிந்தர் என்கிற சிறு கிராமத்தில் மத போதகராக வாழ்க்கையைத் துவக்கியவர் அவர் (அதனால்தான் பிந்தரன்வாலே) இயற்பெயர் - ஜர்னைல்சிங். மதப் பிரசாரம் செய்கிறவர் என்பதால், மத நூல்களை ஆழ்ந்து கற்றவர். நிரங்காரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டவர். 1978-ல் அகாலிதளம் ஆட்சியில் இருந்தது. அப்போது 'வைசாகி தினம்’ என்ற புது வருட நாளன்று, அமிர்தசரஸில், நிரங்காரிகளுக்கும் அகாலிகளுக்கும் மோதல் நிகழ்ந்தது. நகரில் நடந்து கொண்டிருந்த நிரங்காரிகளின் கூட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பிந்தரன்வாலே கோரினார். அகாலிதள அரசு தயங்கியது. தானே 'எதிரிகள்’ மீது படையெடுத்தார். இவருடைய ஆட்களுக்கு நிறைய காயம். ஆனால், இவருக்குக் கிடைத்த புகழ் பெரிய லாபம். பொற்கோயில், முன்பு பரம்பரை டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ஒரு கமிட்டியால் நிர்வகிக்கப்படுகிறது (சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி) இந்த கமிட்டியின் உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 1980-ல் நடந்த தேர்தலில், 140 இடங்களில் 136 இடங்களை அகாலிதளம் கைப்பற்றியது. மற்ற நான்கில் ஒரு இடத்தைப் பிந்தரன்வாலே பிடித்தார். அவர் அகாலிதள உறுப்பினர் அல்ல. ஆனாலும், ஜைல்சிங், சஞ்சய் காந்தி உதவியுடன் இந்த இடத்தைப் பிடித்தார். அகாலிதளத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அவர்கள் நிறுத்திய வேட்பாளர்களில் வெற்றி பெற்றவர் இவர் ஒருவர் மட்டும்தான்!

ஆனால், இந்த ஒருவர் படுத்தியபாடு... இவர் அகாலிதளத்தின் தலைவர்கள் கண்ணில் கையை விட்டு ஆட்டிய கதைகள் ஏராளம். அட்வால் என்ற டி.ஐ.ஜி பொற்கோயில் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அகாலிதளத் தலைவர் லோங்கோவால் வருத்தம் தெரிவித்தபோது, அதை வெளிப்படையாகக் கண்டித்தார். 'காலிஸ்தான்’ என்று தனி தேசம் கோரும் பிரிவினைவாதிகளுக்குப் பொற்கோயிலில் அடைக்கலம் தர அகாலிதளம் மறுத்தபோது, ''சீக்கியனாகப் பிறந்த எவனுக்கும் பொற்கோயிலில் தங்க உரிமை உண்டு. இதைத் தடுக்க நீங்கள் யார்?'' - சண்டையிட்டார். பொற்கோயில் வளாகத்தில் கோயில் பகுதியான அகாலிதளத்திற்குள் யாரும் குடி போகக்கூடாது என்ற லோங்கோவாலின் எதிர்ப்பையும் மீறி ஆயுதங்களுடன் அங்கே தங்கியிருந்தார். கடைசி நாட்களில் அகாலிதளத்திற்குத் தன் ஆதரவை விலக்கிக் கொண்டதாக அறிவித்தார். அகாலித் தலைவர் லோங்கோவால் சாதாரணமாக, மத வழக்கப்படி ஒரு சிறு கத்தி (கிர்பான்) மட்டும் அணிந்திருப்பார். பிந்தரன்வாலே, எப்போதும் துப்பாக்கி ரவைகள் கொண்ட பெல்ட் அணிந்து, ரிவால்வார் வைத்திருப்பது வழக்கம்! தனியாக வெளியிடங்களுக்குச் செல்வது கிடையாது. எப்போதும் லைட் மெஷின் கன் வைத்திருக்கும் இளைஞர் படையின் பாதுகாப்புடன் தான் செல்வது வழக்கம். லோங்கோவால் கோஷ்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிந்தரன்வாலேயை ''கோழை!'' என்று பகிரங்கமாகவே சாடியது உண்டு. பேச்சு வார்த்தைகள் மூலம் முடிந்திருக்கக் கூடிய பிரச்னைகளைப் பூதாகரமாக ஆக்கியதில் இவரது 'பங்கு’ கணிசமானது.

பிரச்னைகளை வளர்த்ததில் இந்திரா காந்திக்கும் முக்கிய பங்கு உண்டு. அகாலிகளைத் தனி மதமாக அங்கீகரிப்பது, சண்டிகரைப் பஞ்சாபிற்குக் கொடுப்பது போன்ற நியாயமான சிறு விஷயங்களில் முதலிலேயே விட்டுக் கொடுத்து, பிரச்னையின் வேகத்தை மட்டுப் படுத்தி இருக்கலாம். இது அகாலிதளத்தைப் பலப்படுத்திவிடும் என்கிற அரசியல் காரணத்திற்காகப் பிடிவாதமாக இருந்தார் அவர். நதி நீர்ப் பங்கீடு காரணமாக, எமர்ஜென்ஸியின்போது, உருவாக்கப்பட்ட ஏற்பாட்டை அகாலிதளம் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் விசாரித்துத் தீர்ப்புச் சொன்னால் அதற்குக் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டிருந்தார்கள். அதன் பேரில் ஜனதா அரசு அந்த ஏற்பாட்டை சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பியிருந்தது. 1980-ல் மறுபடி பதவிக்கு வந்ததும் இதை விலக்கிக் கொண்டு விட்டார் இந்திராகாந்தி.

அண்மைக் காலத்தில் கட்டுக்கடங்காமல் போய்விட்ட அகாலி தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்க இந்திரா காந்தி எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் 'துணிச்சலான’ ஒன்றுதான். இந்த விஷயத்தில் நாடெங்கும் அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆனால், சீக்கியர்கள் மனத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நடவடிக்கை.

ராணுவம் நுழைந்த நிகழ்ச்சி பெரிதும் பாதித்திருக்கிறது. இந்தப் புண் புரையோடி இன்னும் பத்து வருஷத்தில் பெரிதாக வெடிக்கக் கூடும்.

பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததன் விளைவுகள் நாளை என்னவாக இருக்கும்? காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு இந்தியனும் பஞ்சாபைக் கவலையோடும் கலக்கத்தோடும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...

    லோங்கோவால் தலைமையில் அகாலிக் குழு இந்திரா காந்தியைச் சந்திக்க வந்தபோது (அக்டோபர் 16, 1981) அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இந்திரா காந்தி. அகாலி குழு நுழைந்தவுடன் சுத்தமான பஞ்சாபியில், ''என்ன சாப்பிடுகிறீர்கள் சாமி?'' (சந்த்ஜி, துசி கி பியோகே) என்று கேட்டார். காபி, டீயில் இருந்து கரும்புச் சாறுவரை பதினோரு ஐட்டங்கள் பட்டியல் போடப்பட்டது. (பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்) அகாலிகளுடைய கோரிக்கைகள் மொத்தம் நாற்பத்தைந்து! அமிர்தசரஸிற்கு வரும் ரயிலுக்கு 'கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பது அதில் மிகச் சாதாரணமான கோரிக்கை. மாநிலத்திற்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்ற 'அனந்தப்பூர் தீர்மான’த்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.

'அனந்தப்பூர் தீர்மானம் என்பது என்ன?

1973-ல் அனந்தபூர் குருத்துவாராவில் அகாலிதளம் கூடி நிறைவேற்றிய தீர்மானம் அது. அதன்படி, 'பஞ்சாபி சுபா மூலம் சீக்கியர்களுக்குக் கிடைக்க வேண்டிய 'முழுதும்’ கிடைக்கவில்லை. அதனால் ராணுவம், கரன்சி நோட்டு அச்சடித்தல், செய்தித் தொடர்பு, ரயில் ஆகியவற்றை மட்டும் மத்திய அரசு வைத்துக் கொண்டு, மற்றவற்றை மாநிலத்திடம் 'ஒப்படைத்து’விட வேண்டும்.

இதைவிட ஒரு படி மேலே போய் 1982-ல் காலிஸ்தானைக் கேட்க ஆரம்பித்தார்கள் அகாலிகள். காலிஸ்தான் என்பது தனி நாடு. தனிக் கொடி.. சீக்கிய மதம் மட்டும். கிரந்த சாகிப்பில் சொல்லப்பட்டிருக்கும் சமத்துவம் அரசியல் கொள்கை. நடுநிலைமை வெளிநாட்டுக் கொள்கை. ''காலிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று தனிப்பட்ட பேட்டிகளில் லோங்கோவால் சொல்கிறார். ''தைரியம் இருந்தால் வெளியில் வந்து சொல்லட்டும்'' என்கின்றனர் தீவிரவாதிகள். ''நாங்கள் கேட்கவில்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம்'' என்றார் பிந்தரன்வாலே. அடைந்தால் காலிஸ்தான். இல்லையேல் சுடுகாடு’ என்கிற தீவிரவாதிகள், தனி பாஸ்போர்ட், ஸ்டாம்ப், 'அரசியல் சட்டம்’ இவற்றோடு இப்போதும் கனடாவில் இயங்கி வருகின்றனர்.

எச்சில் தட்டு கழுவிய மகாராஜா!

பொற்கோயில் வளாகம் என்பது மூன்று பகுதிகள் கொண்டது. நட்ட நடுவில் ஒரு பெரிய குளம். குளத்தின் நடுவில்தான் பொற்கோயில் அமைந்திருக்கிறது. இதன் பொற்கூரையை அமைத்துக் கொடுத்தவர் மகாராஜா ரஞ்சித்சிங். நடுவில் சில காலம் முஸ்லிம்கள் வசம் சிக்கியிருந்த கோயிலை மீட்டுக் கொடுத்தவரும் அவர்தான். கோயிலுக்குப் போகிற நுழைவாசலில் அற்புதமான பொன் வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கதவு இருக்கிறது. இது குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலைச் சேர்ந்தது. கஜினி முகமது கொள்ளையடித்துக் கொண்டு போன இக் கதவை ஆஃப்கானிஸ்தான் வரை போய் ரஞ்சித் சிங் மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால், சோமநாதர் கோயில் பூசாரிகளோ, கதவு தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லி தொடக்கூட மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்! பின் இந்தத் தங்கக் கதவைப் பொற்கோயிலில் பொருத்தினார் ரஞ்சித்சிங்.

பொற்கோயிலுக்கு நேர் பின்னே, குளத்தின் ஒரு கரையில் இருப்பது அகால் தக்த். இதுதான் சீக்கிய மதத்தின் தலைமைப் பீடம். அவர்களுடைய வேதப் புத்தகமான கிரந்த்த சாகிப் இதில்தான் ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. குரு கோவிந்த்சிங்கின் கத்திகள் இங்குதான் இருக்கின்றன. முகலாய மன்னர்கள் சீக்கியர்களைக் கொடுமைப்படுத்தியதைச் சித்திரிக்கும் கொடூரமான ஆயில் பெயிண்டிங்குகள் காலம் காலமாகக் காப்பாற்றப்பட்டு, ஒவ்வொரு தலைமுறைக்கும் போராட்ட உணர்வு ஊட்டப் பயன்படுத்தப்படுகின்றன.

அகால் தக்தின் அதிகாரங்கள் கடுமையானவை. இதன் கட்டளைகளை எந்தச் சீக்கியரும் மீற முடியாது. பொற்கோயிலைக் கட்டிக் கொடுத்த மகாராஜா ரஞ்சித்சிங்கேகூட இதற்குப் பணிந்து போக நேர்ந்தது. ஒரு முறை அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, பக்கத்தில் இருக்கும் இலவசச் சத்திரத்தில் எச்சல் தட்டு கழுவுவது. (பல நூற்றான்டுகள் கழித்து இதே தண்டனை, அகாலி தளத்தின் மற்றொரு பெரிய தலைவரான மாஸ்டர் தாராசிங்கிற்கு அளிக்கப்பட்டது)

கோயிலின் நேர் எதிரே, குளத்தின் மற்றொரு கரையில், குருநானக் நிவாஸ், குருராம்தாஸ் நிவாஸ் என்ற தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இதற்குப் பக்கத்தில் மூன்று மாடிகள் கொண்ட இலவசச் சத்திரம் இருக்கிறது. சாப்பாடு ஃப்ரீ. இதன் மூன்றாவது மாடியில்தான் பிந்தரன்வாலே தினமும் தனது 'மதப் பேருரைகளை’ நிகழ்த்துவது வழக்கம்.

பொற்கோயிலுக்குள் நுழைகிறவர்கள் எவரும் தங்கள் தலையைக் குறைந்தபட்சம் ஒரு கர்ச்சீப்பாவது கொண்டு மூடி இருக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட எதுவும் அணிந்திருக்கக்கூடாது (பெல்ட், காமிரா உரை போன்றவை). புகையிலைப் பொருட்கள் வைத்திருக்கக்கூடாது. ஆனால், உள்ளே எந்த மதத்தினரும் தாராளமாகப் போய் வரலாம்.

இதுவரை ராணுவமோ, போலீசோ பொற்கோயிலுக்குள் நுழைந்ததில்லை. 1966-ல் ஒரு முறை, பஞ்சாபி சுபா கிளர்ச்சியின் போது போலீஸ் நுழைய முயற்சித்தது. அப்போது கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு, அதன் பின் நுழைய முயற்சிகூட நடக்கவில்லை. எமர்ஜென்ஸியின் போது ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்திய கட்சி அகாலிதளம் ஒன்றுதான்! தி.மு.க., ஜனசங், ஆர். எஸ். எஸ். போன்ற எல்லா எதிர்க்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்ட அந்த நேரத்தில், அகாலிதளத்தை நெருங்க முடியவில்லை. காரணம் - அவர்கள் பொற்கோயிலுக்குள் தங்கி இருந்ததுதான். அகாலி தலைவர்கள் மட்டுமல்ல, இன்றைய பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர்கூட அப்போது அங்கே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு!

பொற்கோயில் தாக்குதல்...

தீவிரவாதிகளை அடக்க பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்யப்பட்ட பிறகு 'தாக்குதல்’ எப்படி நடத்த வேண்டும் என்று மிகுந்த கவனத்துடன் திட்டம் தீட்ட வேண்டியிருந்தது. அரைகுறைத் தாக்குதல் நாடு முழுவதும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலைதான் காரணம்.

ராணுவத்தை இயக்கும் பொறுப்பு ஆறு கமாண்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களில் இருவர் சீக்கியர்கள். தலைநகரிலிருந்து பிந்தரன்வாலே கோஷ்டியை நேரடியாகச் சமாளிக்க கொரில்லாச் சண்டையில் தேர்ச்சி பெற்ற 500 ராணுவ வீரர்கள் ஸ்பெஷலாக விமானத்தில் வந்து இறங்கினர். 'டாங்க்’ குகளும்.. மெஷின் 'கன்’கள் பொருத்தப்பட்ட ஜீப்புகளும் பொற்கோயிலை நோக்கி நகர ஆரம்பித்தன. 5,000 வீரர்கள் பொற்கோயில் வளாகத்தைச் சூழ்ந்து கொண்டனர். கோயிலுக்குள்ளேயிருந்து வெளியே தப்பிக்கும் வழிகளெல்லாம் அடைக்கப்பட்டன. இன்னொரு 5,000 பேர் அடங்கிய படை அமிர்தரஸில் ஊரடங்குச் சட்டத்தை கச்சிதமாக நிலை நாட்டியது. கோயிலுக்குள் தண்ணீர் சப்ளை, மின் சப்ளை எல்லாம் துண்டிக்கப்பட்டன. ராணுவ வீரர்கள் தயாரானார்கள்.



அதே நேரத்தில்...

கோயிலின் மணிக் கூண்டுகள் மீதும், 'வாட்டர் டாங்க்’குகள் மீதும் தீவிரவாதிகள் மெஷின் துப்பாக்கிகளுடன் நின்று தாக்குதலுக்குத் தயாரானார்கள். இதற்குள் டெல்லியிலிருந்து பிரதமர் 'புனித நூல்கள் வைக்கப்பட்டிருக்கும் ஹர்மந்திர் ஸாகிப் மீது ஒரு துப்பாக்கி ரவை கூடப் படக்கூடாது’ என்று ராணுவ தலைமையதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்தார். இந்தச் செய்தி ராணு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விடியற்காலை... இருள் அகலவில்லை. ஒலிபெருக்கிகள் மூலம் கமாண்டர்கள் 'தயவுசெய்து சரணடைந்து விடுங்கள். ரத்தம் சிந்த வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கிணங்கி வெள்ளைக் கொடிகளுடன் நூற்றுக்கணக்கான அகாலிகள் வெளியே வந்தார்கள். இவர்களில் லோங்கோவாலும் ஒருவர், பிந்தரன்வாலேயும், அவரைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் துப்பாக்கியை உயர்த்தி போருக்குத் தயாரானார்கள்.

(ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான ஜெனரல் கே. சுந்தர்ஜி 'எங்களுக்கு கோபமே வரவில்லை. மாறாக மிகுந்த வருத்தத்துடன்தான் கோயிலுக்குள் நுழைந்தோம். உள்ளே காலடி எடுத்து வைக்கும்போது எங்கள் உதடுகள் ஆண்டவன் பெயரைத்தான் முணுமுணுத்தன...'' என்று பிற்பாடு குறிப்பிட்டார்.) ஏரிக்கு நடுவில் பொற்கோயில் இருப்பதால் அங்கே செல்ல பாலம் போன்ற ஒரு நீண்ட வழி என்றுதான் உண்டு. கோயிலைச் சுற்றியுள்ள மாடங்களிலிருந்து தீவிரவாதிகளின் துப்பாக்கிகள் குறி பார்த்துக் கொண்டிருந்த நிலை. கீழேயோ ஒதுங்குவதற்கு இடமில்லை. உள்ளே நுழைந்த உடனேயே 15 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு இரையானார்கள். ''நிறைய வீரர்களை பலி கொடுக்க வேண்டியிருக்குமோ...?!’ என்று ராணுவத்தினரிடையே ஒரு லேசான தயக்கம்.

இதற்குள் ஒரு வீரர் தவழ்ந்தவாறு பாலத்தின் வழியாக நெருங்கி தீவிரவாதிகள் மீது பாய்ந்தார். பிந்தரன்வாலேயின் சகாக்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். அந்த இளம் வீரரின் உடல் முழுவதும் 'டைனமைட்’டுகளை வைத்துக் கயிற்றால் கட்டி பாலத்தின் வழியாகத் திருப்பி அனுப்பி விட்டு ஃப்யூஸை அழுத்த ராணுவ வீரர்களின் கண்ணெதிரே அவர் கைவேறு, தலை வேறாக சுக்கல் சுக்கலாகப் போனார்.

இந்தப் பயங்கரத்தைக் கண்டு திகைத்துப் போன ராணுவம் மறுவிநாடி முழு வேகத்தில் இயங்கியது. பிந்தரன்வாலே ஒளிந்திருந்த அகாலி தக்த் கட்டடத்தை ஏழு டாங்க்குகள் சூழ்ந்து கொண்டு தாக்கின. சில நிமிடங்களில் தீவிரவாதிகளில் எதிர்ப்பு பொடிப் பொடியானது.

அகாலி தக்த் கட்டத்துக்குள் கமாண்டர்கள் நுழைந்தனர். உள்ளே 'பேஸ்மெண்ட்’டில் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிந்தரன்வாலேயின் உடல் கிடைத்தது. அருகிலேயே அவரது வலதுகரமாக விளங்கிய அம்ரித் சிங்... காலில் ஒருகுண்டு.’ தலையில் ஒரு குண்டு... விழுந்து கிடந்தார். வெகு அருகிலிருந்து துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும். இருவரும் தற்கொலை உடன்படிக்கை செய்து கொண்டிருக்கலாம். அம்ரித் சிங், பிந்தரன்வாலேயைக் கொன்றுவிட்டு பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இதெல்லாம் ஒரு யூகம்தான்..!

சூரியன் லேசாகத் தலையைக் காட்ட, பொழுது புலரத் தொடங்கியது...

Tuesday, May 13, 2014

ரஜினி பற்றி ரஜினி!





'இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், 'என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த படங்களை முதல் நாளே பார்க்கத் தூண்டும் தமிழ் சினிமாவின் 'பாட்ஷா’ ரஜினிக்கு இப்போது வயசு 64. கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் ரஜினி குறிப்பிட்டவற்றின் தொகுப்பு இங்கே...
''சென்னை கிருஷ்ணவேணி தியேட்டர்ல 'அபூர்வ ராகங்கள்’ படத்தை முதன்முதலாப் பார்த்தேன். நான் நடிச்ச காட்சி வந்ததும் பக்கத்து சீட்டுல இருந்த குட்டிப்பொண்ணு, என்னைப் பார்த்துட்டே இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது என்கிட்ட ஓடிவந்து, சினிமா டிக்கெட் பின்னாடி ஆட்டோகிஃராப் கேட்டுச்சு. என் முதல் ரசிகை அந்தச் சிறுமிதான்; நான் போட்ட முதல் ஆட்டோகிஃராப் அதுதான்!''


  • ''எனக்கும் லதாவுக்கும் திருப்பதியில் கல்யாணம். பத்திரிகை நண்பர்கள் எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டு, 'யாரும் கல்யாணத்துக்கு வராதீங்க. கல்யாண போட்டோ உங்க ஆபீஸ் தேடி வரும்’னு சொன்னேன். 'மீறி நாங்க வந்தா என்ன செய்வீங்க?’னு ஒருத்தர் கேட்டார். 'உதைப்பேன்’னு சொன்னேன். இப்படிச் சொன்னதுக்காக பின்னாடி ரொம்ப வருத்தப் பட்டேன்!'' 
  • ''சினிமா நிகழ்ச்சிக்காக ஒருமுறை மதுரை போயிருந்தப்ப, மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே எல்லாரும் பேர், பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செஞ்சாங்க. கோயில் குருக்கள் என்கிட்ட, 'உங்க நட்சத்திரம் என்ன?’னு கேட்டப்ப, 'தெரியாது சாமி’னு சொன்னேன். பின்பு, ரசிகர்கள் எனக்கு 'சூப்பர் ஸ்டார்’னு ஒரு நட்சத்திரத்தைக் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசி வரை காப்பாத்தணும்னு முடிவெடுத்தேன்!''
  • ''நான் கஷ்டப்பட்டபோதும், வசதியா இருக்கும்போதும் என்மேல ஒரே மாதிரி அன்பு செலுத்துற ராஜ்பகதூர், ஆச்சர்யமான நண்பன். ஆஞ்சநேயர் பக்கத்துல இருந்தா ராமனுக்கு அசுர பலம் சேரும். அதுபோல எனக்கு ஆஞ்சநேயரா இருந்த நண்பன் காந்தி. அவன் இறந்தது பெரிய இழப்பு!'' 
  • ''சம்மர் வந்துட்டா, 'போன வருஷத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தி’னு எல்லாரும் புலம்புறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு வயசு ஜாஸ்தி ஆகிருச்சு. அதனால உடம்பு அந்த அனலைத் தாங்க முடியலைங்கிறதை மறந்துடு றாங்க! 
  • '' 'நான் யார்?’னு தெரிஞ்சுக்க எனக்குத் தனிமை தேவைப்படுது. அதனால இமயமலை போறேன். அது ரிஷிகள், முனிகள் தவம் செஞ்ச / செய்ற புண்ணிய பூமி. அங்கே 'நான் யார்?’னு என்னைச் சுலபமாக் கண்டுபிடிக்கிற வாய்ப்பு அதிகம். அதான் அடிக்கடி போறேன்!'' 
  • ''இந்தம்மா மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாத்த முடியாது!'' 
  • '' 'பாபா’ படப்பெட்டிகளை அபகரித்து தகராறு செய்த ஒரு கட்சியைக் கண்டிச்சு கண்ணியமா கறுப்புக்கொடி காட்டினார்கள் என் ரசிகர்கள். அவங்களை அந்தக் கட்சிக்காரங்க அடிச்சிருக்காங்க. நான் அவங்களைப் பார்த்துக் கேட்கிறேன், 'மதுரையில இருக்குற ரசிகர்களை அடிக்கிறீங்க. சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா... என எல்லா நாட்லயும் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவாங்க. அப்போ என்ன செய்வீங்க?’ '' 
 3D


இந்தப் படத்தை 3Dயில் காண... இங்கே க்ளிக் செய்யவும்


  • ''யானை, கீழே விழுந்தா... அதால சீக்கிரம் எந்திரிக்க முடியாது. ஆனா, குதிரை விழுந்தா டப்புனு எந்திரிச்சு முன்னைவிட வேகமா ஓடும். நான் குதிரை. சட்னு எந்திரிச்சு ஓடிக்கிட்டே இருப்பேன்!'' 
  • ''சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலை அழித்துக்காட்டிய முதல்வர் ஜெயலலிதாவை, 'பராசக்தியின் மறு உருவமாகப் பார்க்கிறேன்’!'' 
  • ''கமல்கூட 'அவர்கள்’ படம் நடிச்சேன். என் சீன் எடுத்து முடிச்சாச்சு. அடுத்து கமல் நடிக்கணும். அந்த கேப்ல ஷூட்டிங் ஸ்பாட்டைவிட்டு வெளியில கிளம்பினேன். அப்போ 'எங்கடா... சிகரெட் பிடிக்கக் கிளம்பிட்டியா? உள்ளே போடா... அங்கே கமல்னு ஒருத்தன் நடிச்சிட்டு இருக்கான். அவன் நடிக்கிறதைப் பார்த்துக் கத்துக்கோ’னு பாலசந்தர் சார் சொன்னார்!'' 
  • ''ஒரு தடவை ஃப்ளைட்ல அமிதாப் சாரைச் சந்திச்சேன். நான் போட்டிருந்த கறுப்பு கலர் டிரெஸைப் பார்த்தவர், 'ரஜினி... உனக்கு வெள்ளை கலர் டிரெஸ் நல்லா இருக்கும்’னு சொன்னார். அதுக்குப் பிறகு ஒயிட்டிரெஸ்தான் நிறைய அணியுறேன்!''
  • ''சிங்கப்பூர்ல ட்ரீட்மென்ட், மருந்து மாத்திரைகள் கொடுத்த டாக்டர்ஸ், 'நாங்க தர்ற மருந்துகள் நிறையப் பேர் உடம்பு ஏத்துக்காது. தவிர இவ்வளவு சீக்கிரம் யாருக்கும் க்யூர் ஆனதே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் குணமாகுது?’னு ஆச்சர்யமாக் கேட்டாங்க. 'நீங்க கொடுக்கிற மருந்து மாத்திரைகளைவிட என் ரசிகர்கள் பிரார்த்தனைக்கு பவர் அதிகம். அதுதான் என்னைக் காப்பாத்துச்சு’னு சொன்னேன்!'' 
  • '' 'எம்.எஸ்.வி-யைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி சோத்துக்கு வழி இல்லை; சந்திச்சப் பின் சோறு திங்க நேரம் இல்லை’னு வாலி சார் அடிக்கடி சொல்வார். அதுபோலதான், எனக்கு கே.பி-சார். எனக்குள்ளே இருக்கிற நடிகனை முதன்முதலாக் கண்டிபிடிச்சவர் அவர். அப்புறம்தான் உலகத்துக்குத் தெரிஞ்சேன். 'கேமிரா முன்னாடி நடி... பின்னாடி நடிக்காதே’னு அவர் சொன்னதை இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சிட்டு வர்றேன்!'' 
  • 'நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?’ என்ற கேள்வியை ரஜினியிடம் எப்போது கேட்டாலும், ''இல்லை. இப்பவும் போராடிட்டுத்தான் இருக்கேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடையப் போராடினேன். இப்போ அந்தப் புகழுக்குக் களங்கம் வராமக் காப்பாத்தப் போராடிட்டு இருக்கேன். அப்பவும், இப்பவும்... எப்பவும் நமக்குப் போராட்டம்தான்!'' என்பார்.

Sunday, May 11, 2014

வழிகாட்டும் சுவாமிஜி!



சுவாமி விவேகானந்தர் 150


சுவாமி கௌதமானந்தர் தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை.


ஆதி காலத்திலிருந்தே மனிதன் தனது வாழ்க்கையில் தனக்கான இலக்குகளை அடைவதற்காக இயற்கையை எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறான். மனிதனுடைய அந்த இலக்குகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று புற வாழ்க்கைக்கான இலக்கு; மற்றது அகம் சார்ந்த இலக்கு.


புறவாழ்க்கைக்கான இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு அமையும் போராட்டம் மற்றும் தேடலினால், அவனுடைய உலகாயத வாழ்க்கைக்கான தேவைகளை அவன் அடைய முடிகிறது. கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலான புறவாழ்க்கை சார்ந்த மனிதனின் இத்தகைய போராட்டங்களும் தேடல்களுமே, நாகரிகம் மற்றும் அறிவியல் சாதனை உள்ளிட்ட பல இலக்குகளை அவன் அடையச் செய்திருக்கிறது.


அகம் சார்ந்த மனிதனின் தேடலானது உணர்வுகள், சிந்தனை, புத்திக்கூர்மை, மனவெழுச்சி, மன உறுதி, ஒழுக்கம், தெய்விகத் தன்மை போன்றவற்றை அடைவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த அகம் சார்ந்த தேடலின் விளைவாக மனிதன் அடையக்கூடிய அம்சங்களின் ஒருங்கிணைந்த வடிவமே பண்பாடு - கலாசாரம் என்பதாகும்.




நாகரிகமா, கலாசாரமா... எது சிறந்தது?


ஒரு தேசத்தின் தனி மனித வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் இரண்டும் சிறப்பாக அமைய வேண்டுமானால், இந்த இரண்டு நிலைகளிலும் அவனுடைய தேடலானது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நாகரிகமானது மேலே தெரியும் செடி என்றால், பண்பாடானது அதன் ஆழத்தில் இருக்கும் - அந்தச் செடிக்கு உயிர்ச் சக்தி கொடுக்கும் வேர்களைப் போன்றது. பெரும்பாலான மனிதர்கள் நாகரிகம் என்பதையே பண்பாடு, கலாசாரம் என்று தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.

அதனாலேயேதான் சுவாமிஜி (சுவாமி விவேகானந்தர்), நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்குமான வேறுபாட்டைப் பற்றிக் குறிப் பிடுகையில், 'கலாசாரம் என்பதுதான் எத்தனை எதிர்ப்புகள் வந்தா லும் எதிர்த்து எக்காலத்திலும் நிலைபெற்றிருக்கக்கூடியதே தவிர, நாகரிகம் அல்ல!’ என்று திருத்தமாகக் கூறியிருக்கிறார்.


'கிரேக்கம், ரோம் போன்ற நாடுகள் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தன. எனினும், அந்த நாடுகள் பெர்ஷியா மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளிடம் தோல்வியையே சந்தித்தன. காரணம், நாகரிக வளர்ச்சியில் கிரேக்கம், ரோம் நாடுகளைவிட பெர்சியா, மங்கோலிய நாடுகள் பின்தங்கியிருந்தாலும், பண்பாடு மற்றும் கலாசாரத்தில் அவற்றைவிட சில படிகள் உயர்ந்திருந்ததே ஆகும்’ என்று சுவாமிஜி உதாரணமும் தந்திருக்கிறார்.


நம் தேசத்தின் உயிர்ச் சக்தி!இந்தியாவைப் பொறுத்தவரை, பல தாக்குதல்களை எதிர்கொண்ட நிலையிலும் இந்தத் தேசம் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம், இந்தியாவின் உயிர்ச் சக்தி ஆன்மிகத்திலும், ஆன்மிக அடிப்படையில் அமைந்த கலாசாரத்திலும் உறைந்திருப்பதே ஆகும். ஆன்மிகத்தை அடித்தள மாகக் கொண்ட அந்தக் கலாசார மானது வேதாந்த சமயத்தின் அடிப்படையில் தோன்றியதாகும்.







இந்தியாவின் வேதாந்த தத்துவமானது, ஒவ்வொரு மனிதனுக்குள் மட்டுமல்லாது, சகல ஜீவன்களிலும் தெய்விகத் தன்மை இருப்பதாக நம்புகிறது. வேதாந்த சமயம்தான் மற்ற அனைத்து சமயங்களையும் புறக்கணிக்காமல் அரவணைத்துச் செல்லக்கூடியதாகத் திகழ்கிறது. 'ஏகம் சத் விப்ர: பஹுதா வதந்தி’ - அதாவது 'பரம்பொருள் ஒன்றுதான்; ஆனால், ஞானிகள் அதைப் பல பெயர்களில் அழைக்கிறார்கள்’ என்கின்றன வேதங்கள். 'வேதாந்த சமயம் போதிக்கும் அன்பு, மனிதநேயம், உதவும் மனப்பான்மை போன்ற வற்றை உலக மக்கள் பெற்றிருந்தால், சமயம் சார்ந்த சச்சரவுகளுக்கு இடமில்லாமல் போவதுடன், உலக மக்களிடையே சகோதரத்துவம் நிலைத்திருக்கும்’ என்பதே சுவாமிஜியின் முதன்மையான உபதேசமாகும்.


உலகுக்கு இன்றைய தேவை...


வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி நிலையிலிருக்கும் நாடுகளில் உள்ள மக்களின் தற்போதைய அத்தியாவசியமான தேடல் எது என்பதை சுவாமிஜி அழகாகக் கூறுகிறார்... 'பரஸ்பர அன்பு, இரக்கம், இணைந்து செயல்படுதல் ஆகிய மூன்றும்தான் இன்றைய உலக மக்களின் தேவைகள். இவையே ஒரு நாட்டை அமைதியுடனும் செழிப்புடனும் இருக்க உதவுகின்றன.’


சுவாமிஜி கொண்டிருந்த ஒரே லட்சியம், உலகம் முழுவதும் வேதாந்தத்தை உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே! சுவாமிஜி வேதாந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம்தான் என்ன? வேதாந்த சமயம்தான் மிகுந்த விவேகம் கொண்டதாகவும், பிற சமயங்களின் தத்துவங் களுக்கும்கூட உண்மையான அடித்தளமாக அமைந்திருப்பதாகவும் திகழ்கிறது என்பதை சுவாமி விவேகானந்தர் பரிபூரணமாக உணர்ந்து அறிந்திருந்தார்.


வேதாந்தத்தின் அவசியம்


மனிதனின் பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஏற்படக்கூடிய சுகம், துக்கம், கஷ்டம், சோதனைகள் போன்றவற்றுக்கான காரணங்களைக் கூறுவ துடன், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம்தான் மனிதனுடைய ஆழ்துயரத்தை நீக்கி, பேரானந்தத்தை வழங்கும் வல்லமை உள்ளது. 'அத்யந்திகா துக்க நிவ்ருத்தி பரமானந்த அவாப்தி’ என்று வேதங்கள் கூறுகின்றன. வேதாந்தத்தின் குறிக்கோளே மனிதனின் அனைத்து ஆழ்துயரங்களில் இருந்தும் அவனுக்கு விடுதலை அளித்து, அவனை முடிவற்ற பரமானந்தத்தில் திளைக்கச் செய்வதுதான்.


சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் முக்கியமானது 'எழுமின் விழிமின்.’ சுவாமிஜியின் இந்த போதனைதான், மனிதனை அச்சம் என்பதே அறியாதவனாகவும், அளவற்ற ஞானத்தைப் பெற்றவனாகவும், பரமானந்தத்தில் திளைப்பவனாகவும் செய்யக் கூடியது. இதுதான் சுவாமிஜியின் முதன்மைக் குறிக்கோள். இதுபற்றி அவரே ஒருமுறை, 'இத்தகைய மனிதர்களை உருவாக்குவதே தமது லட்சியம்’ என்று கூறியிருக்கிறார்.




இந்திய கலாசாரத்தின் அடிப்படையான வேதாந்தத் தத்துவம், ரிக் வேத காலம் தொட்டுப் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருவதாகும். ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தையே என்றும், அவர்களை அன்புட னும், கருணையுடனும், இரக்கத்துடனும் நடத்தவேண்டும் என்றும் வேதாந்தம் கூறுவதால், வேதாந்த சமயத்தைக் கடைப் பிடிப்பவர்கள் சேவையையே தங்களின் லட்சியமாகக் கொள்ளவேண்டும் என்பதே சுவாமிஜியின் போதனை!


வேதாந்த சமயத்தின் உன்னத தூதர்


வேதாந்த சமயத்தின் உன்னதக் கோட்பாடு களை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்ற சுவாமிஜியின் லட்சியம் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பம், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டது. சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில், எந்த ஒரு அமைப்பினாலும் அங்கீகரிக்கப்படாமல் தன்னந்தனியராக இந்தியாவின் தூதராக, வேதாந்தத்தின் தூதராகப் பங்கேற்று, 1893 செப்டம்பர் 11-ம் நாள், வரவேற்புரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் நிகழ்த்திய உரையில் காணப்பட்ட அன்பும், சத்தியமும் வெளிநாட்டவரையும் வேதாந்தத்தை ஏற்றுக் கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் செய்தது.


'மதம் என்பது கடவுளை அடையக் கூடிய அனுபவபூர்வமான வழிமுறை; பரமானந்தத்தை அடைய வழிவகுப்பது. அதற்கு முதலில் தன்னையறிதலிலும், மற்றவர்க்குச் சேவை செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆத்மனோ மோக்ஷ£ர்த்தம் ஜகத் ஹிதாயச. இத்தகைய குறிக்கோள்தான் ஒரு மனிதனை தூய்மையான, பரிசுத்தமான, தெய்விகத்தன்மைக்கு இட்டுச் செல்லும். அன்பைப் போதிக்கும் சர்வ வியாபகமான வேதாந்த மதம் மனிதநேயத்தை வளர்ப்பதுடன், நிறவெறி, இனவெறி போன்றவற்றில் இருந்தும் மனித குலத்தைக் காப்பாற்றுகிறது.


உண்மையான சமயம் என்பது உணர்ந்து அறியக்கூடியதே தவிர, மூட நம்பிக்கைகளால் ஆனதல்ல. இன்றைய உலகத்தின் அவசியத் தேவை சமய நல்லிணக்கம் மட்டும்தான். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் மனிதநேயத்து டனும் சேவை மனப்பான்மையுடனும் நடந்துகொண்டால், அதுவே அவனைத் தூய்மையுள்ளவனாகவும், தெய்வி கத்தன்மை பெற்றவனாகவும் செய்கிறது...’


சுவாமிஜியின் அன்பும் கனிவும் நிறைந்த இந்த உரையானது, அந்த அரங்கத்தில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கவனத்தை ஈர்த்ததுடன், சுவாமிஜியை லோககுரு பீடத்திலும் ஆரோகணிக்கச் செய்தது. சுவாமிஜியின் போதனைகள் மேலை நாடுகளில் பெரும் மாற்றத்தை விளைவித்தன. சுவாமிஜியின் விஜயத்துக்குப் பிறகுதான், அதுவரை வேதாந்த சமயத்தை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாட்டினர், வேதாந்தத்தின் உண்மைகளையும், இன்றைய உலகிற்கு அதன் அவசியத் தேவை பற்றியும் உணர்ந்து கொண்டனர்.


இன்றைக்கு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் வேதாந்தத்தைக் கற்க ஆரம்பித்து விட்டனர் என்று ஓர் அமெரிக்கர் எடுத்துரைக் கிறார். அமெரிக்காவில் இன்று வேதாந்த புத்தகங்கள் அனைத்துக் கடைகளிலும் அதிகமாக விற்பனை ஆகின்றன.




'ஏழை மக்களுக்குச் செய்யும் உதவிகள், மகேஸ்வர பூஜைக்குச் சமமாகும்’ என்கிற சுவாமி விவேகானந்தரின் விலைமதிப்பற்ற வார்த்தைகளானது அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. சில வருடங்களுக்கு முன்பு, மொரீஷியஸ் நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே, 10,000 பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்டமான அரங்கத்துக்கு 'சுவாமி விவேகானந்தா அரங்கம்’ என்று பெயர். அதன் முகப்பில், சுவாமிஜியின் மார்பளவு திருவுருவத்தின் கீழ் 'தேசம், இனம், சமயம் போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல், ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் உதவி செய்வதே சர்வ வியாபகமான சமயம்’ என்ற வேதாந்தத் தத்துவத்தின் மையக் கருத்து பொறிக்கப் பட்டிருந்ததைக் கண்டேன்.


பில்கேட்ஸ் ஒருமுறை இந்தியா வந்திருந்த போது, சுவாமிஜியின் 'கர்ம யோகா’ என்ற புத்தகத்தைப் படித்ததாகவும், அதிலிருந்துதான் பணக்காரர்கள் ஏழைகளுக்குத் தன்னலமற்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியதுடன், அன்றுமுதல் தன் செல்வத்தில் கணிசமான பகுதியை மக்கள் நலப் பணிகளுக்கு ஒதுக்கி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


ஆம்! சுவாமிஜியின் கருத்துக்களும் விளக்கங்களும் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை அளிக்கவல்லன. நமது தேடலைத் தெளிவுபடுத்தி, லட்சியத்தைத் துல்லியமாக்கும் மந்திரச் சொற்கள் அவருடையவை. அதன் அட்சரங்கள் ஒவ்வொன்றையும் முறையாக உபயோகித்து, வாழ்க்கை வேள்வியில் வெற்றி பெறுவோம்!

விகடன் மேடை - கமல்ஹாசன் பதில்கள்









பொன்விழி, அன்னூர்.


''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?''


''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.


பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''





புதூர் பாலா, நாமக்கல்.


'' 'எந்திரன்’ படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா..?'' (ஹானஸ்ட்டாகப் பதில் கூறுபவராச்சே கமல்.)


''நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''பரமக்குடியில் பிறந்தீர்கள் அவ்வளவுதான். ஆனால் வளர்ந்தது, வாழ்வது சென்னையில். ஆனால், நீங்கள் ஒருபோதும் சென்னையைப்பற்றிக் குறிப்பிடுவது இல்லை. 'நான் இன்னும் பரமக்குடிக்காரன்தான்’ என்று அழுத்திச் சொல்கிறீர்கள். ஒரு சென்னைக்காரனாக மிகுந்த கோபத்தோடு இந்தக் கேள்வி?''


''நான் வாழ்ந்து அனுபவித்த எல்லா மண்ணிலும் என்னை ஊன்ற விரும்பாது, நாடோடிக்கொண்டு இருக்கும் கலைஞன் நான். நான் பரமக்குடிக்காரன் என்பதோடு, சென்னை வாழ் தெலுங்கு மலையாளி எனவும் கொள்ளலாம். To put it succinctly... INDIAN..''


மலைஅரசன், அருகந்தம்பூண்டி.


''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?''


''மனசாட்சி!''


பிரசன்னா, சேகரை.


''உங்களின் முதல் முத்த அனுபவம் எப்போது?''


''நான் என் குடும்பத்தில் கடைக்குட்டி. அதனால், நினைவு தெரிந்த நாள் முதல் முத்த மழைதான். முதலே நினைவில்லாத அளவுக்கு!''





ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''சமீபகாலமாக தமிழக முதல்வரை மேடைகளில் ஏகமாகப் புகழ்கிறீர்களே? கொச்சையாகச் சொன்னால், 'ரொம்ப ஜால்ரா’ அடிக்கிறீர்களே... ஏங்க?''


''அது சமீப கால நிகழ்வல்ல. குழந்தைப் பருவம் முதல் பழக்கம். அவர் முதலமைச்சர் ஆனதற்கு நான் மட்டும் பொறுப்பல்லவே. தவிர, சமீப கால மேடை ஒன்றில் கலைஞரின் பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகமாக வெளிவந்தபோது, பெரும் பத்திரிகைகளின் ஆசிரியர், உரிமையாளர் பலரும் என்னுடன் மேடையில் இருந்து பாராட்டினார்கள். சிலர் அதிகமாகவே பாராட்டினார்கள். நான் கலைஞரின் ரசிகனாக அவர் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்திருக்கிறேன். அதைக் கொச்சைப்படுத்துவது உங்கள் குணாதிசயம். நான் எதை அடித்தாலும் தாளம் தப்பாது!''


இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.


''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?''


''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.


இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.


''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''


''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''


பி.விஜயலட்சுமி, வேலூர்.


''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''


''சமரசம்!''


பி.எஸ்.ஜனார்தன், மதுரை.


''தமிழ் நடிகர்களில் மிகவும் துணிச்சலானவர் விஜயகாந்த்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''


''அதற்கென்ன? ஒப்புக்கொண்டால் போச்சு!''


சுகந்தி, சிவகங்கை.

''சமீபத்தில் பாதித்த புத்தகம்?''


''பல!


அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

''ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுத அவனுடைய அந்தரங்கத்தை அறிந்துகொள்ள ஏன் பத்திரிகைகள் (உலகமெங்கும்) ஆவல்கொள்கின்றன? அதைவிட, அவற்றைப் படிக்க வாசகன் ஏன் பெரிதும் ஆர்வம்கொள்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகனாக உங்களை மிகவும் பாதித்த... உங்களைப்பற்றிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?''


''அது திரைச் சீலையாக இருந்தாலும், வெறுஞ்சீலையாக இருந்தாலும் விலக்கிப் பார்க்கும் ஆதார குணம் உள்ளவர் அதிகம் இருப்பதும் ஒரு காரணம்.


ஒரு திருடன் பிடிபடும்போது, பிடிபடாத திருடன் பரிகசிப்பதுபோன்ற குணாதிசயமும் காரணம்.


நீங்கள் கேட்ட கேள்வியும் அந்தரங்கம் ஆராயும் ஒரு கேள்விதான். நானா நேரடி பதில் சொல்வேன்? இஸ்கு... இஸ்கு!''


முகமது அலி, மதுரை.


''திருமணத்துக்குப் பிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணைச் சந்திக்கிறோம் என்பது சரியா?''


''இந்த வம்புனாலதான், நான் இனி மணம் முடிப்பதாக இல்லை - போதுமா?''


எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''வறுமையின் நிறம் என்ன?''


'' 'பஞ்ச’வர்ணம்!''


கி.சித்ரா, மதுரை.


''ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில், உங்களை மட்டும் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்புபற்றி..?''


''அவள் இறந்தாலும் இறவா நட்பு!''


ந.வந்தியக்குமாரன், சென்னை-41.

'' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''


''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''




எம்.பாரதி, ஆழிவாய்க்கால்.

'' 'கலவி முடிந்த பின் கிடந்து பேசினாளாயின் காதலாய் மாறலாம் எச்சரிக்கை!’ - அனுபவம் பேசுகிறதா கமல்?''


''சும்மா கிடந்து அலையாதீங்க. அனுபவம் இல்லாமலா ரெண்டு பிள்ளைகளும்... காதலிகளும்?''


எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

''நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... இப்போது கலைஞர் குடும்பம் சினிமா வைத்தத்தெடுத்து இருப்பது ஆரோக்கியமான விஷயம்தானா?''


''யார் நெஞ்சைத் தொட்டு என்று முதலில் சொல்லுங்கள்!''


அனுசூயா, தூத்துக்குடி.

''உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?''


''காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!''





இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

''சமீப காலமாக நிறையப் புதிய இயக்குநர்கள், நல்ல கதை அம்சம் உள்ள அதே சமயம், வியாபாரரீதியாக நன்றாக வசூலாகக்கூடிய படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் படங்களில் நடிக்காமல், சீனியர் இயக்குநர்களின் படங்களிலேயே ஏன் நடிக்கிறீர்கள்?''


''நடிக்கவைக்கிறார்கள், வியாபாரம் தெரிந்தவர்கள். இன்னும் சில வருடங்கள் கடந்தால், எனக்கும் சீனியரான இயக்குநர்கள் கிடைப்பது கடினம் என்ற ஒரு காரணமும்கூட!''


பெ.பச்சையப்பன், கம்பம்.

''உங்களின் பேச்சு, கவிதை, திறமையை வெளிப்படுத்தும் விதம், எல்லாமே ஒரு முறைக்குப் பல முறை உன்னிப்பாகக் கவனித்தால்தான் புரிகிறது. இது உங்களுக்குத் தெரியுமா? ஏன், எதையுமே 'சட்’டென்று மற்றவர்கள் புரியும்படி செய்யக் கூடாதா சார்?''


''பல முறை கவனிக்கப்படுவதே வெற்றி தானே. உங்களுக்குப் புரியாமல் போனதற்கு வருந்துகிறேன். நன்றி, மீண்டு வருக!''


கே.ஜியாவுதின், நாகப்பட்டினம்.

''உங்களைக் கவர்ந்த பெண் யார்?''


''என் தாயில் துவங்கிப் பலர்!''


சி.ராணி, தஞ்சாவூர்.

''கட்டிப்பிடி வைத்தியத்தில் தங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை உண்டா? அது ரீலா... ரியலா?''


''ரீலைப் பொறுத்தவரை ரியல். பொது இடங் களில் ட்ரை பண்ணால்... வேலைக்கு ஆவாது!''


எம்.கே.ராஜ், திருப்பூர்.


'' 'லேட்-சைல்டு’ என்கிற வருத்தம் இப்பவும் தங்களிடம் இருக்கிறதா?''


'' 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கறதுனால... இல்ல!’ பஞ்ச் வசன உபயம்: நண்பர் ரஜினி!''


கே.அன்பு, சென்னை91.

'' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''


''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''


மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

'' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?''


''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''


என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.

''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''


''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''


வி.புபேஷ், கானாடுகாத்தான்.

''நீங்கள் ஏன் இன்னும் ரகசியக் கவிஞராகவே இருக்கிறீர்கள்? உங்கள் கவிதைத் தொகுப்பு எப்போது வரும்?''


''இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்!''


ஹரிநாராயணன், செம்மஞ்சேரி
.


''ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் உங்களை இமிடேட் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''


''நானே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுதானே. ஒரு கதை நினைவு வருகிறது. ஆர்வத்துடன் திரு.ராஜாஜியைப் படம் வரைந்த ஒரு சிறுவன், தான் அவரைத் தத்ரூபமாக வரைந்ததாய் நினைத்துக்கொண்டு, அதில் அவர் கையெழுத்து வாங்க முண்டியடித்து அவரிடம் நீட்ட. அதில் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டாராம் ராஜாஜி. 'இது உங்க கையெழுத்து இல்லையே’ என்ற சிறுவனிடம், 'படமும் என்னுதில்லயே’ என்றாராம் ராஜாஜி. சில சமயம் மிமிக்ரிக்களும் அப்படி ஆவது உண்டு.''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


'' 'மருதநாயகம்’ என்கிற மாமனிதரைச் சந்திக்கவே முடியாதா?''


''சினிமாவில் முடியும்!''


பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.


''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?''


''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''


'அலொபஸ்’ கணேசன், மந்தைவெளி.


''நீங்கள் கண்ட கனவு நிஜமானது உண்டா... அந்தக் கனவு என்ன?''


''நான் நடிகனானது, இயக்குநரானது, சினிமாவுக்குப் பாட்டு எழுதியது, திரைக்கதை எழுதியது, உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது எல்லாமே நான் கண்ட கனவுகளே!''


எம்.வினோதினி, கோயம்புத்தூர்.


''உங்களை எப்போதாவது ஸ்ருதியிடம் கண்டிருக்கிறீர்களா?''


''பலமுறை. என் மழலையை, என் கோபத்தை, என் அன்பை அவள் உருவில் பிம்பமாய்!''


இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.


''நீங்கள் நடிக்காத படங்களில் பிடித்த படம்... சந்திக்காத நபர்களில் பிடித்த நபர்... உங்களை இயக்காத இயக்குநர்களில் பிடிக்காதவர்..?''


''நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போன பல நூறு படங்களின் பட்டியல் கைவசம்.


சந்திக்காத நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு ரங்கா ராவும் அடக்கம்.


என்னை இயக்க மறந்த பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் அனைவரையும் பிடிக்காது!''





ச.வினோத், சென்னை84


''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?''


''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''


சா.கணேஷ், வேலூர்.


''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்கமானவர் யார்?''


''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''


கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.

''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?''


''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''


ந.வந்தியக்குமாரன், சென்னை41


''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? 12 வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''


'' 'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச் - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''


ஆர்.சுஜாதா, சென்னை.


''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''


''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''


எம்.பாஸ்கரன், மயிலாடுதுறை.


''நாகேஷ் தனது வாரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார் என்று ஒரு முறை நீங்கள் சொன்னதாக நினைவு. நீங்கள் இப்போது சொல்லுங்கள்... தமிழ்த் திரையுலகில் உங்கள் வாரிசு யார்?''


''நான் அப்படிச் சொல்லவில்லை. என் வாரிசுகளே என் கண்ணுக்குத் தெரியும் அவர்களையும் விஞ்சும் திறமையை உணர நேர்ந்தால் உடனே சொல்லிவிடுவேன்!''





எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


''உண்மையைச் சொல்லுங்க கமல் சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?''


('தெரியலப்பா’னு சொல்லக் கூடாது!)


''எல்லோரையும் மாதிரி ரெண்டும்தான்!''


ஆர்,ஜேஸ்மின் ரமேஷ், மதுரை.


''முதல் துரோகம் ஞாபகத்தில் உள்ளதா... என்ன என்று பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''பகிர்ந்துகொள்ள முடியாத பல துரோகங்கள் உள்ளன. பகிர்வதாக இல்லை!''


எம்.மோகன், வேலூர்-2.


''உங்களால் மறக்க முடியாத ரசிகர் யார்?''


''திருமதி ராஜலட்சுமி, திரு சீனிவாசன். இருவரும் தம்பதியினர். என் தாய், தந்தையரும்கூட!''


அ.யாழினி பர்வதம், சென்னை-78.


''அந்த மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை சுஜாதா உங்களிடமாவது சொன்னாரா?''


''சொன்னாரே... ஆனா, யார்கிட்டேயும் சொல்லாதேனு சத்தியம் வாங்கிட்டுப் போயிட்டார்!''


ஆர்.ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர்.


''சுஜாதா இருந்திருந்தால்...''


''இன்னும் நிறையக் கதைகளும் கதைப்பதும் தொடர்ந்திருக்கும்!''


ந.சின்னசாமி, அன்னதானபட்டி.


''சப்பாணிக்கும் ராஜ மன்னாருக்கும் உள்ள உறவு?''


''இரண்டு பேருமே என் தூரத்து உறவுகள்!''


எஸ்.பி.சுப்பராகவன், திருப்பூர்.


'' 'என்னைப்போல் ஒருவன்’ என்று யாரையாவது நினைத்திருக்கிறீர்களா?''


''எஸ்.பி.சுப்பு உள்பட எல்லோரையும்!''


''நீங்கள் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களைச் சிறந்த நடிகராக நீங்கள் உணர்ந்த தருணம் எது?''


''இன்னும் உணரவில்லை. நான் வெறும் வதந்திகளை நம்புவது இல்லை!''


ஜி.சிவக்குமார், பழனி.


''சுயசரிதை எழுதும் எண்ணம் உண்டா?''


''இல்லை. பிறர் சரிதைதான் சந்தோஷம்!''


சா.பிரேமா, செங்கல்பட்டு.


''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?''


''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''


எம்.சங்கர், செய்யாறு.



''அடுத்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை தரும் நபர்களைக் குறிப்பிடவும்?''


''என் பெயர் உட்பட, யாருக்கும் அடித்து ஆரூடம் சொல்ல முடியாத தொழில் இது. எங்களில் யாரெல்லாம் விபத்து, வியாதி இல்லாமல் உயிர்த்து இருக்கிறார்களோ, 'அனைவரும் முயல்வோம்... சிலர் வெல்வோம்’. survival of the fittest!


சு.அருளாளன், ஆரணி.


''உங்கள் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தை நினைத்தால், அடக்க முடியாத சிரிப்பு வரும்?''


''பத்துப் பதினைந்து நிகழ்வுகள் இருக்கின்றன. நான் நடிகனானது உட்பட!''


கே.பாபு, சென்னை-75.


''தமிழ் சினிமா அடுத்த பரிணாமத்துக்குச் சென்றுவிட்டதாகக் கருதுகிறீர்களா? ஏனென்றால், இன்னும் ஐந்து பாட்டு, குத்துப் பாட்டு, ஹீரோ - ஹீரோயின் டூயட் டிரெண்ட் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆங்கிலப் படத்தைப் பார்த்தால் 90 நிமிடங்கள்தான். ஏன் இன்னும் நாம் அந்த அளவுக்கு முயற்சிக்கவில்லை. 'உலக நாயகன்’ படங்களிலும் குத்துப் பாட்டு, தேவையற்ற சண்டைக் காட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன?''


''இல்லை. விரிவான பதில் உங்கள் கேள்விக்குள் அடக்கம்!''


க.ராஜன், தஞ்சாவூர்.


''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?''


''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''


ஆ.சசிக்குமார், உடுமலைப்பேட்டை.


''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''


'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''


ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.


''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?''


''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''


ச.சிவா, வந்தவாசி.


''புது வருடத்தில் இருந்து ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டும் என்றால், எந்தப் பழக்கத்தை விட்டுக்கொடுப்பீர்கள்?''


''கேள்விக்குப் பதில் அளிப்பதை. கேட்பது நானாக இருக்கும்பட்சத்தில், என் அறிவும் வளரும் அல்லவா?''


சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.


''தொண்டன், பக்தன், ரசிகன் யார் முதல் ஏமாளி?''


''ரசிகன் ஏமாறத் தேவை இல்லை... ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வரை!''


என்.ரகு, காஞ்சிபுரம்.


''தமிழ்ப் பட உலகத்தைப் பிடித்து ஆட்டுகிற நோய் என்ன... அதைப் போக்குவது எப்படி?''


''ரசனைக் குறைவுதான். அதைப் போக்குகிறேன் பேர்வழி என்று ரசிகர்களையே தொலைத்துவிடக் கூடாதே என்ற பயமும் உண்டு. பயம்கூட ஒரு வகை நோய்தான்!''


சி.ரவி, அரக்கோணம்.


''கமல் - ஸ்ரீதேவி, கமல் - ஸ்ரீபிரியா, கமல் - த்ரிஷா... ஜோடிப் பொருத்தம் ஒப்பிடுக?''


''காலம் தந்த கோலம் இது. ஒப்பிடல் சரியாகாது. எனக்கு மூவரும் வேண்டியவர்கள்!''


பி.கமல் செல்லப்பா, திருநெல்வேலி.


''உங்களுடைய இயக்கத்தில் வேறு ஒருவர் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவீர்கள்? யாரை இயக்க விருப்பம்?''


''வேறு நடிகர்கள் பலரும் நடிக்க... இயக்கி உள்ளேன். இன்னும் பலரை இயக்கவும் விருப்பம். கதைக்குத்தான் நடிகர் என்ற நிலை வர விருப்பம்!''


கே.ஆதி, சென்னை-74.


''சினிமாவால் நீங்கள் பெற்றது என்ன... இழந்தது என்ன?''


''பெற்றது உம்மை. இழந்தது (கொஞ்சம்) என்னை.''


எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.


'' 'மன்மதன் அம்பு’ படத்தில் நீங்கள் எழுதிய, 'கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்’ பாடலுக்கு 'தெய்வ நிந்தனைப் பாடல்’ என எதிர்ப்புக் கிளம்பி உள்ளதே?''


''அவர்களுக்கு நிந்தனை புரியாததால் ஏற்பட்ட குழப்பமே. இதைவிட நிந்தனைகள் நிறைந்த வரிகள் வந்துள்ளன. இனியும் வரும். அது நான் எழுதிய வரிகளாக இருக்காது, பாருங்களேன்!''


சி.சரஸ்வதி, திண்டிவனம்.


'' 'சர்ச்சை’க்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?''


''சர்ச்சைதான்!''


கே.ராமஜெயம், சென்னை24


'' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமல்ஹாசா!’ என்று எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா?''


''அப்படி நினைப்பதற்குள் அடுத்த ஆசை வந்துவிடுவதால்...''


என்.ராகவன், கோயம்புத்தூர்.

''கற்பு பற்றி உங்கள் கருத்து என்ன?''


''கடவுள் பற்றிய கருத்து போலதான்!''


ஸ்ரீதர்ஸ்ரீனிவாசன், கோயம்புத்தூர்.

'' 'சத்தியாகிரகம் என்ற ஆயுதம் மூலம், காந்தி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார்’ என்கிறேன் நான். உங்கள் கருத்து...''


''அவர் நாட்டிய நிலையை அகற்றும் உரிமை உள்ளபோது... சர்வம் ஏது? அதிகாரம் ஏது? அவர் செத்துட்டாரு. விடுங்க, சுட்டுக்கிட்டே இருக்காதீங்க!''


வே.கல்பனா, அரவக்குறிச்சி.



'' 'மய்யம்’ என்ற பெயரில் நீங்கள் நடத்தி வந்த இதழ் பாதியில் நின்று, பிறகு மீண்டும் ஆன்லைனில் வருவதாகச் செய்தி வந்தது. 'மய்யம்’ மீண்டும் வருமா?''


''கண்டிப்பாக - விரைவில்!''


'சின்ன சேலம்’ ரா.ரவி, நாமக்கல்.


''நேற்றைய நண்பர்களைத் திடீரெனச் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?''


''நட்பைப் பாராட்டுவோம். இந்த ஒரு விஷயத்தைத் தனியாகச் செய்ய முடியாது!''


பொன்விழி, அன்னூர்.

''ரீ-மேக் படம் எடுப்பதாக இருந்தால், எந்தப் படத்தை தற்போது எடுப்பீர்கள்?''

''திரு. ஆர்.எஸ்.மனோகரின் 'இலங்கேஸ்வரன்’ என்ற நாடகத்தை, சிறிய மாற்றங்களுடன்!''

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

''ஒரு மனிதனின் பலம் பலவீனமாவது எப்போது?''

'' 'சரிவில் யானை’ ஓர் உதாரணம். நமக்குச் சரிவுகள் பல உண்டு. பீடு நடைஎல்லாம் அக்கம் பக்கம் பார்த்துத்தான் போட வேண்டும்!''

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?''
''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

''நீங்களும் ரஜினிகாந்த்தும் சேர்ந்து நடிப்பது இல்லை என்ற ஒப்பந்தம் இனியும் நீடிக்கத்தான் வேண்டுமா?''

''நடிக்காமல் இருந்தது, முதலில் நடித்தது எல்லாமே தற்காப்பு வியாபாரம்தான். அதே காரணத்துக்காக, மீண்டும் நடித்தால் தப்பில்லைதானே.

இருவருக்குமே அந்தத் தற்காப்பு தற்போது தேவை இல்லாமல் செய்த தங்களைப்போன்றவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் கமல், ரஜினி!''

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.

'' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?''

''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''

ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.

''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?''
''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''

எம்.எஸ்.கோவிந்தராஜன், சுப்ரமணியபுரம்.

''தங்களின் கவிதைத் தொகுப்பு எப்போது வெளிவரும்? அதில் இடம் பெறவிருக்கும் ஒரே ஒரு கவிதை சொல்லுங்களேன்... இங்கே எங்களுக்காக!''

'' 'ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை
இறந்த பின், சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு!’ ''

சியாமளா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

''கடவுளைத் துதி பாடி, கலையுலகத்தில் அடிவைத்த தங்களுக்கு (களத்தூர் கண்ணம்மா) கடவுள் மீது பற்றில்லாமல் போனது ஏன்?''
''மழலை மாறியதுபோல, உயரம் கூடியதுபோல, உருவம் மாறியதுபோல, பகுத்தறிய பற்று வேறு பக்கம் திரும்பியது. என்னைப் பயிற்றுவித்தவர்களுக்கு நன்றி!''

என்.குமார், தஞ்சாவூர்-8.

''விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்களின் கருத்து என்ன?''

''அது அவரவர் தீர்வு. இதில் என் கருத்துக்கு ஏது இடம்?''

லீலா ராம், தக்கலை.

''ஒபாமாவைச் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்?''

''வெள்ளை மாளிகையின் விக்கிரமாதித்ய சிம்மாசனம் என்ன என்ன பாடுபடுத்துகிறது என்று பரிவுடன் விசாரிப்பேன்!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை?''

''எனினும்.''

பொன்விழி, அன்னூர்.

''பாலசந்தர் - பாரதிராஜா ஒப்பிட முடியுமா?''

''அப்பா - அண்ணன்!''

சுந்தர் சுந்தரி, கோயம்புத்தூர்.

''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''

''நட்புதான்!''

சிவக்குமார், திண்டுக்கல்.

''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?''

''எப்போதும் நாகேஷ். அதற்குப் பிறகுதான் நாங்கள் எல்லோரும்!''

பாரதி, சேலம்-9.

''உங்கள் நண்பர் ரஜினிகாந்த் அவர்களிடம் முரண்படும் ஒரு விஷயம்? அவரைப் பாராட்டும் ஒரு விஷயம்?''

''முரண்பாடுகள் உள்ளதாலேயே, எல்லோரையும் போன்றவர். உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஓரங்கட்டிவிட்டு, சாதாரணமாக இருக்க முயல்வதால்...உன்னதமானவர்!''

எஸ்.சந்தோஷ், சென்னை-75.

''பழம்பெரும் திறமையான நடிகர் நடிகைகளுடன் (காகா ராதாகிருஷ்ணன், எஸ்.வரலட்சுமி) சேர்ந்து நடித்தவர் நீங்கள். ஆனால், ஏன் மறைந்த கலைத் திறன் மிகுந்த நடிகர் ரகுவரனுடன் இணைந்து நடிக்கவில்லை? தனிப்பட்ட காரணம் ஏதேனும் இருந்தால், மறுக்காமல் பதில் கூறவும்!'

''இன்னும் நேரம் இருக்கிறது. பாத்திரம் கூடி வரும்போது செய்யலாம் என்று எண்ணித் தவறவிட்டது தவிர, வேறு காரணம் இல்லை!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.

''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?''

''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''

எம்.மாலதி, நன்னிலம்.

''எப்போதும் உங்களைச் சுற்றி வதந்திகளும் செய்திகளும் வந்துகொண்டே இருந்தன. கேள்விகள் உங்களைத் துரத்திக்கொண்டே இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எல்லோரும் அமைதியான முறையில் உங்களை எதிர்கொள்வதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''எம்மில் யாரோ ஒருவருக்குப் பக்குவம் வந்துவிட்டதாகச் சந்தேகிப்பேன்!''

சூரியகுமார், திருப்பூர்-4.

''உங்கள் தமிழ் அற்புதமாக இருக்கிறது. ஆனால், உங்கள் மகள்கள் தமிழ் பேசத் தடுமாறுகிறார்களே! அதோடு, உங்கள் மகள்களைப்பற்றிப் பேசும்போது, நீங்கள் ஸ்ருதியைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். அக்ஷராவும் அதீதத் திறமைகள் நிரம்பியவராகத் தெரிகிறார். அவரைப்பற்றியும் இனி பேசலாமே?''

''பேசினால் போச்சு. அக்ஷராவும் ஸ்ருதி அளவு தமிழ் பேசுவார். துணை இயக்குநராகப் பணி புரிகிறார் மும்பையில். அற்புதமான நடனக் கலைஞர்!''

சா.தேவதாஸ், திருச்சி-2.

''உங்கள் திரைக்கதைகள் எங்களைப்போன்ற கமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இனிமேலாவது, வருடத்துக்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்க முற்படுவீர்களா?''

''இரண்டு கண்டிப்பாக நடக்கக்கூடியது.''

வி.பவானி, திருவாரூர்.

'' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?''

''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''

ஆர்.பார்த்திபன், சென்னை-91.

''சமீபத்தில் 'ஆளவந்தான்’, 'உன்னைப்போல் ஒருவன்’ படங்களை அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தது. 'ஆளவந்தான்’ படத்தில் 'ஞாபகம்... அதுதானே உன்னுடைய வியாதி!’ என்று ஒரு வசனம். 'உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் 'மறதி... ஒரு தேசிய வியாதி!’ என்று ஒரு வசனம். என்ன சொல்ல வருகிறீர்கள் கமல் சார்?''

''அது 'கல் பேசாது!’ என்று வெகுண்ட அதே நடிகர் திலகம், பக்திப் பரவசத்தில் மிதக்கும் வசனங்கள் பேசவில்லையா? அதேபோல்தான்! ஒரு பாத்திரத்தின் மனோபாவம் வாக்கியமாகிறது. நான் சொல்ல வருவது குணாதிசயங்கள்!''

வி.மலர், செங்கல்பட்டு.

''நான், சிவாஜி ரசிகன். எனது மகனோ, கமல்ஹாசன் வெறியன். எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை. நீங்கள் யார் பக்கம் கமல்?''
''பாவம்... சின்னப் பையன் மனதை உடைக்காதீர்கள். உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்... நான் பெரியவர் பக்கம்தான். உங்கள் மகனுக்கு மகன் பிறக்கையில், அவர் விரும்பும் நடிகரும் என் மாதிரி பதில் சொன்னால் சந்தோஷம்!''

ப.ராகவன், சேலம்-4.

''உங்கள் படங்களில் புற்று நோய் வந்ததாக ஒரு பாத்திரம் வந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களின் பாதிப்பா?'' (மகேஷ், ஸ்ரீவித்யா, கௌதமி.)

''இருக்கலாம்!''

கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.

''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?''

''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''

கி.சம்பத், வேதாரண்யம்.

''சார், நீங்கள் ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவது இல்லை. உங்களின் அதிதீவிர ரசிகனாக அங்கு உங்களை ஃபாலோ செய்ய விருப்பம்... சாத்தியமா?''

''உங்கள் விருப்பம் நிறைவேற வேறு ஒரு திட்டம் இருக்கிறது. விரைவில் சொல்கிறேன்!''

எம்.கே.ராஜா, மன்னார்குடி.

''காமம் இல்லா காதல் சாத்தியமா?''

''எதுக்கு கஷ்டப்படுறீர்கள்.Try அன்பு!''

எஸ்.ராதாமணி, ராமநாதபுரம்.

''நரை கூடிக் கிழப் பருவமெய்திய பின் என்ன செய்வதாக உத்தேசம்?''

''எல்லோரும் செய்வதை சற்று வித்யாசமாக. ஒத்திகையெல்லாம் பார்த்தாகிவிட்டது பல வேடங்களில்!''