Sunday, March 10, 2013

Out of body experince



முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.

சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….????

உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?… ஒரு வேளை வெறும் கனவா?

முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று. இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை.

அவை
1. தூல உடல் (அன்னமய கோசம்)
2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)
3. சூட்சும உடல் (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்.

தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும்.

பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும். புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.

காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஔரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.

ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி.

மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.

விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில் மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஔர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது. தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது.

ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும் துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.

பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஔட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.

Out of body experince பற்றிய ஒருவரின் அனுபவம்…

”நான் சிறு பெண்ணாயிருந்த போது (பதிமூன்று வயதிருக்கும்) ஒருவருட காலமாக, இரவு படுக்கச் சென்றவுடன், நான் உடலிலிருந்து வெளிப்படுவதாகத் தோன்றும். வெளிவந்தவுடன் வீட்டின் மேலும், பிறகு நகரத்தின் மேலும் மிக உயரத்தில் சென்று விடுவேன். அச்சமயங்களில் நான் ஒரு தூய பொன்னாடையை அணிந்தவளாகவும், மிக உயரமானவளாகவும் என்னைப் பார்ப்பேன். நான் உயரே போகப் போக, எனது ஆடையானது பெரிதாய் விரிந்து, வட்டமாகி என்னைச் சுற்றி விரிந்து, ஒரு கூரையைப் போல நகரைக் கவிந்து கொள்ளும். பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துயரமடைந்தோரும் எனப் பலரும் பல திசைகளிலிருந்தும் அந்த ஆடைகளின் எல்லைக்குள் வந்து, என்னிடம் தங்களது குறைகளை முறையிடுவதைக் கண்டேன். அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, அவ்வாடையானது அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல், உயிர்ப்புடனும், துடிப்பனும் நீண்டு சாந்தி அளித்தது. அவர்களும் தங்கள் குறைகளும் துயரங்களும் நீங்கப் பெற்று, மனத் திருப்தியுடன் தத்தம் உடல்களுக்குத் திரும்புவதைக் கண்டேன்.”

ஆவிகள் உலகம்



ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

ஆவிகள்
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

(தொடரும்)

ஆவி உலக ஆராய்ச்சிகள்



ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்







ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர். இவர் ஆங்கிலத்தில் After the death என்ற ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதில் ஆவிகள் பற்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களைத் தெரிவித்திருக்கிறார்.


கிருஷ்ணய்யரின் மனைவி பெயர் சாரதா. அவர் இருதயக் கோளாறால் இறந்து விட்டார். இது கிருஷ்ண அய்யருக்கு மிகுந்த சோகத்தைத் தந்தது. 33 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இணை தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றி மிகவும் கவலை கொண்டார். மரணம் என்றால் என்ன, அதன் பின் மனிதர்களின் நிலை என்னவாகிறது என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்தார். ஆவிகளுடன் பேசும் முறைகள் பற்றியும் ஆய்வுகள் செய்தார். உலகெங்கும் பயணம் செய்து பல புகழ்பெற்ற மீடியம்களை சந்தித்தார். பல அதிசய அனுபவங்களை, தகவல்களைப் பெற்றார் என்றாலும் நேரடியாக அவரால் அவரது மனைவியின் ஆவியுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருந்தது.


அவர் மனைவி சாரதாவின் ஆவி பிறர் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அவர்களோடு பேசியது. பல எதிர்கால தகவல்களைக் கூறி எச்சரிக்கை செய்தது. ஆனால் கிருஷ்ணய்யருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை சாரதாவின் ஆவியிடம் ஒரு நண்பர் வினவிய போது, ‘அவர் என் பிரிவால் அடைந்திருக்கும் சோகமும், அதனால் ஏற்படும் துயரமுமே மிகப் பெரிய திரையாகச் சூழ்ந்து அவரை என்னோடு தொடர்பு கொள்ள இயலாமல் செய்திருக்கிறது. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக வாழ முயல வேண்டும்’ என்று அறிவுறுத்தியது.


இதனை அறிந்த கிருஷ்ணய்யர் மிகவும் துயரம் கொண்டார். ஒருநாள் கிருஷ்ணய்யரின் இல்லத்திற்கு ஒரு சாது வந்தார். அவர் புராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். மட்டுமல்ல’ ஆவிகளுடன் பேசுவதிலும் பயிற்சி பெற்றவர். அவர் கிருஷ்ணய்யருக்கு ஆவிகளுடன் பேசுவதற்காக சில பயிற்சி முறைகளை சொல்லித் தந்தார். ஆனால் அய்யர் அப்போது உச்ச நீதிமன்றத்தில் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றி வந்ததால் மிகுந்த வேலைப்பளு இருந்தது. அதனால் அந்தப் பயிற்சிகளைச் செய்ய இயலவில்லை. இனி கிருஷ்ணய்யர் கூற்றாகவே வருவதைக் காண்போம்.


அந்தச் சாது என்னோடு சிலநாட்கள் தங்கினார். என்னை தனது சிஷ்யப் பொறுப்பிலிருந்து விடுவித்தார். ஒருநாள்… பௌர்ணமி… இரவு… அன்று அவர் தியானத்தில் அமர்ந்தார். பின் தான் தற்போது சாரதாவின் ஆவியுடன் தொடர்பு கொள்ளப் போவதாகத் தெரிவித்தார். நானும் அதற்குச் சம்மதித்தேன்.


மறுநாள் காலை எழுந்ததும் அந்தச் சாது என்னைச் சந்தித்தார். தனது தியானத்தில் என் மனைவியைக் கண்டதாகவும் (அவர் முன்னமேயே என் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்திருந்தார்), அவர் பத்மா, காந்தா என்னும் இரண்டு பெயர்களை மட்டும் கூறி விட்டு உடனடியாக மறைந்து விட்டதாகவும் சொன்னார். நான் அதிர்ச்சியுற்றேன். காரணம், இந்த முன்பின் தெரியாத சாதுவால் அந்தப் பெயர்களை கற்பனை செய்து கூடச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பத்மா என்பது மனைவியின் சகோதரி பெயர். காந்தா என்பது என் மனைவியின் சகோதரர் பெயர் (காந்தா என்றுதான் அவரை அனைவரும் அழைப்பார்கள்). ஆக, இவர் என் மனைவியைக் கண்டதாகச் சொல்வது உண்மைதான் என உணர்ந்தேன்.


சில நாட்கள் போயிற்று. மீண்டும் அவர் ஒரு நாள் தியானத்தில் அமர்ந்தார். மறுநாள் அவர் தியானத்தில் கண்டவற்றை என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். ”என் தியானத்தில் உன் மனைவியைக் கண்டேன். ’ நான் என் கணவரது வருகைக்காக இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் ஒருவேளை நான் மறுபிறவி எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். அப்படி நான் மறுபிறவி எடுத்தால், சென்னையிலுள்ள டாக்டர் சந்தானம் – ஜெயா சந்தானம் தம்பதிகளுக்குக் குழந்தையாகப் பிறப்பேன்’ என்றாள் அவள்” என்றார் சாது.


நான் திகைத்துப் போய் நின்று விட்டேன், காரணம், சந்தானம் என்பது என் மனைவி சாரதாவின் இளைய சகோதரர் பெயர். அவர் சென்னயில் டாக்டராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜெயா. இதை அந்தச் சாது கற்பனை கூடப் பண்ணிச் சொல்லியிருக்க முடியாது. இந்த விஷயங்களை அவரிடம் சொல்வதற்கான ஆட்களும் அப்போது என் வீட்டில் இல்லை. இது உண்மைதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணய்யர்.


இதுமட்டுமல்ல; முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் போன்றவர்களும் ஆவி உலக ஆய்வில் நம்பிக்கை கொண்டதாகவும் அவர் அந்நூலில் தெரிவித்திருக்கிறார்.


அனுபவமே உண்மை ஆசான்!

பேய், பிசாசு, பூதம்



வானத்தில் தோன்றிய பேய்

பேய், பிசாசு, பூதம் இவையெல்லாம் இருக்கிறதா, இல்லை வெறும் கற்பனையா? அவற்றை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா, அப்படியென்றால் அவை எப்படி, எந்தத் தோற்றத்தில் இருக்கும்? இல்லை, அனைத்துமே ஏமாற்று வேலையா, மூடநம்பிக்கைகள் தானா?- இவையெல்லாம் பரவலாக எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள். இருக்கிறது என்று ஒரு சிலரும், இல்லவே இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். சென்னையில் இது பற்றியெல்லாம் ஆராய்வதற்காக விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ‘ஆவியுலக ஆராய்ச்சி மையம்’ செயல்பட்டு வருகிறது. Ghost Lives, Conversations with a Spirit என்று பல தலைப்பினால ஆங்கிலப் புத்தகங்கள் ஹிக்கின்பாதம்ஸிலும், லேண்ட்மார்க்கிலும் குவிந்து கிடக்கின்றன. தமிழிலோ கேட்கவே வேண்டாம், ஆவிகள் பேசுகின்றன, ஆவிகளுடன் நாங்கள், ஆவி உலக அனுபவங்கள் என்றெல்லாம் பல புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. உண்மையில் ஆவிகள் இருப்பது உண்மைதானா? இல்லை மனித மனத்தின் கற்பனையா? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன் நமது இலக்கியங்களில், புராணங்களில் அவை பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கலாம்.

சிலப்பதிகாரத்தில் பேயும், பூதமும்

உண்மையாக நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினர் என்பர். அச்சிலப்பதிகாரத்தில் இயற்கைப் பிறழ்ந்த நிகழ்வுகளாக மோகினி, இடாகினிப் பேய், சதுக்க பூதம் என்றெல்லாம் பல நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன.

“கழல்கண் கூளி”, எனவும் ‘இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்’ எனவும் பேயைப் பற்றிக் கூறுகிறது சிலம்பு. வனசாரினி என்ற வன தேவதையைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மேலும் ஊர் கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம் எனக் காவல் தெய்வக் கோவில்கள் பற்றியும் சிலம்பு கூறுகின்றது. ஐயை கோட்டம் என கொற்றவை வழிபாடு பற்றியும், சாமியாடுதல் பற்றியும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியைப் புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மிகச் சிறப்பானது. கொல்லிப் பாவை பற்றியும் மிக விரிவாக சிலம்பு சுட்டுகின்றது. பாய்கலைப் பாவை மந்திரத்தை உச்சரித்து வனசாரிணியிடமிருந்து கோவலன் தன்னைக் காத்துக் கொள்கிறான் என்கிறது சிலம்பு. யார் இந்த வனசாரிணி, யார் இந்த பாய் கலப் பாவை? வனசாரிணி என்பது மோகினிப்பேய் அல்லது வன தேவதை. பாய்கலப்பாவை என்பது கொற்றவை தான் என பதில் கூறுகிறது சிலம்பு. சிங்கம் மட்டுமல்ல; மானும் கூட அவளுக்கு ஒரு வாகனமாம்.

நரபலி கொண்ட பூதம் பற்றியும், தவறு செய்பவரை அடித்துக் கொன்று தின்னும் சதுக்கபூதம் பற்றியும் சிலம்பில் காட்சிகள் உள்ளன. அரசபூதம், வணிக பூதம், வேளாண்பூதம் மற்றும் நால்வகைப் பூதங்கள் பற்றியும் சிலம்பு பேசுகிறது.

சிலம்பில் ஆவி வழிபாடு

மறுபிறவி பற்றியும், முன் வினை, அதன் விளைவுகள் பற்றியும் கூட சிலம்பு குறிப்பிட்டுள்ளது. மேலும் இறந்த தேவந்தி, மாதரி, கோவலன் மற்றும் கண்ணகியின் தாய் போன்றோரின் ஆவிகள் மூன்று சிறுமிகளின் மீது ஆக்கிரமித்தலையும், சேரன் செங்குட்டுவன் அவற்றை வழிபட்டதையும் சிலம்பு காட்டுகின்றது. அதுமட்டுமல்ல; கண்ணகியே இளங்கோவடிகளுக்கு ஆவியுருவில் காட்சி தந்தாள் என்றும் ஆசி கூறி வாழ்த்தினாள் என்றும் இளங்கோவடிகளே நூலின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றது. “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” என்று இந்திரனின் ஏவலால் பூதம் வந்து நகரைக் காத்ததை சிலம்பு சுட்டுகிறது. மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. இன்றைய சிறு தெய்வ வழிபாட்டிற்கு அடிப்படையாக அது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று பல தகவல்கள் சிலம்பு மட்டுமல்லாது, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி போன்ற பல நூல்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கியங்களில் காணப்படும் எல்லாமே உயர்வு நவிற்சியால் புனைந்துரைக்கப்பட்ட கற்பனைகள்தான் என்றால் கண்ணகி வரலாறும் கற்பனை தானா?

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மையா?



Life Before Life

முற்பிறவி – மறுபிறவிகள் உண்மைதானா? – இது நீண்ட நெடுங்காலமாகவே மக்களிடம் இருக்கும் கேள்வி. வெகு காலமாகவே விவாதிக்கப்பட்டு வரும் விஷயமும் கூட. உண்மைதான் என்பது ஒரு சிலரது கருத்து. அதெல்லாம் பொய். அப்படி உண்மை என்றால் எனக்கு ஏன் முற்பிறவி ஞாபகங்கள் வருவதில்லை, ஒரு சிலருக்கு மட்டும் வருவது ஏன்? ஆகவே, அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சிலரது கருத்து.

சிலம்பு, மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும், திருக்குறளிலும் முற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்துக்கள் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புராண வரலாறுகளும் அதுபற்றிக் கூறுகின்றன. இன்றளவும் உலகளாவிய அளவில் அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

மனிதன் இறக்கிறான். இறந்த பின் ஆவி நிலை அடைகின்றான். அவன் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்ப சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகிறான். அவற்றில் சிலகாலம் வசித்த பின் எஞ்சிய தனது கர்மாவைக் கழிக்க மீண்டும் பிறப்பெடுக்கிறான் என்கிறது கருடபுராணம்.


கர்மாக்கள் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்று வகையாக இருக்கின்றன என்றும் அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பதில்லை என்கிறது கடோபநிஷத்.

உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவத்தை வலியுறுத்திய சாக்ரடீஸ் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மரணத்திற்குப் பின் ஆன்மா ஹேடஸ் என்ற சூட்சும உலகிற்குச் சென்று பல நதிகளைக் கடக்கும். பின் பல்வேறு அனுபவங்களைப் பெற்று மறுபிறவி எடுக்கும் என்கிறார் அவர். இந்நதி இந்து மதத்தில் கருட புராணம் கூறும் வைதஸ்வரணி நதிக்கரையை ஒத்துள்ளது.

ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவர் நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிபிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலில் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.

முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு பெற்று, அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன. அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது – இது முற்பிறவி பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் கூறும் தகவலாக உள்ளது.

குறிப்பாக டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் இதுபற்றி மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சியாளரான அவர், பல நாடுகளுக்கும் சென்று முற்பிறவி, மறுபிறவி பற்றி ஆராய்ந்திருக்கிறார். தனது ஆய்வு முடிவுகளை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். அவரது நூலான ”Twenty Cases Suggestive of Reincarnation” என்ற நூல் மறுபிறவி ஆய்வாளர்களால் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்டீவன்சன் மட்டுமல்ல; பிரபல ஆராய்ச்சியாளர்களான ஜிம்டக்கர், கரோல் பௌமன், எடித் ஃபையர், எட்கர் கெய்ஸி, டாக்டர் லியான்ஸ், டாக்டர் கார்லிஸ் லூயிஸ், டாக்டர் ஹெரால்ட்ஸ்ன், டாக்டர் ஹெலன் வாம்பாச், பேராசிரியர் எச்.என்.பேனர்ஜி, டாக்டர் ஷிகா, டாக்டர் திரிவேதி போன்றோரும் பல நூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றனர்.

இந்தியாவிலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸைச் (NIMHANS) சேர்ந்த [National Institute of Mental Health & Neurosciences], Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, முற்பிறவி, மறுபிறவி பற்றிய சம்பவங்களை விளக்கியுள்ளார். பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவிற்கு வருகை தந்து முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும்)

முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்



முற்பிறவி – மறுபிறவி பற்றி மறைமலை அடிகள் கூறும் கருத்து.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் மறைமலை அடிகள். அவர் பல துறைகளில் ஆய்வு செய்து தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை போன்ற பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ’சென்ற பிறவியின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பல சுவாரஸ்யமான முற்பிறவி, மறுபிறவிச் சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

“ஒரு பெரிய மிருகத்தின் கால்களிடையே குடைந்து செய்யப்பட்ட ஒரு கோயிலையும் அக்கோயிலில் நடைபெறும் கிரியைகளையும், அதனைச் சூழ்ந்த நிலத்தோற்றத்தையும் ஒருவர் தெளிவாக நினைவு கூர்ந்தார்; அவர் இப்பிறவியில் அத்தகைய கோயிலையும் அதனோடு சேர்ந்த பிறவற்றையும் எங்கும் கண்டவர் அல்லர். நூல்களில் படித்தாயினும் பிறர் மூலம் கேட்டாயினும் உணர்ந்தவருமல்லர். கனவிலும் நனவிலும் இவர் அடிக்கடி நினைவு கூர்ந்து வந்த அவ்வமைவுகள் எங்குள்ளன என்று ஆராயப் புகுந்த துரை மகன் ஒருவர், அவற்றைப் பழைய எகிப்து நாட்டினில் இருப்பனவாக அறிந்து வியப்புற்றார்.

முன்னொரு பிறவியில் அவ்வெகிப்து நாட்டில் பிறந்திருந்தமையால், இவர் அப்போது அங்கு கண்ட அமைவுகளை இப்பிறவியில் தெளிவாக நினைவு கூர்ந்து வந்தார். இவர் இங்ஙனம் நினைவு கூர்ந்த அவ்வமைவுகளை ( EGYPTIAN SPHINX) இப்போதும் எகிப்து நாட்டுக்குச் செல்பவர் கண்டு உணரலாம்.

காசிக்குச் சென்றவர் காஞ்சி மாநகரை இல்லாத பொய்ப் பொருள் என்று மறுத்தலும், காஞ்சிக்கு மீண்ட பின் அவர் காசி மாநகரை இல் பொருளென்று கூறுதலும் சிறிதேனும் பொருத்தம் இல்லாத பித்த உரை ஆதல் போல, ஒரு நிலையில் உள்ளோர் பிறிதொரு நிலையின் உண்மை உணராமல் அதனைப் பொய்யென்றுரைத்தல் பெரியதோர் அறியாமையும், மயக்க உணர்ச்சியுமாகும். கனவில் தோன்றும் உணர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை முற்பிறவியின் அனுபவங்களாகும்.”

முற்பிறவி – மறுபிறவி பற்றி மதுரை ஆதினகர்த்தரின் ஆய்வு

மதுரை ஆதீனகர்த்தராக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். அவர் ஆவிகள் உலகம் பற்றி ஆராய்ந்து ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’ என்ற விரிவான ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார்.

ஆதினகர்த்தர் ஒருசமயம் மதுரையில் உள்ள அம்மையநல்லூர் எனும் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது, அந்த ஊருக்கு அடுத்துள்ள நிலக்கோட்டையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகப் பதவி வகித்து வந்த ஒருவர், பதினாறு வருடங்களுக்கு முன், தன் பதிமூன்றாம் வயதில் மரணமடைந்த தனது மகனுடன் பேச வேண்டும் என்று சொல்லி ஆதினகர்த்தரைத் தொடர்பு கொண்டார்.

ஆதினகர்த்தர், தமது வழிகாட்டும் ஆவியான தனது தந்தையின் ஆவியைத் தொடர்பு கொண்டு அந்தச் சிறுவனின் ஆவியை வரவழைக்க முயற்சி செய்தார். பெரிதும் முயன்றும் அச் சிறுவனின் ஆவியுடன் அவரால் தொர்பு கொள்ள முடியவில்லை. பிறகு தந்தையின் ஆவி, அச்சிறுவனின் ஆவியை ஆவியுலகத்தின் பல அடுக்குகளிலும் தேடி, இறுதியாக அவன் ஐந்து வருடங்களுக்கு முன் தனக்கு விதிக்கப்பட்ட காலகெடு முடிந்து மறுபிறவி எடுத்துவிட்டதை அறிந்து அவர்களிடம் அறிவித்தது. அதுமட்டுமல்ல, அச்சிறுவன் தனது மறுபிறவியில் நிலக்கோட்டை அருகிலுள்ள ஐயம்பாளையம் என்னும் கிராமத்தில், பொடிக்கடை நடத்தும், சுப்பையாப் பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்துள்ளதாகவும், அவளுடைய பெயர் ‘லட்சுமி என்றும் தெரிவித்தது.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சென்று அதைச் சரிபார்த்த்தில் அங்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சில மறுபிறவிச் சம்பவங்கள்


சாக்‌ஷி தனது முற்பிறவி மகனுடன் (இப்பிறவி தந்தை)

01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் சாக்ஷி எனும் சிறுமி, ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று அறிவித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தன் மகன் என்றும், தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் கூறியதோடல்லாமல், முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர் மட்டுமே அறிந்த செய்திகளையும் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளாள். மேலும் அதற்கு முந்தைய பிறவியைப் பற்றியும் அவள் கூறியிருக்கிறாள். அப்பிறவியில் தான் சிறு குழந்தையாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து தாம் மரணமடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள், பின் போலி பாயாகத் தாம் மறுபிறவி எடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகவும் கூறுகிறாள்.

இனி ஆய்வாளர்கள் கூறும் சில மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

டாக்டர் எடித் ஃபையரின் முற்பிறவி, மறுபிறவி ஆராய்ச்சிகள்

முற்பிறவி, மறுபிறவி பற்றிய ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் டாக்டர் எடித் ஃபையர். உளவியல் துறையில் ஆய்வு செய்து மியாமி பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு மனநல சிகிச்சையாளர் மட்டுமல்ல; ஹிப்னோஸிஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை உறக்கத்தில் ஆழ்த்தி அவர்தம் முற்பிறவி நினைவுகளைக் கண்டறிந்து கூறுவதில் வல்லவர். தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடாவில் வசித்து வரும் இவர் இத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார். அதிலிருந்து சில சம்பவங்கள்….

ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தண்ணீரைக் கண்டால் பயம். மழையில் வெளியே செல்ல மாட்டாள்நண்பர்களுடன் நீர்நிலைக்குச் செல்லக் கூட அஞ்சுவாள். இந்த நிலை சிறுவயது முதல் அவள் வயதான பின்பும் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. தன் நிலைக்கான காரணம் அறிய அவர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவி பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார். அவர் இரண்டிற்கு மேற்பட்ட தனது முற்பிறவிகளில் தண்ணீராலேயே மரணமடைந்தார் என்பதும், ஒரு பிறவியில் அவர் ஆணாகப் பிறந்திருந்த போது சிறுவயதில், தந்தையுடன் படகில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு, படகு கவிழ்ந்து மரணமடைந்தார் என்பதும், மற்றொரு பிறவியில் மீனவராகப் பிறந்து கடலுக்குள் செல்லும் போது மரணமடைந்தார் என்பதும், இன்னொரு பிறவியில் அவர் மாலுமியாகப் பிறந்து கடலில் செல்லும் போது, அப்போது வீசிய பெரும் புயலில் சிக்கி மரணமடைந்தார் என்பதும் தெரிய வந்தது.

அந்த அச்ச உணர்வே அவரது ஆன்மாவில் படிந்து, அவர் மறுபிறவி எடுத்த போதும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ஃபையர் அவருக்கு தகுந்த மனோ சிகிச்சை அளித்து அவரது முற்பிறவித் தொடர்பான தண்ணீர் பயத்தைப் போக்கினார்.

**********


டாக்டர் எடித் ஃபையர்

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபையரை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.

**********

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதைம் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அடுத்து அமெரிக்காவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் இயான் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்து கூறியுள்ள முற்பிறவி-மறுபிறவிச் சம்பவங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

சூட்சும சக்திகள்



‘நான்’ என்ற எண்ணமும், தன்முனைப்பான ஆர்வமுமே ஒரு மனிதனின் வாழ்வியல் கோட்பாடுகளில் நம்பிக்கை கொள்ள வைக்கின்றது. சாதனை செய்யத் தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் ‘தான்’ என்ற தன் முனைப்புடன் தான் உலகில் செயல்படுகிறான். ‘தன்னுடையது,’ ‘தனக்கு’ என்பது அவன் பிறந்து வளர்ந்து இந்த உலகை உணரத் தொடங்கும் பொழுதே வளர ஆரம்பித்து விடுகிறது. இறக்கும் வரை தொடர்கின்றது. இரண்டு வயதுச் சிறு குழந்தையே ஆனாலும், ஒரு பொம்மையை அதனிடமிருந்து பிடுங்கினால், ‘என்து, வேணும், கொண்டா’ என்றெல்லாம் அழுகிறது.

இந்தத் ‘நான்’ என்ற தனிமனித எண்ணமே ‘அகங்காரம்’ என்றும் ‘ஆணவம்’ என்றும், அதுவே ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடை என்றும் பல சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. பிறந்த உடனேயே, மனிதனை ‘மாயை’ சூழ்ந்து கொள்வதால் தான், அவனால் அதனை மீறிச் செயல்படவும் முடிவதில்லை. அதிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அதற்கான சரியான வழிமுறையும் மனிதனுக்குத் தெரிவதில்லை. ஆக, இந்தத் தன்முனைப்பு என்பது வாழ்வியலுக்கு ஆதரவாகவும், இறையை உணர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம் இங்கு சிந்திக்கவேண்டியதாகிறது. ஒவ்வொரு செயலையும் மனிதன் தன் ஈடுபாட்டோடு தான் செய்கிறானா? இல்லை. ஏதேனும் சில சக்திகள் அவனை அவ்வாறு செய்யுமாறுத் தூண்டுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியதாகிறது.

உண்மையில் அனைத்துச் செயல்களையும் செய்வது யார்? நாம் தானா? அல்லது நம்மை ஆட்டி வைக்கும் ஏதேனும் சூட்சும சக்திகள் அவ்வாறு நம்மைத் தூண்டுகின்றனவா?. நாம் தான் என்றால் ஏன் இவ்வளவு சிக்கல்கள், குழப்பங்கள், தவறுகள், வேதனைகள்? அல்லது அந்த சூட்சும சக்திகள் தான் என்றால் ஏன் பல தோல்விகள், துயரங்கள், சோதனைகள்?. அவற்றின் சக்திகள் தான் எவ்வளவு? இதெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவையாக உள்ளன.

உண்மையில் அந்தச் சூட்சும சக்திகள் என்பது எது? ஏன் அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன? அவை நல்லவையா, கெட்டவையா?. அதற்கான விடைகளை நம்மால் உணர முடிவதில்லை. ஒருசிலருக்கு நன்மை தருபனவாகவும் மற்றவர்களுக்கு ஏன் தீமை செய்பவனவாகவும் அவை ஏன் நடந்து கொள்கின்றன?. அதற்கு என்ன காரணம்?. நாம் செய்த, பாவ, புண்ணியங்களா?. இல்லை. வேறு ஏதெனும் நம்மால் அறிய இயலாத காரணங்கள் உள்ளனவா?. நமக்குத் தெரியாது. நம்மால் அவ்வளவு எளிதில் அவற்றை அறிந்து கொள்ளவும் இயலாது. ஏன் நன்மை செய்பவர்கள், நல்லது நினைப்பவர்கள் துன்பப்படுகின்றனர், தீயவர்கள் வசதியோடு, செழிப்பாக வாழுகின்றனர்?. அதற்கு ஏதேனும் சிறப்பான காரணம் உண்டா? மனிதன் செய்த கர்மவினை தான் காரணமா?. அல்லது வேறு ஏதேனும் சூட்சுமமான செயல்பாடுகள் உள்ளனவா?. விடை அறிவது மிக மிகக் கடினம்.

ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்கிறது நமது சாத்திரம். அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன என்றும் அது கூறுகிறது. அப்படியென்றால், அந்த நவக்கிரகங்களை சாந்தி செய்து விட்டால், பரிகாரம் செய்து விட்டால் போதுமே, ஊழிலிருந்து தப்பித்து விடலாமே! இப்படி எண்ணத் தோன்றும். ஆனாலும் அவை சாத்தியமா?

ஏனெனில், நம்மை ஆட்டி வைப்பவை வெறும் நவக்கிரகங்கள் மட்டுமல்ல; அதற்கும் மேலான, இறைவனின் ஏவலைச் செய்து முடிக்கக்கூடிய சில தேவதாம்சங்களும் உள்ளன என்பது தான் உண்மை. அவை தான் நம்மை வழிநடத்துகின்றன. நம்மை சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்கின்றன. துன்பத்திலிருந்து காக்கின்றன. அதே சமயம் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதிப்பாடு இருக்குமானால், அவற்றை அவன் அனுபவிக்குமாறும் விட்டு விடுகின்றன. அவற்றின் மூலம் அவன் தான் செய்த தவறை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே இவற்றின் நோக்கம்.

இவ்வகை சூட்சுமசக்திகளே தேவதைகளாகப் போற்றப்படுகின்றன. இவை, மனிதனின், மூளையில் தங்களது எண்ண அலையைப் பிரயோகித்து, அவரவர் கர்மவினைக்கு ஏற்றவாறு, அவனை நல்ல வழியிலோ, அல்லது தீய வழியிலோ செயல்படத் தூண்டுகின்றன. பாவ, மத்திய, புண்ணிய ஆவியுலகங்களையும் கடந்த நிலையில் வாழும் இவ்வகைத் தேவதைகள், இறைவனின் ஏவலர்களாகப் பணிபுரிகின்றன. இவற்றில் நல்ல தேவதைகளும் உண்டு. தீய தேவதைகளும் உண்டு. பிரதமர், அமைச்சர் என படி நிலையில் அரசு செயல்படுவது போல, இவ்வகைத் தேவதைகளும், இறைவனின் தலைமையில் செயல்படுகின்றன.

இது போன்ற தேவதைகள் வழிபாடு, இந்து மதத்தில் மட்டுமல்லாது, முஸ்லிம், கிறித்துவ, சொராஸ்டிரிய மதங்களிலும் காணப்படுகின்றன. கிறித்துவ மதத்தில் இவை ‘ஏஞ்சல்’ என்றும், இசுலாமியர்களால், ‘ஜின்’ வானவர், தூதர் என்றும் இவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் தீயவற்றைச் செய்யும் சாத்தான்களும், மலக்குகளும் உண்டு.

தேவதூதர்கள் இயேசு பெருமானுக்குக் காட்சி அளித்ததாக பைபிள் கூறுகின்றது. நபி பெருமானும் தேவதூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டே குரானை அருளினார். இந்து மதத்திலும் தேவதைகள் சிறப்பிடம் பெறுகின்றன. ஹோமங்கள், யாகங்கள் யாவற்றிலும் அவற்றிற்கு அவிர்ப்பாகம் அளிக்கப்படுகின்றன. மேலும், சில தீய தேவதைகளும் உண்டு. சில குறி சொல்பவர்கள், சோதிடநிபுணர்கள், யக்ஷணி போன்ற தேவதைகளை உபாசனை செய்து, தங்களை நாடி வந்திருப்பவரைப் பற்றிய உண்மையான நிலையை அறிந்து, அதை அவர்களிடம் எடுத்துக் கூறி பொருள் ஈட்டி வருகின்றனர். அவற்றிலும் பல வகைகள் உள்ளன. அவ்வவற்றின் தன்மைக்கேற்ப அவற்றை, குறி சொல்ல, அடுத்தவர் மனதில் இருப்பதைக் கண்டறிய, ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணம் நகைகள் போன்றவற்றைக் கண்டறிய, களவு போன பொருட்கள், காணாமல் போன மனிதர்கள் பற்றி அறியப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் மிகக் கொடூரமானவைகளும் உண்டு. சற்று கொடூரம் குறைந்தவையும் உண்டு. தன்னை உபாசிப்பவர்களையே பழிவாங்கும் யக்ஷிணிகளும் உண்டு.

இவற்றில் தேவ யக்ஷணியும் உண்டு. அசுர யக்ஷனியும் உண்டு. அசுர யக்ஷணிகள் துர் தேவதைகளாகவும், நீச தேவதைகளாகவும் கருதப்படுகின்றன. யக்ஷனிகளில் கர்ண யக்ஷணி, தாம்பூல யக்ஷணி எனப் பலவகைகள் உள்ளன. மேலும் யோகினி, சாகினி, டாகினி, ஹாகினி, மோகினி எனப் பல தேவதாம்சங்களும் உண்டு.

சில மாந்த்ரீகர்கள், இது போன்றவற்றை உபாசித்து, தீய காரியங்கள் சிலவற்றிற்கு உபயோகப் படுத்துகின்றனர். இறுதியில் அவற்றாலேயே அழிந்தும் போகின்றனர்.

இந்துமதத்தைப் பொறுத்தவரை, தேவதைகள் அனைத்தும், சப்தமாதாக்களின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். ஸ்ரீ சக்ர மகாமேருவில் வீற்றிருந்து இவ்வுலகைப் பரிபாலிக்கும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் காவல் நாயகிகளாக இந்த சப்தமாதாக்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் எதிரே இவற்றிற்கு சன்னதிகள் இருக்கும். இம் மாதாக்களுக்குக் காவலாக ஸ்ரீ சாஸ்தா அல்லது அய்யனார் இருப்பார். சில சமயங்களில் சில முனிவர்களின் திரு உருவங்களும், விநாயகப் பெருமானின் சன்னதியும் கூட அடுத்து இருக்கும். இச் சப்த மாதாக்களில் வாராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். கேட்ட வரம் தருபவள். இவளை வழிபட்டுத் தான் சோழச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் மாபெரும் வெற்றி அடைந்தான் என்பது வரலாறு. தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டி ஸ்ரீ வாராஹிக்கு தனி ஆலயம் உள்ளது. தஞ்சை பிரகீதீஸ்வரர் ஆலயத்திலும் தனிச் சன்னதி உள்ளது. இது போக சப்த மாதாக்களான பிராமி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி ஆகியோரை வழிபட நன்மைகள் பெருகும்.

எனவே, நம்மை நாமே அறியாமல் கட்டுப்படுத்தும் தேவதைகளின், சூட்சும சக்திகளின் பாதுகாப்பினைப் பெற சப்த மாதாக்களையும், ஸ்ரீ சக்ர மாதாவினையும் சரணடைவோம். வளம் பெறுவோம்.

மகாத்மாவின் மறுபிறவி?









மகாத்மா காந்தி

இன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். இன்றோடு அவர் பிறந்து 140 வருடங்கள் ஆகின்றன. எளிய மக்களின் வாழ்க்கை உயர்விற்காகவே தனது வாழ்க்கையைத் தியாகம் செய்த அவர், கோட்ஸேவால் சுட்டுக் கொல்லப்பட்டு 61 வருடங்கள் ஆகி விட்டது. காந்தியையும் அவரது கொள்கையையும் இன்று பலர் மறந்து விட்டாலும் இந்தியாவுடனான அவரது பிணைப்பும் உறவும் நேசிப்பும் அஹிம்சை என்னும் உறுதியும் என்றும் நினைவுகூரத் தக்கது.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களாக மட்டுமே காந்திஜி அறிமுகமாகியிருக்கிறார். நவநாகரிக யுக இளைஞர்களுக்கோ அவர் ஒரு பிற்போக்குவாதி, மதவாதி, புதுமைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த பிடிவாதக்காரர். அரசியல்வாதிகளுக்கோ, கேட்கவே வேண்டாம் காந்திஜி என்ற பெயர் ஊறுகாய் மாதிரி. அவ்வப்போது தொட்டுக் கொள்வார்கள்.

அவர் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும், பின்பற்றிய தத்துவங்களும், மேற்கொண்ட எளிமையான வாழ்க்கை முறையும் எல்லோராலும் என்றும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. அதனால் தான் ஒபாமாவால் கூட காந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற தலைவர் அவர் என்று ஏற்றுக் கொள்ள முடிகிறது.


டாக்டர் வால்டர்

மகாத்மாவின் வாழ்க்கையை, அவர் போராட்டத்தை, அவர் தத்துவத்தை, அவரது கொள்கைகளை உலகெங்கிலும் உள்ள பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர். இன்னமும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்களுள் வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டு அதிரடியான ஒரு முடிவைத் தந்திருப்பவர் வால்டர் செமிகேவ்.

அவர் சொல்வது இதைத்தான். “மகாத்மா காந்தி மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறார். அமெரிக்காவில் பிறந்திருக்கும் அவர், இப்பிறவியிலும் சமூக சேவை, மனித நலத்திலேயே ஆர்வம் காட்டி வருகிறார்”

வால்டர் செமிகேவ் ஒரு வித்தியாசமான மனிதர். தனது இளமைப் பருவத்தில் கிட்டத்தட்ட நாத்திகராக வாழ்ந்த அவருக்கு அதிசயமான வகையில் முற்பிறவி நினைவுகள் பற்றிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி மேற் கொண்ட அவர், முற்பிறவியில் தான் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வாழ்ந்த ஜான் ஆடம்ஸ் என்பதைக் கண்டறிந்திருக்கிறார். தனது வாழ்க்கைச் சம்பவங்களும், குணாதிசயங்களும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் ஆடம்ஸூடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்ட அவர் மேலும் தீவிரமாக தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.


சென்னையில் வால்டர்

சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் கெவின் ரியர்ஸன் என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.


காந்தி

டாக்டரின் ஆராய்ச்சி தனித்துவமானது. முதலில் முற்பிறவியில் வாழ்ந்த மனிதரைப் பற்றிய தரவுகளைத் திரட்டுவார். அவர் வாழ்க்கை முறை, குணாதிசயம், உருவ அமைப்பு, நடை, உடை, பாவனைகள், தனிப்பட்ட செய்கைகள், முக்கியமான வாழ்க்கைச் சம்பவங்கள் போன்றவற்றைக் குறித்துக் கொள்வார். பின்னர் அவரது மறுபிறவியாகக் கருதப்படும் நபரின் வாழ்க்கையையும் அதே போன்று ஆய்வுக்குள்ளாக்குவார். அவருடன் பேட்டி காண்பார். இரண்டு நபர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பார். பல தகவல்களைத் திரட்டுவார். பின்னர் இரண்டையும் ஒப்பிட்டு சோதனைக்குள்ளாக்குவார். அப்படியும் தனக்குச் சந்தேகம் தோறும் போது வழிகாட்டி ஆவியான ’அதுன் ரே’விடம் பேசி, உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவிப்பார். சமயங்களில் ’அதுன் ரே’வே சில பிரபலமான மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி வால்டரிடம் கூறி ஆய்வுகள் மேற் கொள்ளச் சொல்வதும் உண்டு.


வான் ஜோன்ஸ்

இம்மாதிரி ஆய்வு செய்து அவர் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் நூல்களில் டாக்டர் வால்டர் செமிகேவின் நூல்களுக்கு முக்கிய இடமுண்டு.

இந்தியாவில் வாழும் பிரபல மனிதர்களின் மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கும் டாக்டர் வால்டர் மகாத்மா காந்திஜியின் மறுபிறவியாகக் குறிப்பிட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் சமூக ஆர்வலரான வான் ஜோன்ஸ் என்பவரை. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலராக விளங்கும் ஜோன்ஸ் சமீபத்தில் தான் புகழ்பெற்ற டைம் பத்திரிகையால் ‘சுற்றுச்சூழல் நாயகன்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஜோன்ஸின் நடை, உடை, பாவனை, உடல் மொழிகள், முக அமைப்பு என அனைத்தும் காந்தியை ஒத்திருப்பதாகக் கூறும் வால்டர், காந்திஜி 1930ல் தென் ஆப்பிரிக்காவில் எதுபோன்ற பணிகளை மேற்கொண்டாரோ அதே போன்ற பணிகளைத் தான் இன்று ஜோன்ஸ் செய்து வருவதாகக் கூறுகிறார். காந்திஜி 1930ல் எப்படி இதே ’டைம்’ பத்திரிகையால் அந்த ஆண்டின் ’மிக முக்கியமான மனிதர்’ என்று போற்றப்பட்டாரோ அதே போன்று இன்று ஜோன்ஸூம் போற்றப்படுகிறார் என்று கூறுகிறார்.


காந்தி-ஜோன்ஸ்

இது போன்ற சம்பவங்களையும், இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகளையும் தனது “Born Again” நூலில் தெரிவித்திருக்கும் வால்டர், சமீபத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது தமிழ் நாட்டிற்கும் வருகை தந்திருந்த அவர், முற்பிறவி-மறுபிறவி பற்றிய தனது புதிய நூலான “Origin of the Soul: And the Purpose of Reincarnation”-ஐ லேண்ட் மார்க் புத்தக கடையில் வெளியிட்டார்.

இந்த நூல்களில் காந்திஜியின் மறுபிறவியைப் பற்றி மட்டுமல்லாது அமிதாப்பச்சன், ரேகா, ஜெயா பச்சன், ஷாருக்கான், அப்துல்கலாம், மேனகா காந்தி, ஜவஹர்லால் நேரு, விக்ரம் சாராபாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என பலரது முற்பிறவிகளைப் பற்றி ஆச்சரியமூட்டும் சம்பவங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள லேண்ட மார்க் கடைகள் அனைத்திலும் இந்த நூல்கள் கிடைக்கும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
(கடவுள் வாழ்த்து, திருக்குறள்)

“பாலூரு மலைப்பாம்பும் பனிமதியு மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்ற னடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே”
(இரண்டாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்)

டாக்டர் இயான் ஸ்டீவன்சனின் முற்பிறவி – மறுபிறவி ஆராய்ச்சிகள்









டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

டாக்டர் இயான் ஸ்டீவன்சன், கனடாவில் பிறந்தவர். அடிப்படையில் ஒரு உளவியல் நிபுணரான இவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முற்பிறவி-மறுபிறவி பற்றிய விஷயங்களில் இவருக்கு ஆர்வம் ஏற்பட அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்தார். உலகெங்கும் பயணம் மேற்கொண்டார். முற்பிறவி ஞாபகங்கள் வந்ததாகக் கூறப்படுபவர்களைச் சந்தித்தார். அவர்கள் கூறும் முற்பிறவிகள் பற்றியும், அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், மனிதர்கள் குறித்தும் ஆராய்ந்தார். பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். முடிவில் சிலருக்கு மட்டும் முற்பிறவி நினைவுகள் ஏற்படுவது உண்மையே என்றும் அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன என்றும் கூறி அது பற்றிய பட்டியல்களையும் வெளியிட்டார்.

முற்பிறவி, மறுபிறவி பற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் ஸ்டீவன்சன் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத் தகுந்தது, ’Twenty Cases Suggestive of Reincarnation’ என்பதாகும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் டாக்டர் ஸ்டீவன்சனின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டதுடன், அவர் முறைப்படி ஆய்வு செய்து அவற்றை நீருபித்திருப்பதாகவும், இதில் ஐயப்பட ஏதுமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அவர் உருவாக்கிய முற்பிறவி – மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சித்துறை இன்றளவும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


பர்மாவில் டாக்டர் ஸ்டீவன்சன்

தனது ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ஜப்பான், சீனா, பர்மா, இலங்கை என உலகின் பல பகுதிகளுக்கும் சென்றவர், இந்தியாவிற்கும் வந்து இச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து கூறியுள்ளார். தமிழகத்திற்கும் வருகை புரிந்துள்ளார்.

டாக்டர் இயான் ஸ்டீவன்சன் ஆராய்ச்சி செய்துள்ள சம்பவங்களிலிருந்து ஒன்றைப் பார்ப்போம்.

இப்ராஹிமின் மறுபிறவி
லெபனான் நாட்டில் உள்ள கோர்னெல் என்னும் வசித்து வந்தான் இமத் இலவர் எனும் சிறுவன். அவனுக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே சம்பந்தமில்லாத பல பெயர்களை உச்சரிக்கத் தொடங்கினான். பெற்றோர்கள் குழந்தை ஏதோ வேடிக்கையாகப் பேசுகிறது என பேசாமல் இருந்து விட்டனர். ஆனால் அவன் வளர வளர அவனது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தன. ஜமீலா என்ற பெயரையும், மஹ்மூத் என்ற பெயரையும் அடிக்கடி உச்சரித்தான். ஒருமுறை தெருவில் ஒரு வயதான பெரியவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர் முற்பிறவியில் தனது வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர் என அடையாளம் கண்டு கொண்டு அவரைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தான். பின்னர் வலுக்கட்டாயமாக அவனது குடும்பத்தாரால் வீட்டிற்குத் தூக்கி வரப்பட்டான்.

வயது ஆக ஆக தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் அவன் சொல்ல ஆரம்பித்தான். தனது பெயர் இப்ராஹிம் என்றும் தான் வசித்த நகரத்தின் பெயர் க்ரீபீ என்றும் கூறியவன், 1949 ஆம் ஆண்டு, டி.பி.நோயால் தான் இறந்து விட்டதாகவும், தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்க உடனே தன் கிராமத்துக்குப் போக வேண்டும் என்றும் அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான்.

இந்தச் சம்பவங்கள் அவன் பெற்றோருக்கு மட்டுமல்லாது அவன் வசித்த கிராமத்துவாசிகளுக்கும் மிகுந்த வியப்பைத் தந்தது. தகவல், முற்பிறவி- மறுபிறவி பற்றி ஆய்வு செய்யும் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் கவனத்துக்குச் சென்றது. அவர் உடன் புறப்பட்டு கோர்னெல் வந்து சேர்ந்தார். சிறுவனுடன் பேசி அவன் கூறும் தகவல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.அவர் மேலும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது அந்த ஊருக்கு சுமார் 25 மைல் தொலைவில் ’க்ரீபீ’ என்ற கிராமம் இருப்பதை அறிந்து கொண்டார். பின் தனது ஆய்வைத் தொடர்வதற்காக சிறுவன் மற்றும் அவன் பெற்றோருடன் ’க்ரீபீ’ கிராமத்தை நோக்கிக் காரில் புறப்பட்டார். வழியிலேயே மிக அதிகமாக முற்பிறவியின் தாக்கத்திற்கு உட்பட்ட சிறுவன் இமத், தான் வசித்த வீடுபற்றி, கெர்மில் என்ற பெயர் கொண்ட தனது மனைவி பற்றி, தன் குழந்தைகள் பற்றி என ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் கூற ஆரம்பித்தான். கிராமத்தை அடைந்ததும் தன் வீட்டை சரியாக அடையாளம் காட்டியதுடன், வயதான தன் மனைவி மற்றும் குழந்தைகளையும் அடையாளம் கண்டு கொண்டான். தன்னுடைய புகைப்படத்தையும், தன்னுடைய சகோதரன் புகைப்படத்தையும் மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான்.

தன்னோடு முற்பிறவியில் ராணுவத்தில் பணியாற்றிய நண்பரைச் சந்தித்து பழைய அனுபவங்களைப் பற்றிப் பேசினான். அது மட்டுமல்லாமல் தன்னுடைய முற்பிறவி மாமா, நண்பன் மஹ்மூத், தனக்கு மிகவும் விருப்பமான, நெருக்கமான தொடர்பில் இருந்த விலைமாது ஜமீலா என அனைவரையும் அவனால் அடையாளம் கண்டு கொண்டு பேச முடிந்தது.

இவ்வாறு சிறுவன் இமத் தனது முற்பிறவி பற்றிக் கூறிய 57 கருத்துக்களில் 51 கருத்துக்கள் மிக மிகச் சரியாக இருந்தது என்றும், மீதி ஆறும் அவன் சிறுவன் என்பதால் அவனால் சரியாக விளக்கிச் சொல்ல முடியாமல் ஏற்பட்ட கருத்துப் பிழைகளே என்றும் கூறுகிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன். இரண்டு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் அது வரை சந்தித்ததில்லை, ஒருவரைப் பற்றி மற்றொருவர் கேள்விப்பட்டதுமில்லை. அப்படியிருக்க சிறுவன் இமத், இப்ராஹிமாகிய தனது முற்பிறவியைப் பற்றி விளக்கிக் கூறி, தெள்ளத் தெளிவாகத் தான் தான், அவனது மறுபிறவி என்பதை நிரூபித்திருக்கிறான் என்று தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் இயான் ஸ்டீவன்சன்.


இந்தியாவில் ஸ்டீவன்சன்

வெளிநாடுகளில் மட்டும் தான் என்பதல்ல; இந்தியாவிலும் பல்வேறு மறுபிறவிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முற்பிறவி-மறுபிறவிகள் பற்றி ஆராய்வதற்காக, இந்தியாவில், பரிதாபாத் நகரத்தில் Reincarnation Research Foundation என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் உள்ள National Institute of Mental Health & Neurosciences (NIMHANS) அமைப்பும் முற்பிறவி-மறுபிறவி உண்மைகள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. அது பற்றி விரிவான பல ஆய்வுகளை மேற் கொண்டிருக்கிறது. டாக்டர் இயான் ஸ்டீவன்சனும் இந்தியாவிற்கு வருகை தந்து பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து நிம்ஹான்ஸின் (NIMHANS) Clinical Psychology துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா அவர்களும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பின்னர் பார்ப்போம்.

மறுபிறவி அதிசயங்கள்

கல்பனா சாவ்லாவின் மறுபிறவி…?


கல்பனா சாவ்லா. விண்வெளி வீராங்கனையாக மலர்ந்து அந்த விண்ணிலேயே கருகிப் போனவர். இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர். அவர் விண்வெளி ஆய்விற்காகப் பயணம் மேற்கொண்ட கொலம்பியா விண்கப்பல் STS-87 தரையிறங்கும் போது பெரும் விபத்தைச் சந்தித்தது. இந்திய மனங்களில் பெரும் சோகம் சூழ்ந்தது. மண்ணில் பிறந்து மண்ணிலே தவழ்ந்த கல்பனா சாவ்லா 2003ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் விண்ணிலே மறைந்தார்.


கல்பனா சாவ்லா

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாடா எனும் கிராமத்தில் வாழும் ஏழு வயதுச் சிறுமியான உபாசனா, தான் தான் முற்பிறவியில் ”கல்பனா சாவ்லா” என்று அறிவித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். உபாசனா கல்பனா சாவ்லா விபத்தில் இறந்த சில மாதங்கள் கழித்து ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் உபாசனா பிறந்தார். சாதாரண குழந்தைகளைப் போலவே வளர்ந்த அவர், தனக்கு நான்கு வயதாகும் போது தனது முற்பிறவிகள் பற்றிக் கூற ஆரம்பித்தார். கொலம்பியா விண்கலம் பற்றி, அதில் தன்னுடன் பயணம் செய்த சக விஞ்ஞானிகள் குறித்தெல்லாம் அவள் பல தகவல்களைக் கூற, அதிகம் கல்வியறிவு இல்லாத அவள் பெற்றோர்களுக்கு அவள் சொன்னது எதுவுமே புரியவில்லை.




உபாசனா (கல்பனா சாவ்லாவின் மறுபிறவி என்று கூறப்படும் பெண்)

”உபாசனா குழந்தையாக இருக்கும் போதே எப்போதும் பறப்பது பற்றியே பேசிக் கொண்டிருப்பாள்; அவளுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய வீடு இருக்கிறது என்றும், அங்கு நிறைய பணம் இருக்கிறது என்றும் சொல்வாள். தான் ஒரு விமானத்தில் பயணம் செய்தபோது அது ஒரு பனிமலைச் சிகரத்தில் மோதி நொறுங்கி விழுந்து விட்டது என்றும் அதில் தான் இறந்து போய் விட்டதாகவும் சொல்வாள். குழந்தை ஏதோ உளறுகிறது என்று நாங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தாய் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போன போது அங்குள்ள ஒரு செய்தித்தாளில் இருந்த ஒரு போட்டோவைப் பார்த்து, அது தான் தான் என்று கூற ஆரம்பித்தாள். அக்கம் பக்கத்தினர் மூலம்தான் அது ‘கல்பனா சாவ்லா’ என்பதும், அந்தப் பெண் ஒரு விமான விபத்தில் இறந்து போய் விட்டாள் என்பதும் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் குழந்தை சொல்வது பொய்யில்லை, அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து கொண்டோம் என்கிறார் உபாசனாவின் தாய் ஞானேஸ்வரி.

தங்களுக்குக் கல்வியறிவு அதிகம் இல்லாததால் அக்கம் பக்கத்தினருடனான உரையாடல்கள் மூலம்தான் உபாசனா தனது முற்பிறவி பற்றிக் கூறுகிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்கிறார் தந்தை ராஜ்குமார்.

அதன் பின் உபாசனா தன் வீடு இதுவல்ல என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். தான் கர்நாலில் பிறந்ததாகவும் தாய் பெயர் ரேகா என்றும், தந்தை பெயர் பன்சாரி லால் சாவ்லா என்றும் கூறியவள், தான் உடனே அங்கு போக வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். விசாரித்ததில் அவள் கூறுவது அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்தது. (ஆனால் தாய் பெயர் ரேகா அல்ல. சன்ஜோக்டா. அதை மட்டும் அவளால் சரியாகச் சொல்ல முடியவில்லை). உபாசனாவிடம் தனியாகப் பல முறை உரையாடிய அவள் தாய் வழிப்பாட்டி குழந்தை நிச்சயமாகப் பொய் சொல்லவில்லை; அவள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை என்று தெரிவித்தாள்.

இந்த விவரங்கள் கல்பனா சாவ்லாவின் தந்தையான பன்சிலால் அவர்களுக்கும் தெரியவந்தது. ஆனால் அவர் இதனை நம்பாததுடன், இதெல்லாம் ஏமாற்று வேலை என்று கூறி உபாசனாவைச் சந்திக்க மறுத்து விட்டார். தாங்கள் ஒரு ஏமாற்றுக்காரர்களாகச் சித்திரிக்கப்படுவதை விரும்பாத உபாசனாவின் தந்தை ராஜ்குமார், அதுமுதல் மகளின் முற்பிறவி பற்றிய விஷயங்களை வெளியாருக்குக் கூறுவதை விட்டு விட்டார். உபாசனா உண்மையிலேயே கல்பனா சாவ்லாவின் மறுபிறவி தானா? விஞ்ஞானிகள் தான் முறையாக ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மரணம் – ஆவி – மறுபிறவி – 1



இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. அது புல், பூண்டு, புழு பூச்சியாக இருந்தாலும் சரி. மனிதனாக இருந்தாலும் சரி. ஆனால் ஒருவர் மரணமடையும்போது அவர் பருஉடல் மட்டுமே மரணமடைகின்றது. அவரது நுண்ணுடல் அல்லது ஆவி மரணமடைவது இல்லை. அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் பிறக்கிறது. இடைபட்ட காலத்தில் அதன் நிலைப்பாடு என்ன? அதன் உணர்வுகள் என்ன? அது எங்கே, என்னவாக இருந்தது என்பதுபற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக CONVERSATIONS WITH A SPIRIT என்னும் நூலிலும், RETURN FROM HEAVEN என்ற நூலிலும் ஆய்வாளர் DOLORES CANNON இறந்து போன ஆவிகளுடன் பேசி பல அதிசய சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.




எடித் ஃபையரின் ஆய்வு நூல்

அவரது ஆய்வின் படி, முற்பிறவிச் செயல்களும் வாசனைகளும் எண்ணங்களாக நமது மூளையில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. அந்த வாசனை உணர்வுகளோடுதான் நாம் பிறக்கிறோம். அந்த வாசனைகளை நம்மையும் அறியாமல் சிந்தனைகளாக, செயல்களாக உருப்பெற்று நல்ல வினைகளையோ அல்லது தீய வினைகளையோ உருவாக்குகின்றன என்பதுதான். அந்தாவது மனிதரின் மனம் கட்டுப்படுத்தப்பட்டு, சில நேரங்களில் அவனது உண்மையான விருப்பமின்றியே சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் இயங்குகிறது. மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளும், சமூக நம்பிக்கைகளும் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கின்றது. அவற்றிற்கேற்பவே அவன் வினையாற்றுகிறான். அந்த வினைகளினாலேயே அவனுக்கு ’கர்மா’ ஏற்படுகிறது. அதனால் தான் கீதை, ’பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்; பற்றற்று வாழ்க்கை நடத்து’ என்கிறது. பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளும் புதிதாக வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள் என்று வலியுறுத்துகின்றனர். ஆகவே ஒருவனின் மறுபிறவி என்பதில் அவனுடைய முந்தைய பிறவிகளின் நடத்தைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

ஒருவன் செய்யும் செயல்களின் விளைவுகள் இப்பிறவி தப்பினும் எப்படியாவது அவனை வந்தடையவே செய்கின்றன. டாக்டர் எடித் ஃபையர் குறிப்பிட்டிருக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.


டாக்டர் எடித் ஃபையர்

துரத்தும் பாம்புகள்

பாம்புகள் தன்னைக் கடிக்க வருவது போன்றும், துரத்துவது போன்றும் கனவுகள் வருவதாகவும், எப்போதும் பாம்புகளைப் பற்றிய நினைவே தனக்கு அதிகம் இருப்பதாகவும், அந்த அச்சத்தைப் போக்க வேண்டுமென்றும் கூறி ஒரு பெண்மணி மறுபிறவி ஆய்வாளர், உளவியலறிஞர் டாக்டர் எடித் ஃபையரைத் தொடர்பு கொண்டார். எடித் ஃபையர் அந்தப் பெண்ணை ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்த்தி, முற்பிறவிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டார்.

முற்பிறவியில் அந்தப் பெண் அரசரின் அவையில் ஒரு நடனக் காரியாக இருந்த விஷயமும், அப்போது ஒரு சமயம் விஷப் பாம்புகளை உடலில் சுற்றிக் கொண்டு ஆடும்போது அந்தப் பாம்பு கடித்து மரணமடைந்த விஷயமும் தெரிய வந்தது.

முற்பிறவியில் மூளையில் பதிந்த அந்த எண்ண அலைகளே மறுபிறவி எடுத்த போதும் விடாமல் தொடர்கிறது என்பதையும் அதனாலேயே இந்தப் பெண்ணிற்கு அது பற்றிய அச்சமும், குழப்பமும் ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்து கொண்ட ஃபையர் தகுந்த மனோசிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை குணப்படுத்தினார்.

அதன்பின்பு அந்தப் பெண்ணுக்கு அந்தப் பாதிப்புகள் தொடரவில்லை என்கிறார் எடித் ஃபையர்.

(தொடரும்)

மரணம் – ஆவி – மறுபிறவி – 3



இது டாக்டர் எடித் ஃபையர் தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கும் மற்றொரு சம்பவம்.
டாக்டர் ஃபையர்

உயரப் பயம்… உயிர்ப் பயம்…

உயரமான இடங்களைக் கண்டால் பயம், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதென்றால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறி எடித் ஃபைடை அணுகினார் ஒரு தொழிலதிபர். அது ஒரு வகையான ஃபோபியா என்று மருத்துவர்களால் கூறப்பட்டு வந்தாலும், அதற்கும் முற்பிறவிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் என ஆராய நினைத்தார் ஃபையர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஹிப்னாடிச உறக்கத்திற்கு ஆழ்த்தினார். அப்போது அவருக்கு அந்த உண்மை தெரிய வந்தது.

இந்தப் பிறவியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் அந்த மனிதர் முற்பிறவியில் ஒரு பணியாளாக இருந்திருக்கிறார். ஒருமுறை மாதா கோயிலின் ஓடுகளைச் செப்பனிட்டுப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஓடுகள் உடைந்து கீழே விழுந்து அவர் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சி அவரது ஆன்மாவில் நிரந்தரமாகப் பதிந்து மறுபிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. – இதை அறிந்த டாக்டர் ஃபையர் அந்த மனிதருக்குத் தகுந்த மனோசிகிச்சை அளித்து அவரது எண்ணங்களில் பதிவாகி இருந்த தேவையற்ற பயத்தைப் போக்கினார்.



ஆக இது போன்று நெருப்பைக் கண்டால் பயம், நீரைக் கண்டால் பயம், உயரமான இடங்களைக் கண்டால் பயம், மலைகளைக் கண்டால் பயம் என்றெல்லாம் பல ஃபோபியாக்கள் ஒரு சிலருக்கு இருந்தாலும், அதற்கு அடிப்படையாக நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்கிறார் டாக்டர் எடித் ஃபையர்.

இந்தப் பிறவியில் அதற்கான வாய்ப்புகள் இல்லாத போது முற்பிறவியின் தாக்கங்களே அவர்களுக்கு இந்நினைவுகளாகத் தொடர்ந்து துன்புறுத்துகின்றன என்பது அவரது முடிவு.

கீழ்கண்ட சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்த ஒன்று.

தபால் அதிகாரியின் மகன் கூறிய முற்பிறவி

பஜித்பூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஒரு தபால் அதிகாரியின் மூன்று வயது மகன் திடீரென ஒருநாள் தொடர்ந்து அழத்தொடங்கினான். தனது சொந்த ஊர் இதுவல்ல என்றும், தன் ஊர் சிட்டகாங்கில் உள்ள பஜில்பூர் என்றும், தனக்குத் திருமணமாகி மூன்று புதல்வர்களும், நான்கு புதல்விகளும் இருக்கின்றனர் என்றும் கூற ஆரம்பித்தான். தனது ஊருக்கு வக்ஸம் என்ற இரயில் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும் என்றும், தனது ஊருக்கு அருகே மேஹர் கலிபாரி என்ற இடம் உள்ளது. அங்கே தான் ஸ்ர்வானந்தர் என்ற மகான் முக்தியடைந்தார் என்றும் கூறினான்.

மேலும் அவன் அங்கே உள்ள ஓர் ஆலமரத்தின் அடியில் தான் பூஜை, பஜனை முதலியன நடைபெறும் என்றும், ஆனால் அங்கே வழிபடுவதற்காக தெய்வத்தின் சிலை ஏதும் இல்லை என்றும் தெரிவித்தான். அருகே உயரமான ஒரு பனைமரம் உள்ளது என்றும் கூறினான்.

தபால் அதிகாரி தன் ஊரை விட்டு வெளியே எங்கும் அதிகம் சென்றதில்லை. அதனால் மிகுந்த ஆச்சரியமுற்ற அவர், இதெல்லாம் உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்த போதுதான் குழந்தை சொல்வது அனைத்தும் உண்மை என்று தெரிய வந்தது. வெளியிடம் எங்கும் செல்லாத, எவ்வித உலக அனுபவமும் இல்லாத குழந்தை இவ்வளவு தெளிவாக உண்மையான விஷயங்களைக் கூறியதால், அக் குழந்தை பஜில்பூரில் வாழ்ந்து இறந்த மனிதரின் மறுபிறவியே என்று அவரும் மற்ற மக்களும் நம்பினர்.
எடித் ஃபையரின் ஆய்வு நூல்




(தொடரும்)

மரணம் – ஆவி – மறுபிறவி – 4



மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் பல புரியாத, விடை காண இயலாத சம்பவங்கள் பலவும் இருக்கின்றன. உதாரணமாக லுரன்சி வென்னம் என்னும் ஒரு வயதுக் குழந்தை, மேரி ரோப் என்பவர் இறந்த சில மாதங்களில் அவரைப் போலவே பேச, நடக்க, அங்க அசைவுகளைக் காண்பிக்க ஆரம்பித்தது. அச்சு அசலாக மேரி ரோப் சிறுவயதுக் குழந்தையாக இருந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அதன்படியே நடக்க ஆரம்பித்தது.




மேடம் மேரி

மேரி ரோப்பின் மறுபிறவி தான் இந்தக் குழந்தை என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், மேரி ரோப் உயிருடன் இருக்கும் போதே இந்தக் குழந்தை பிறந்து விட்டது. ஆகவே மேரி ரோப்பின் ஆன்மா இந்தக் குழந்தையின் உடலில் புகுந்து விட்டது, அதாவது அவரது ஆவி, லுரன்சி என்னும் இக் குழந்தையின் உடலில் புகுந்து கொண்டு விட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அப்படியானால் உண்மையான லுரன்சி வென்னத்தின் ஆன்மா அல்லது ஆவி என்ன ஆனது என்பதை ஆய்வாளர்களால் கண்டறிய இயலவில்லை.

மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் இவையெல்லாம் புரியாத புதிர்களாக உள்ளன.

மற்றொரு சம்பவத்தையும் பார்ப்போம்.




சிறுவன்

திபெத்தில் வாழ்ந்தவர் நைலேங் என்பவர். அவர் திடீரென நோயுற்றுக் காலமானார். ஆண்டுகள் சில கழிந்தன. புத்தமதத் துறவியாக – திபெத்தியர்களின் மௌன்காக (monk) ’சௌகுன் ராஜ் சுதாஜார்ன்’ என்னும் சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தான் தான் முற்பிறவியில் வாழ்ந்த நைலேங் என்று கூறினார். இதை இயான் ஸ்டீவன்சன் போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.




டாக்டர் இயான் ஸ்டீவன்சன்

ஆராய்ச்சியின் முடிவில் நைலேங் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே ’சௌகுன் ராஜ்’ பிறந்து விட்டது தெரிய வந்தது. ஒருவர் இறந்த பிறகு தான் அவர் மறுபிறவி எடுக்க முடியும், ஆனால் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவர் மறுபிறவி எடுத்திருப்பதாகக் கூறுவதை ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், ’சௌகுன் ராஜ் சொன்ன முற்பிறவி பற்றிய விஷயங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் டாக்டர் இயான் ஸ்டீவன்சன் இந்தச் சம்பவத்தை ‘புரியாத புதிர்’ என்றும் ’couldn’t find an explanation for the discrepancy’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் வாழ்ந்த/வாழும் பிரபல மனிதர்களின் முற்பிறவி/ மறுபிறவிகளைப் பற்றி ஆய்வு செய்து எழுதியிருக்கிறார் டாக்டர் வால்டர் செம்கிவ்.




டாக்டர் வால்டர் செம்கிவ்

அவரது Origin of the Soul: And the Purpose of Reincarnation மற்றும் Born Againஎன்ற நூலிலும் காணப்படும் சில சுவாரஸ்யமான தகவல்கள்…




செம்கிவ் எழுதிய மறுபிறவி ஆய்வு நூல்





பிரபலங்கள் முற்பிறவியில்…
பரக் ஒபாமா (அமெரிக்க அதிபர்) லைமென் ட்ரம்பல் (லிங்கன் காலத்தவர்)
வான் ஜோன்ஸ் (அமெரிக்கா) மகாத்மா காந்தி
அப்துல்கலாம் திப்புசுல்தான்
மேனகா காந்தி அன்னிபெசண்ட்
ஷாருக்கான் சாதனா போஸ் (நடிகை, பாடகி)
அமிதாப்பச்சன் எட்வர்ட் பூத் (அமெரிக்க நடிகர்)
ரேகா மேரி டெவ்லின் (அமெரிக்க நடிகை)
ஜெயா அமிதாப்பச்சன் மேரி மெக் விக்கர்ஸ் (அமெரிக்க நடிகை)
ஹைதர் அலி விக்ரம் சாராபாய்
ஜவஹர்லால் நேரு இரண்டாம் பகதூர்ஷா
பெனசிர் புட்டோ ஜவஹர்லால் நேரு





இந்தியப் பிரபலங்களின் முற்பிறவி/மறுபிறவி கூறும் நூல்

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 1

கிராமம் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் ஏன் சில அரசியல் தலைவர்களாலும் கூறப்படும் / நம்பப்படும் செய்தி, அவர் எனக்கு ஏவல் வைத்து விட்டார். அதனால்தான் எனக்கு ஆட்சியில் பிரச்னை ஏற்படுகிறது; மோரில் இடு மருந்து வைத்துக் கொடுத்ததால்தான் அந்த அரசியல்வாதியின் உடல் செயலிழந்து விட்டது; என் எதிரி எனக்கு ஏவல் வைத்து விட்டதால்தான் என் மகன் பைத்தியமாகி விட்டான்; மகள் ஓடிப் போய் விட்டாள்; எதிரிகள் சூனியம் வைத்து விட்டார்கள், அதனால்தான் என் நண்பருக்கு தொழில் நஷ்டமாகி விட்டது. – இது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருக்க முடியும். நாளிதழ்களிலும் கூட அது பற்றிய செய்திகள், சில இதழ்களில் இந்த மர்ம, மாந்த்ரீகம் பற்றிய விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. அது சரி, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதானா? இல்லை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க சிலர் செய்யும் ஏமாற்று வேலையா? அது பற்றிப் பார்ப்போம்.



சிலர், ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றச் சிலர் செய்யும் தந்திரம் என்பார்கள். அவர்களது கூற்று ஒருவிதத்தில் உண்மையும் கூட. ஆனால் அதற்காக ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று நாம் கூறி விட முடியாது.



சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.



இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில. ………….. சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.“ என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)



மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.



சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.



பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.



சில சம்பவங்களைப் பார்ப்போம்.



அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்… புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.




ஸ்ரீ அன்னை



பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.



ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.




ஸ்ரீ அரவிந்தர்



ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்” என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.



மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?



Every Action has an Equal and Opposite Reaction என்றார் நியூட்டன். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஒருவருக்கு நாம் தீமை செய்தால் அந்தத் தீவினை நம்மையும் வந்து பாதிக்கும். இதற்கு மேற்கண்ட சம்பவம் சரியான உதாரணம். இதைத் தான் வள்ளுவரும்,

” மறந்தும் பிறன் கேடு சூழற்க; சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு”



என்று குறிப்பிட்டிருக்கிறார்.





(தொடரும்)

ஏவல், பில்லி, சூனியம் உண்மையா, பொய்யா? – 2

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம். சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.

இதனை,

“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”

-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ சங்கரர்

சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையெல்லாம் பின்னால் வேறொரு பதிவில் மிக விரிவாகக் கூறுகிறேன்.

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.

வள்ளுவர்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி

தாழாது உஞற்றுபவர்

என்று குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.



மன உறுதி கொள்வோம்; மன்பதை வெல்வோம்.

மரணத்தின் பின்…. ???


மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். சரி அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதைச் சற்று பார்ப்போம்.
மனிதன் இறந்த பிறகு அவனது ஆன்மா மேலுலகம் செல்கிறது. அங்கு அது செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், ஆன்மாவின் பக்குவநிலைக்கேற்பவும் சூட்சும உலகங்களில் வசிக்கிறது. மறுபிறவி எடுத்து தங்கள் கர்மவினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஆன்மாக்கள், அதற்கான காலம் வரும் வரை காத்திருக்கிறது. ஆன்மாவின் தகுதிக்கேற்ப பல்வேறு வளர்ச்சிகளையும் அது பெறுகிறது. இயல்பிலேயே நல்லவர்களாக வாழ்ந்து மறைந்தவர்கள், மீண்டும் மறுபிறவி எடுத்து தங்கள் கர்மக் கணக்கைக் கழிக்க வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மேலும் நல்லவர்களாக அங்கு ஆகிறார்கள்.
அதுபோன்று தாங்கள் செய்த தீவினைகளுக்கு உண்மையாகவே அஞ்சி மனம் வருந்தும் ஆன்மாக்கள் நல்ல பக்குவத்தை அடைகின்றன. இந்தப் பக்குவமானது அவர்களது மறுபிறவிகளின் போதும் தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துகிறது. அதாவது மறுபிறவியில் இவ்வகை ஆன்மாக்கள் நற்சிந்தனையுடன், நேர்மையான வாழ்க்கை வாழ முனைகிறது. இவர்களின் வாழ்வில் சஞ்சித கர்மாவும், பிராரப்த கர்மாவும் செயலாற்றுகின்றன. இவர்கள் நல்ல மனப் பக்குவம் பெற்று தீவழிகளில் செல்லாததால் ஆகாம்ய கர்மாவினது பாதிப்புகள் அதிகம் நேர்வதில்லை. விளக்கமாகச் சொன்னால் இவர்கள் மனிதர்களின் முற்பிறவி-மறுபிறவிச் சுழற்சியில் அதன் அடுத்த கட்டத்திற்கு பரிணாம வளர்ச்சியுறுகிறார்கள் என்று சொல்லலாம்.
ஆக மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. சரி, அப்படியானால் யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் தோன்றுகிறதல்லவா? சாஸ்திரங்களிலும், கருட புராணம், கடோபநிஷத் போன்றவற்றிலும் கூறப்படும் மறுபிறவி, பற்றிய செய்திகளைப் பார்ப்போம்.
பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை.
சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவைன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.
 
தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும்.
பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை.
எல்லா ஆசைகளும் தீர்ந்தாலும் சில கர்ம எச்சங்களை மட்டும் கழிக்க இயலாமல் அதற்கேற்றவாறு உடல்நிலை, ஆயுள்நிலை இடம் தராது இறந்து போனவர்கள் மீண்டும் பூமியில் மறுபிறவி எடுக்கிறார்கள். அவர்கள் சில காலம் மனிதனாகவோ அல்லது மிருகங்களாகவோ (அதாவது செல்வந்தர் வீட்டு நாய்க்குட்டிகள் போல) வாழ்ந்து விட்டு, தங்களது கர்மக் கணக்குகளை நேர் செய்த பின் மரணிக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் மறுபிறவி என்பது ஏற்படாது.
இது போன்ற பல காரணங்கள் மறுபிறவி எடுப்பது பற்றி நமது சாஸ்திரங்களில் கூறப்ப்பட்டுள்ளன. இதில் முக்கியமான உண்மை என்னவென்றால் பிறவி எடுத்த அனைவரும், அதாவது நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம். அல்லது அதற்கு ஓராயிரம் பிறவிகள் எடுக்க வேண்டியும் வரலாம். அது அந்த ஆன்மாவின் பரிபக்குவத்தைப் பொறுத்தே நிகழ்கிறது எனலாம். விஞ்ஞானப் படிப் பார்த்தால் பிரபஞ்ச சக்தி என்ற பரம அணுவிலிருந்து பிரிந்து வந்த அணு என்னும் துகள் மீண்டும் அந்தப் பரம அணுவோடு ஒன்றிணைவதே முக்தி அல்லது வீடு பேறு எனப்படுகிறது.
உயிர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு பிறவியில் அந்த நிலையை எய்தத் தான் போகிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மஞ்சுவின் முற்பிறவி




உத்தரப் பிரதேசத்தில் உள்ள பசௌலி என்ற கிராமத்தில் 1969ம் ஆண்டில் பிறந்தவள் மஞ்சு சர்மா. மிகவும் ஏழைக் குடும்பம். அவளுக்கு மூன்று வயதான போது தன் முற்பிறவிகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். தன் ஊர் இதுவல்ல என்றும், அருகில் உள்ள சௌமுலா என்றும் கூறியவள், தன் தாய், தந்தையர் அங்கே உள்ளனர் என்று கூறி, அவர்களது பெயர் மற்றும் அடையாளங்களையும் கூறி அழ ஆரம்பித்தாள். தனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்றும், அவன் தன்மீது மிகவும் பாசமாக இருப்பான் என்றும் கூறியவள், தனக்கு 9 வயதாக இருக்கும் போது ஒருநாள் பள்ளி விட்டு வரும் வழியில் உள்ள கிணற்றிற்குச் சென்றதாகவும், விளையாட்டாக எட்டிப் பார்த்தவள் அதில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் கூறினாள். முதலில் இவற்றை பெற்றோர் நம்பவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து தெருவின் வழியாக ஒரு நபர் சென்ற போது, அவரைப் பார்த்த மஞ்சு, ’சித்தப்பா, சித்தப்பா’ என பின் தொடர்ந்து ஓடினாள். பெற்றோருக்கும், அந்த நபருக்கும் ஒரே அதிர்ச்சி.


கிணறு

பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் மஞ்சு கூறியது அனைத்தும் உண்மை என்றும், அந்த நபர் மஞ்சுவின் முற்பிறவித் தந்தையான லடாலி சரணின் சகோதரரான பாபுராம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மஞ்சுவின் முற்பிறவித் தாயார், சகோதரர் என பலரும் வந்து அவளைப் பார்த்து விசாரித்து அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் முற்பிறவியில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவள்தாம் என்றும் உறுதிப்படுத்தினர். பின் மஞ்சு சர்மாவின் தற்போதைய பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அவளைத் தங்களுடன் தங்கள் ஊரான சௌமுலாவிற்கு அழைத்துச் சென்றனர்.


மஞ்சு சர்மா

மஞ்சு அங்கு சென்றதும் முந்தைய பிறவியில் தான் வசித்த வீடு, தான் பயன்படுத்திய பொருட்கள், தனது பள்ளி ஆகியவற்றை அடையாளம் கண்டு நினைவு கூர்ந்தாள். முற்பிறவி நண்பர்களைக் கண்டு அவர்களை நலம் விசாரித்தாள். அத்துடன் முற்பிறவியில் தான் தவறி விழுந்து இறந்த, கைப்பிடிச் சுவர் இல்லாத கிணற்றையும் கண்ணீருடன் அடையாளம் காட்டினாள். அதன்பிறகுதான் மஞ்சு கூறுவது முற்றிலும் உண்மை என ஊர்மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதுபற்றிக் கேள்விப்பட்ட பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா மஞ்சுவைச் சந்தித்து உரையாடி, அவள் கூறுவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்.

தற்போது மஞ்சுவிற்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகளும் பிறந்து விட்டன. ஆனால் இன்றும் தனது முற்பிறவி உறவுகளை அவ்வப்போது சந்தித்த வண்ணம்தான் இருக்கிறார். ஆனால் வயதாகி விட்டதாலும், கால மாற்றத்தாலும் முற்பிறவி பற்றிய நினைவுகள் பலவும் மறந்து விட்டன என்றும், ஆனால் அந்தக் கிணற்றைத் தம்மால் இன்றும் மறக்க முடியவில்லை என்றும், இன்றும் எந்தக் கிணற்றைப் பார்த்தாலும் தனக்கு மிகவும் படபடப்பாக இருப்பதாகவும், அருகில் செல்வதைத் தவிர்த்து விடுவதாகவும் கூறுகிறார்.

முற்பிறவியில் தண்ணீர் மூலம் விபத்து ஏற்பட்டு இறந்தவர்கள் தண்ணீரைக் கண்டு அஞ்சுவதும், நெருப்பினால் இறந்தவர்கள் அதைக் கண்டு அஞ்சுவதுமாக அந்த அதிர்ச்சி நினைவுகள் ஒரு வித போபியாவாக மறுபிறவியிலும் தொடர்கிறது என்கின்றனர் மறுபிறவி ஆய்வாளர்கள். அதற்கு மஞ்சு சர்மா ஓர் உதாரணம்.

மகனாய்ப் பிறந்த மாமனார்


1949 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் நடந்த சம்பவம் இது. அந்தக் குடும்பத்தின் வயதான மனிதர் ஜார்ஜ். அறுபது வயதைக் கடந்த அவர் அந்தக் குடும்பத்து மனிதர்கள் மீது குறிப்பாக தனது மகன், மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். ’நான் இறந்தாலும் இங்கேயே மீண்டும் குழந்தையாகப் பிறப்பேன்’ இது ஜார்ஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் வாசகம்.
இயான் ஸ்டீவன்சன் எழுதிய நூல்
ஜார்ஜ் எப்போதும் தங்கச் செயின் பூட்டிய ஒரு கடிகாரத்தை விரும்பி அணிவார். ஒருநாள் மீன் பிடிப்பதற்காகச் செல்ல முற்பட்ட ஜார்ஜ் அதனை தனது மகனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு கடலுக்குள் சென்றார். சென்றவர் சென்றவர் தான், அவர் படகையும் காணவில்லை. ஆளும் கிடைக்கவில்லை. நாட்கள், மாதங்கள் கடந்தன. அவரைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் விபத்தில் இறந்து போயிருப்பார் என நினைத்து குடும்பத்தினர் மனதைத் தேற்றிக் கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்தது. மூத்த மகனுக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அப்படியே ஜார்ஜின் சாயலில், அவருடைய உடல் அமைப்புடன், அவருக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குமோ அந்த அமைப்புடன் பிறந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அது வளர வளர, பெற்றோர்களை அம்மா, அப்பா என்று அழைப்பதற்கு பதிலாக மருமகளே, மகனே என்றும் அழைக்க ஆரம்பித்தது.
ஒருமுறை மூத்த மகன் தனது தந்தையின் நினைவாக, அவர் கொடுத்த தங்க கடிகாரத்தை அணிந்து கொள்ள முற்பட்ட போது ‘அது என் வாட்ச், என் வாட்ச்’  எனக்கு வேண்டும் என்று சத்தமிட்டு அழுதது குழந்தை. மேலும் சிறுவயதிலேயே மீன் பிடி படகுகள் பற்றி, படகுத் துறை பற்றி தௌ;ளத் தெளிவாகக் கூற ஆரம்பித்தது. இதில் விசே‘ம் என்னவென்றால் மீன்பிடி படகுத் துறைப் பக்கமே அந்தக் குழந்தை போனதில்லை என்பதுதான்.  அதுமட்டுமல்லாமல் ஜார்ஜிற்கு எதில் எதிலெல்லாம் ஆர்வம் மிகுந்திருந்ததோ அதிலெல்லாம் சிறுவனும் வளர வளர ஆர்வம் மிகுந்தவனாக இருந்தான்.
டாக்டர் இயான் ஸ்டீவன்சன்
அவனுடைய குறிப்புகளையும், ஜார்ஜின் வாழ்க்கை முறையையும் பற்றி ஆராய்ந்த ஸ்டீவன்சன் ஜார்ஜின் மறுபிறவியே அந்தச் சிறுவன் என்பதும் குடும்பத்து உறுப்பினர்கள் மீது கொண்ட அன்பால் அவர் மீண்டும் வந்து அவர்களிடையே பிறந்திருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தினார்.

ஈ.எஸ்.பி. உண்மையா? – 1


அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என்றெல்லாம் அழைக்கப்படும் E.S.P உலகெங்கிலுமுள்ள மனிதர்கள் பலருக்கும் வியப்பைத் தரும் ஒன்று. சரி,  E.S.P (Extra Sensory Perception) என்பது உண்மைதானா? இல்லை, மனிதர்களின் ஆதீத கற்பனைகளின் விளைவா?
 பின்னர் வருவதை, அல்லது நடக்கப் போகும் ஒன்றை முன் கூட்டியே அறிவதுதான் ஈ.எஸ்.பி. எனப்படுகிறது. பொதுவாக, ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் எல்லா மனிதருக்குமே ஓரளவு இருக்கிறது. ஆனால் பலரும் அந்த ஆற்றலின் மீது கவனம் செலுத்துவதில்லை. அல்லது அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளுவதில்லை. அதனால் பலரும் அது பற்றிய உண்மைகளை அறியாமல் உள்ளனர். உதாரணமாக திடீரென நாம் நெருங்கிய நண்பர் ஒருவரைப் பற்றி அடிக்கடி நினைப்போம். அவரைப் பார்க்க வேண்டுமென நினைப்போம். திடீரென அவர் கண் முன்னே வந்து நிற்பார். அல்லது அவரைப் பற்றிய செய்தி நமக்கு வந்து சேரும். அல்லது போன் வரலாம். இதுதான் ஈ.எஸ்.பி. என்பதன் ஒருவித எளிமையான விளக்கம். இந்த ஈ.எஸ்.பியில் பல வகைகள் உள்ளன.
 பிறருடைய எண்ணங்களை, அவர்கள் மனதில் உள்ள தகவல்களைப் படிக்கும் ஆற்றல்  டெலிபதி (Telepathy) எனப்படுகிறது.
 எதிர்காலத்தை அவதானித்து, மிகச் சரியாக அதை முன்கூட்டியே கூற முடிவதற்கு –  Precognition என்று பெயர். 
 இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேறு ஒரு இடத்தில் நடக்கும் விஷயங்களை சரியாகக் கணித்துக் கூறுவதற்கு – Clairvoyance  என்று பெயர்.
 ஒரு நபரது கடந்த காலத்தை, சம்பவங்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தது போல் மிகத் துல்லியமாகக் கூறுவதற்கு Retro cognition என்று பெயர்.
 ஒரு நபருக்குச் சொந்தமான பொருளை தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் உடைமைப் பொருள் ஒன்றைக் கொண்டு அந்த நபர் பற்றி, அவர் இருக்கும் இடம், தன்மை, அவரது செயல்பாடுகள் பற்றிக் கூறும் திறனுக்கு Psychometric என்று பெயர்.
 இதில் முக்கியமான விஷயம் ஈ.எஸ்.பி என்பது அமானுஷ்ய ஆற்றலோ அல்லது ஆவிகள் போன்றவற்றின் உதவியால் செயல்படுத்தப்படுவதோ இல்லை. முழுக்க முழுக்க மூளை மற்றும் மனத்தில் செயல்பாடுகளால் ஏற்படும் அதீத திறனே ஈ.எஸ்.பி. அதே சமயம் விஞ்ஞானிகளால் இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் ஒரு சிலருக்கு மட்டும் இந்த ஆற்றல்கள் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை. இதை அவர்கள் நம்பினாலும் விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Para-Psychology மற்றும் Para Normal என்ற வகையில் இதனை உள்ளடக்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
 பண்டைய புராணங்களில் ஈ.எஸ்.பி பற்றிய பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. மகாபாரதத்தில், குருஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில், அரண்மனையில் இருந்து கொண்டே, பார்வையற்ற மன்னன் திருதராஷ்டிரனுக்கு அந்தப் போர் களத்தில் நடக்கும் காட்சிகளை சஞ்சயன் விவரித்தது Clairvoyance  எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலைக் கொண்டுதான்.
 ஆதிசங்கரர் சன்யாசம் ஏற்கும் தறுவாயில் அன்னை ஆர்யாம்பாள், தனது அந்திமக்காலத்தில் அவர் அருகில் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள், சங்கரரும் அதற்குச் சம்மதிக்க, பல ஆண்டுகள் கழித்து ஆர்யாம்பாள் நோய் வாய்ப்பட்ட போது மகன் சங்கரரை நினைக்க, உடனே பல மைல் தொலைவில் தவம் செய்து கொண்டிருந்த போதும் சங்கரர் அன்னையின் அழைப்பை உணர்ந்து, இறுதித் தறுவாயில் உடன் இருப்பதற்காக விரைந்து வந்தார். இந்தத் தகவல் பரிமாற்றம் தான் ’டெலிபதி’ எனப்படுகிறது.
 நாஸ்ட்ரடாமஸ் எதிர்காலத்த்தில் இந்த சமயத்தில், இன்னின்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை கணித்துக் கூறியதும் ஒரு விதத்தில் Precognition எனப்படும் இந்த ஈ.எஸ்.பி. ஆற்றலின் உதவியோடுதான். ஒரு சில ஜோதிடர்கள் அல்லது ஆரூடம் சொல்பவர்கள், தங்களைக் காண வரும் நபரின் கடந்த காலத்தை மிகத் துல்லியமாகவும், வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தெளிவாகவும் கூறுவதுRetrocognition என்ற ஈ.எஸ்.பி. ஆற்றலால் தான்.
 ஒருமுறை பகவான் ரமணரை கேரளாவின் புகழ் பெற்ற நாராயண குரு சந்திக்க வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர். வெகு நேரம் ஒருவரையொருவர் பார்த்தபடி இருந்தனர். ஆனால் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பின் இறுதியாக “அங்ஙனே ஆவட்டே…” என்று கூறி நாராயண குரு விடை பெற்றார். ரமணரும் தலைசயைத்தார். அதன் பின்னர்தான் பக்தர்களுக்கு அவர்கள் இருவரும் பேசாமலே பேசிக் கொண்டது – தங்கள் எண்ணங்கள் மூலம் தகவல் பரிமாறிக் கொண்டது – புரிந்தது. இதைத் தான் ஆன்மப் பரிமாற்றம் என்பர். இது கூட ஒருவிதத்தில் ஈ.எஸ்.யைச் சேர்ந்ததுதான். இதே போன்ற சம்பவங்கள் சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சிப் பெரியவர், யோகி ராம்சுரத்குமார், மாயம்மா என பல ஞானிகளது வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
 உலகெங்கிலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் மிக்கவர் பலர் உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் முன் அவர்கள் தங்கள் ஈ.எஸ்.பி ஆற்றலை நிரூபித்தும் காட்டியுள்ளனர். தமிழகத்திலும் ஈ.எஸ்.பி. ஆற்றல்கள் உள்ள பலர் இருந்திருக்கின்றனர். இன்னமும் இருக்கின்றனர்
 (தொடரும்)