Sunday, March 10, 2013

ரசவாதம் – 2


வள்ளலாரின் வாழ்க்கைச் சம்பவம் மூலம் ’ரசவாதம்’ என்பது எல்லோருக்குமானதல்ல. தங்கத்தின் மீதான ஆசை ஒழித்தவருக்கே கை வரும் என்பது புலனாகிறது.
திருமந்திரத்தில் திருமூலரும்,
“செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் சிரீயும் கிரீயுமெனச்
செம்பு பொன்னான திருவம் பலமே”     
என்கிறார்
இந்தியாவில் மட்டுமல்ல; பழங்காலத்தில் கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளில் இவ்வகை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றிக் கொண்டுள்ளனர் என்பது பழங்கால நூல் குறிப்புக்களிலிருந்து தெரிய வருகிறது. 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளை வர வழைத்து, அவர்களை சோதனைகள் செய்ய வைத்து, அவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்து கௌரவித்திருக்கிறார்.
ரசவாதம் என்பது சாதாரண உலோகங்களை மதிப்புமிக்க தங்கமாக மாற்றச்செய்கின்ற ஒரு முயற்சி. ஆனால் அது பல்வேறு ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதால் உலகெங்கும் அது வெளிப்படையாக நிகழவில்லை.
விஞ்ஞானிகளும் எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களின் மூலக் கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால் இரும்பை அந்த முறையில் தங்கமாக மாற்றுதல் சாத்தியமில்லை என்கின்றனர். ஆனால் பாதரசம், காரீயம்,  பிலட்டினம்,  வெள்ளி ஆகியவற்றின் அணுத் தொகுப்பை, மூலக்கூறு அணுவை, அணுச்  சிதைவு மூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம் என்ற ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் அவை சாத்தியமில்லை. அவ்வாறு தங்கம் செய்வதற்கு பல ஆண்டுகால மனித உழைப்பு விரயமாவதுடன், பலகோடி டாலர்கள் செலவிட வேண்டிவரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 அக்காலத்தில் பாதரசம் இந்தச் செயல்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ‘ரசவாதம்’ என்று அழைத்தனர். நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவற்றை லிங்க உருவாக்கி வழிபட்டனர். பல ஆலயங்களிலும் மக்கள் வழிபாட்டிற்காக ஸ்தாபித்தனர்.
இரும்பை முதலில் செம்பாக மாற்றுதல். பின்னர் செம்பை தங்கமாக மாற்றுதல் என்று இருகூறுகளை உடையதாக ரசவாதக் கலைப் பயிற்சிகள் அக்காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
வெள்ளியை தங்கமாக மாற்றும் முறைகளையும் ஆய்வு செய்திருந்தனர். ஆனால் அதற்கான வழிமுறைகளை அவர்கள் ரகசியமாகவே வைத்திருந்தனர். சித்தர்களின் பழங்கால ஓலைச்சுவடிகளிலும், பழங்கால வேதங்களிலும் ரசவாதம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இந்த ஆற்றல்கள் பெற்ற சித்தர்களில் பல வகையான பயிற்சி முறைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களில் சிலர் செம்பைப் பொன்னாக்கினர் .சிலர் பாதரசத்தையும், வேறு சிலர் காரீயத்தையும் பொன்னாக்கினர். சிலர் மூலிகைச் சாறுகளையும் பயன்படுத்தினர். வேறு சிலரோ மந்திரங்களைப் பயன்படுத்தினர். 
இந்த ரகசியமான ரசவாத ஆய்வுகள் இன்னமும் ரகசியமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, என்றாவது ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல நூறு ஆண்டுகளாக.

No comments:

Post a Comment